Category Archives: thamizh

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 56 – 60

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 51 – 55

பாசுரம் 56

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்னபிறகு, அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார்.

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா

யதிராஜரே! தேவரீருடைய அபிமானமே (கருணையே) இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் (ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது). அடியேன் மனத் தெளிவோடே இருக்கும்படிச் செய்த தேவரீர், ஐயோ! வேதனைகளால் அடியேனைத் துன்புறுத்தாமல் ஸாமர்த்யமாக தேவரீர் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

பாசுரம் 57

எம்பெருமானார் “எந்த உறவைக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்” என்பதாகக் கொண்டு “திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஆச்ரயித்த காரணத்தால் அடியேனுடைய அபராதங்களைப் பாராமல் ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய புன்சொற்களையும் கேட்டருள வேண்டும்” என்கிறார்.

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து

யதிராஜரே! ஆசார்யர்களால் கொண்டாடப்படும் திருவாய்மொழிப் பிள்ளையுடைய வாஸனை பொருந்திய திருவடித் தாமரைகளைச் சரணடைந்த அடியவன் என்கிற அன்பினாலே அடியேனை ஏற்றுக்கொண்ட தேவரீர் அடியேனுடைய அல்ப வார்த்தைகளை கோபப்படாமல் கேட்டருள வேண்டும்.

பாசுரம் 58

“திருவாய்மொழிப் பிள்ளையுடைய திருவடிகளைப் பற்றியவன் என்பது மட்டுமோ? அவரிடத்திலே ஞானத்தைப் பெற்ற அடியேனுக்கு தேவரீரிடத்தில் ஒரு ஸம்பந்தம் இல்லையோ?” என்கிறார்.

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையுடைய நிர்ஹேதுக க்ருபையாலே தேவரீர் திருவடிகளில் அடியேனுக்கு இருக்கும் எல்லாவிதமான உறவுகளையும் உணர்த்தியபின் இப்படிப்பட்ட இந்த ஆத்மாவுக்கு திருமந்த்ரத்தில் காட்டப்படும் ஒன்பது விதமான உறவுகளும் தேவரீரென்றே அடியேனுடைய மனது நிலை நில்லாமல் இருக்குமோ?

பாசுரம் 59

“இப்படி தேவரீரிடத்திலே அன்பு பூண்ட அடியேனை திருவரங்கநாதனான பெரிய பெருமாள் பரமபதத்துக்கு அழைத்துச் செல்லப்போவது எந்நாளோ?” என்கிறார்.

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையும் தாயுமான திருவரங்கநாதனான பெரிய பெருமாள் அழகு நிறைந்த பெரிய திருவடியின் மேல் எழுந்தருளி அழகான தன் திருமுக மண்டலத்தைக் காட்டி அர்ச்சிராதி கதியிலே கொண்டு போக நினைத்து அடியேனுடைய இந்தத் தாழ்ந்ததான உடம்பைப் போக்கியருளுவது எந்நாளோ? தேவரீர் அத்தை ஆராய்ந்து அருளிச்செய்ய வேண்டும்.

பாசுரம் 60

இறுதியில், எம்பெருமானாருடன் தமக்கு இருக்கும் நெருக்கமான உறவு முறையாலே எம்பெருமானாருக்குக் கிடைத்த பேறு தமக்கும் கிடைக்கும் என்பதைத் தன் நெஞ்சுக்கு உணர்த்தி மகிழ்கிறார்.

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்

நெஞ்சே! பெரிய பெருமாள் “இந்தக் கோயிலிலே (திருவரங்கம்) நீர் ஸுகமாக இரும்” என்று அடியேனுடைய தந்தையான யதிராஜருக்கு கொடுத்தருளின வரத்தை ஆராய்ந்து பார்த்தால் அது நம்மதன்றோ? அது எப்படி என்றால் நல்ல தந்தையின் இயற்கையான சொத்துக்கள் தந்தை வழி உறவு என்ற வழியாலே புத்ரனுக்காகத் தானே இருப்பது? ஆகையால் நம் ப்ராப்திக்கு நாம் முயல வேண்டாம், எம்பெருமானார் க்ருபையால் தானே கிடைக்கும் என்று கருத்து.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 46 – 50

பாசுரம் 51

ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே

யதிராஜரே! எல்லாரையும் ஆளும் எம்பெருமான் எப்படி எப்பொழுதும் இருக்கிறானோ அதே போல அவனாலே ஆளப்படும் ஆத்மாக்களும் எப்பொழுதும் இருக்கிறார்கள். இப்படி அநாதி காலம் தொடங்கி இன்று வரை, புண்ய பாப ரூபமான கர்மங்களால் வீணாகவே கழிந்தது என்று இந்த இழவையும் நினைக்காமல் இருந்த அடியேனுடைய மனது தேவரீர் அருளிய பின்பு இதிலே இரவும் பகலும் நின்று பரிதபிக்கும் (மிகவும் அனுதாபப்படும்).

பாசுரம் 52

தன்னுடைய நிலையை நினைத்து அனுதாபப்படவே எம்பெருமானாருக்காகப் பெரிய பெருமாள் கருட வாஹனத்தில் எழுந்தருளி வந்து கொடுக்கும் பேற்றின் பெருமையை நினைக்கிறார்.

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து

பொன்மயமான மேரு மலையின் மேலே படிந்திருக்கிற கார் மேகம் போலே வினதையின் பிள்ளையான பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு அழகு நிறைந்தவரான பெரிய பெருமாள் யதிராஜருக்காக அடியேனுடைய சரீரம் கீழே விழும்போது அடியேன் இருந்த இடத்தே வந்து மகிழ்ச்சியோடே அடியேன் முன்னே நிற்பார்.

பாசுரம் 53

இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தில் துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது என்பதால் விரைவில் தேவரீர் அடியேனை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிறார்.

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே வல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே

அடியேனுக்கு நன்மை வேண்டும் என்கிற ஹித புத்தியாலே பெரிய பெருமாள் அடியேனைத் துன்பப்படும்படி செய்கிறான் என்பதை அறிந்திருந்தும், அவ்வவ காலங்களில் ஏற்படும் வேதனையின் மிகுதியால் துடித்து, அதை வெளிப்படுத்தும் வகையில் “ஆ! ஓ!” என்ற ஓசைகளை எழுப்பும் இந்தப் பாவ உடம்போடே பல துன்பங்களை அனுபவித்து இந்த ஸம்ஸாரத்தில் இருக்க முடியுமோ? தேஹத்தின் மதத்தாலே, வலிமை பொருந்திய கர்மத்தின் வழியே திரிந்த மஹாபாபியான அடியேனை தேவரீருக்கு அடிமையாக்கிக்கொண்டு அருளின நன்மையைச் செய்யும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கிற யதிராஜரே! இனி, விரைவில் அடியேனை இந்த ஸம்ஸாரத்திலிருந்து எடுத்து பரமபதத்தில் சேர்த்தருள வேண்டும்,

பாசுரம் 54

இப்படிக் கேட்டவுடன் எம்பெருமானார் அதை செய்து தருவதாக நினைத்திருக்க, “கால தாமதம் பண்ணாமல் உடனே அடியேனைப் பரமபதத்தில் ஏற்றியருள வேண்டும்” என்கிறார்.

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!

நமக்குப் பிடித்ததைச் செய்யும் தாயும், நன்மையைச் செய்யும் தந்தையும், மற்றும் உள்ள உறவினர்களும் ஆகி அடியேனை ரக்ஷித்தருளுகிற ஸ்வாமீ! அடியேனுடைய விருப்பத்தை இரவு பகல் என்றில்லாமல் ஒரே நிலையில் சிந்திக்கிற யதிராஜராகிய வள்ளலே! தேவரீருக்கு அடிமைப் பட்டும் இன்னம் எத்தனை காலம் இந்த உடம்பில் இருந்து துன்பப்படுவேன்! ஐயோ! அடியேனை இந்த உடம்பிலிருந்து விடுவித்து தேவரீர் எப்பொழுது பரமபதத்திலே ஏற்றியருளப் போகிறீர்?

பாசுரம் 55

எம்பெருமானார் க்ருபையால் தனக்குக் கிடைத்த நன்மைகளை நன்றியுணர்வுடன் உரைக்கிறார்.

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே

திருவரங்கம் பெரிய கோயிலில் பள்ளிகொண்டருளும் பெரிய பெருமாளின் நிர்ஹேதுக க்ருபைக்கு (காரணமில்லாத அருளுக்கு) விஷயமானோம். நம் ஸம்ப்ரதாயத்துக்கு வேர்பற்றான திருவரங்கம் திருப்பதியே நம் வசிக்கும் இடமாகப் பெற்றோம். நம்மாழ்வாருடைய திவ்யப்ரபந்தங்களே நமக்கு எப்பொழுதும் அனுபவிக்கும் உணவாகப் பெற்றோம். மதுரகவி ஆழ்வாரின் “தேவு மற்றறியேன்” வார்த்தைகளின் படியே வடுகநம்பியைப் போலே எம்பெருமானாரே எல்லாம் என்கிற நிலையைப் பெற்றோம். நம்முடைய பூர்வாசார்யர்களின் திவ்யஸூக்திகளான வ்யாக்யானங்கள், ஸ்தோத்ரங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் ஆகியவற்றையே எப்பொழுதும் நினைக்கப் பெற்றோம். அவையே நமக்கு எப்பொழுதும் பொழுது போக்காக அமையப் பெற்றோம். இதற்குப் பிறகு மனது வேறெதிலும் புகாமல் இருக்கப் பெற்றோம். இதற்கெல்லாம் மேலே மற்றவர்களுடைய பெருமையைக் கண்டால் அதற்காகப் பொறாமைப் படும் குணம் இல்லாமல் ஆகப் பெற்றோம். இதென்ன ஆச்சர்யம்!

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 46 – 50

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 41 – 45

பாசுரம் 46

கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்

நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்தைப் பெற்றவர் ஆசார்யராக எழுந்தருளியிருந்து கொடுவினைகளை உடைய நம்மைத் தேடி வந்து நாம் உஜ்ஜீவனத்தைப் பெறும்படி நம்மை ஏற்றுக்கொண்டு ஒப்பற்றதான ஞானத்தைத் தாம் அளித்தருளிய செல்வத்தாலன்றோ நம் யதிராஜருக்கு அடிமையானோம்?

பாசுரம் 47

“நாராயண” என்ற திருநாமத்துக்கு ஸமமான வைபவம் கொண்ட “ராமானுஜ” என்ற திருநாமத்தின் வைபவத்தை எதிர்மறையான பொருள் கொண்டு விளக்குகிறார்.

இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?

ராமானுஜர் விஷயத்தில் “நம:” என்று இரவும் பகலும் நினைத்து இராத மனுஷ்யர்களுடைய இருப்பிடத்தில் க்ஷண காலமும் வாழாத ஆழ்வான் போன்ற பெரியோர்களுக்கு எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி அவற்றைச் செய்யாமல் இருக்கிற அறிவற்ற மனுஷ்யர்களை எப்படி மனுஷ்யர்களாக எண்ணுவது?

பாசுரம் 48

தம்முடைய வாக்கு, மனம், காயம் ஆகிய மூன்று கரணங்களையும் இப்படி இராமானுசனடியார்கள் விஷயத்தில் பெரிய பெருமாள் ஆக்கியருளினபடியை நினைத்து மகிழ்கிறார்.

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே

கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் துன்பப்படாதபடி உலகத்தை ரக்ஷித்தவரான எம்பெருமானாருடைய திருவடிகளை அடையாதவர்களை அடியேனுடைய நெஞ்சானது நினைக்காது; நாக்கானது கொண்டாடாது; தலையானது வணங்காது; கண்களானவை இவை எதையும் காணாது; இப்படி இருக்கும்படி இக்கரணங்களை நமக்களித்த ஸ்ரீரங்கராஜனான பெரிய பெருமாள் நமக்குச் செய்த நன்மையே.

பாசுரம் 49

ஸம்ஸாரிகளுடைய துன்பத்தைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு மோக்ஷத்துக்கு உபாயமாக எம்பெருமானாரைச் சரணடைவதைக் காட்டுகிறார்.

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே

நான்கு விதமான நிலங்களை உடைய பூமியில் உள்ளவர்களே! அனுபவித்துத் தீர்க்க அழியாத ஸம்ஸாரம் என்கிற நரகத்திலே அழுந்த வேண்டாம் என்று இருப்பீர்களாகில் அடியேனுக்குத் தந்தையான யதிராஜரைச் சரணடையுங்கோள்! எல்லாக் காலத்திலும் அவர் விஷயமான இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தானம் பண்ணுங்கோள்; அவர் திருவடிகளில் அன்புடன் இருப்பவர்களுடன் மனோதுக்கங்களெல்லாம் தீரும்படி பொருந்தியிருங்கோள்; இப்படிச் செய்தால் மோக்ஷமானது உறுதியாகக் கிடைக்கும்,

பாசுரம் 50

அவர்கள் அப்படியே செய்கிறோம் என்று ஆறியிருக்க மீண்டும் அவர்களைக் குறித்து “இப்படி ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள்; அவர் திருநாமத்தை நினைக்க மிக அரிதான பலம் ஸித்திக்கும்” என்கிறார்.

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே

திருநாமத்தை சொல்லுவதற்குப் பொருத்தமான காலத்தை வீணாகப் போக்கி, அஜ்ஞானத்தால் இந்த ஸம்ஸாரத்தில் உழல்கின்ற பாபத்தை உடையவர்களே! எல்லாக் காலத்திலும் ஒரு நிலையில் நின்று தவம் செய்தவர்களுக்கும் அடைய முடியாத பரமபதத்திலே நித்ய ஸம்ஸாரிகளான உங்களைக் கொண்டு வைப்பார் எம்பெருமானார். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது “யதிராஜரே” என்று சிந்திப்பது மட்டுமே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 41 – 45

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 36 – 40

பாசுரம் 41

எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார்.

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி

யதிராஜரே! அடியேனைப் போலே தவறு செய்பவர்கள் இந்த உலகம் எங்கும் தேடினால் கிடைப்பார்களோ? தேவரீரைப்போலே மற்றவர் தவறுகளைப் பொறுத்துக்கொள்பவர் உபய விபூதியிலும் உண்டோ? எல்லா உலகங்களும் உஜ்ஜீவித்து வாழ்வதற்கு அவதரித்தருளின வணங்கத்தகுந்த மஹாமுனிவரே! சபலானாயிருக்கும் அடியேனுக்குக் கருணையைக் காட்ட வேண்டும்.

பாசுரம் 42

எம்பெருமானார் இவருடைய தன்மைகளைக் கண்டு இவருக்குப் பேற்றை அளிப்பதாக நினைத்து இவரை ஆசையோடே கடாக்ஷிக்க அதைக் கண்டு இவ்வுலகில் தான் படும் துன்பங்களை அறிவித்துத் தனக்கு விரைவில் பேறு வேண்டும் என்கிறார்.

ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?

யதிராஜரே! ஐம்புலன்கள் என்னை ஆக்ரமித்துத் துன்புறுத்தும்போது தேவரீரின் அடியவனான நான் தேவரீருடைய திருவடிகளை நினைத்து “ராமானுசரே!” என்று ஓலமிட்டால் அதற்குப் பிறகு அவை என்னைத் துன்புறுத்தாமல் க்ருபை செய்து அருள வேண்டும்! தேவரீரைத் தவிர அடியேனுக்கு வேறு ரக்ஷகர் உண்டொ?

பாசுரம் 43

எம்பெருமானார் கருணை காட்டவில்லை என்று நினைத்து என்ன பயன், பரமபதத்தில் ஆசையும் இவ்வுலகில் வெறுப்பும் இருந்தால் தானே அவர் அதைத் தந்தருள்வார். நமக்கு அவை இல்லாமையாலே கிடைக்கவில்லை போலும் என்று ஆசையைக் கைவிடுகிறார்.

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து

இவ்வுலகில் பொருந்தாமல் இருப்பதற்கான வெறுப்பு கொஞ்சமும் இல்லை; அடைய வேண்டிய பரமபதத்தில் செல்ல ஆசையுமில்லை. இப்படிப்பட்ட நமக்குத் தந்தையான யதிராஜர் ஒப்பில்லாத வைபவத்தையுடைய பரமபதத்தை எப்படி மகிழ்ந்து அளிப்பார்?

பாசுரம் 44

தன்னிலையை யோஜித்த பிறகு, உலகத்தவர்களைப் பார்க்க, அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாக இருக்க, இவர்கள் பாபத்தினாலேயே இப்படி இருக்கிறார்கள் என்று நொந்துகொள்கிறார்.

மாகாந்த நாரணனார் வைகும் வகையறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்

லக்ஷ்மீ வல்லபனான ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களையும் வ்யாபித்திருக்கும் என்பதை அறிந்தோர்க்குத் தனிமையும் இல்லை இருட்டும் இல்லை; மோஹத்துக்கு வசப்பட்டிருப்பவர்கள் இவ்விடம் தனிமையாக உள்ளது, இவ்விடம் இருட்டாக இருக்கிறது என்று கொண்டு, அறிவிலிகளாக இருந்து கொண்டு, பயம் இல்லாமல் பாபக்கூட்டங்களைச் செய்வார்கள்.

பாசுரம் 45

தம் நெஞ்சைக் குறித்து “அஜ்ஞரான நாமும் ஆசார்ய ஸம்பந்தத்தினாலே அன்றோ நம் உஜ்ஜீவனத்தைப் பெற்றது; ஆகையால் எப்பொழுதும் அதையே சிந்தித்திரு” என்று அருளிச்செய்கிறார்.

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு

நெஞ்சே! “ச்ரிய:பதியான நாராயணன் ஆத்மாக்களை உடையவன்; நாம் நார சப்தத்துக்குள் அடக்கம்” என்கிற இந்த ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்த்தால் இது அநாதியன்றோ? (ஆரம்பம் அற்றது – எப்பொழுதும் இருப்பது). “இந்த ஸம்பந்தத்தை நமக்கு உணர்த்திய ஆசார்யனாலேயன்றோ நாம் உஜ்ஜீவனத்தைப் பெறுகிறோம்?” என்று எப்பொழுதும் வெட்கம், கர்வம் இவற்றை விட்டு நன்றாக நினைத்துக்கொண்டு இரு.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 36 – 40

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 31 – 35

பாசுரம் 36

உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார்.

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து

யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐம்புலன்களுக்கு விஷயமான உலக இன்பங்களில் ஆசையானது பலாத்காரத்தோடே என் மனதின் மேலே வந்து விழுந்து மூடுகிறது. என்னை அந்த இன்பங்களில் தள்ளுகிறது. இதற்குக் காரணம் அநாதி பாப வாஸனையில் இருக்கும் உறுதியான பிடிப்போ அல்லது அனுபவித்தோ அல்லது  ப்ராயச்சித்தம் பண்ணியோ தீராத வலிமையான என்னுடைய பாபங்களோ அறியேன்.

பாசுரம் 37

எம்பெருமானார் “உம்முடைய கஷ்டம் எமக்குப் புரிகிறது; உம்முடைய பக்தியை வளர்த்து உமக்கு அதிகாரத்தை ஏற்படுத்தி உமக்கு பேற்றைக் கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு “இப்பொழுதில்லாத அதிகாரம் எப்பொழுது ஏற்படப் போகிறது. ஆகையால் அந்த அதிகாரம் ஏற்படுவதுற்குத் தடையானவற்றை அழித்து அடியேனுக்கு பேற்றைக் கொடுக்காமல் இருப்பது ஏன்?” என்கிறார்.

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?

யதிராஜரே! இதுவரை இல்லாத அதிகாரம் இனிமேல் அடியேனுக்கு எப்பொழுது உண்டாகும்? இதை தேவரீரே அருளிச்செய்ய வேண்டும். எத்தாலும் அழியாமல் இருக்கும் பாபக்கூட்டங்களின் தொடர்ச்சியை வெட்டிவிட்டு, மிக உயர்ந்ததான பரமபதத்தில் அடியேனை உடனே ஏற்றாமல் இருப்பதற்கு என்ன காரணமோ?

பாசுரம் 38

தர்க்க ரீதியாக தனக்கு அதிகாரம் ஏற்படாது என்பதைக் காரணத்தோடு உரைக்கிறார்.

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்

யதிராஜரே! தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருக்கும் அடியேனது மனதானது அடியேனுக்குத் தகுந்த தலைவரான தேவரீருடைய மிக இனிமையான திருவடித் தாமரைகளுக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களையே மகிழ்ந்து அனுபவிக்க, அதற்கு மேலே “இப்பொழுதும் இப்படித் தகாத விஷயங்களை விரும்புகிறதே” என்கிற பச்சாதாபமும் இல்லாமல் இருப்பதினாலே, உலகில் சொல்லப்படும் “ஞானம் துளிர்க்கும் ஐந்து வயதில் அறியாதவர்கள் ஐம்பது வயதிலும் அறியமாட்டார்கள்” என்கிற வார்த்தை என் விஷயமாகவே சொல்லப்பட்டதோ?

பாசுரம் 39

அருகிலிருப்பவர்களுக்கு “நீர் எம்பெருமானார் திருவடிகளுக்கு வெளிப்பட்ட விஷயத்தையே விரும்பினீர் என்றால் அவர் எப்படி உம்மைக் கைக்கொள்வார்?” என்று கருத்தாக “அவரைத் தஞ்சம் என்று பற்றும்போது தோஷங்களோடு இருந்த அடியேனை விரும்பி ஏற்றுக்கொண்டவர் அடியேனைக் கைவிடமாட்டார்” என்று ஒரு உதாரணத்தைக் கொண்டு மணவாள மாமுனிகள் அருளுகிறார்.

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்

வேப்பிலையைக் கறியமுதாக விரும்புமவர்கள் அது கசக்கிறது என்று தள்ளாமல் உண்கிற ஸ்வபாவம்போலே, எம்பெருமானார் அடியேனை ஏற்றுக்கொண்ட ஸமயத்தில் “இவன் துஷ்டன்” என்று ஆராய்ந்து அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அடியேனை ஏற்றுக்கொண்டார். ஆகையாலே அவர் அடியேனைக் கைவிடார்.

பாசுரம் 40

எம்பெருமானார் “உம்மை தோஷத்துடனே ஏற்றுக்கொண்ட நாம், தக்க காலத்தில் உமக்குப் பேற்றைச் செய்து கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு, “அக்காலம் வரை அடியேனுடைய பொழுதை வீணாகக் கழிப்பேன், ஆகையால் உடனே அடியேனைப் பரமபதத்தில் சேர்த்தருள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு

திருக்கல்யாண குணங்களால் நிறைந்த யதிராஜரே! தேவரீருக்கு அடியவனான நான் தேவரீர் அனுபவ கைங்கர்யங்களுக்கு ஏற்பட்ட பொழுதை வீணாகப் போக்கி இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி இருப்பது தேவரீரின் கருணைத் தன்மைக்குப் பொருத்தமானதோ? அடியேன் பரமபதத்தை அடையும் வகை க்ருபை செய்தருள வேண்டும்! ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டது போதும். இனி, இவ்வுடம்பைப் போக்கியருள வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 31 – 35

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 26 – 30

பாசுரம் 31

ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார்.

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே

பௌத்த, நையாயிக, வைசேஷிக, ஜைன, ஸாங்க்ய, யோக மதங்களாகிற ஆறு பாஹ்யமதங்களான செடிகளை அறுத்துத் தள்ளியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். கூட்டமாய் கூடி வருகிற வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும் குத்ருஷ்டி மதத்தவர்கள் முழுவதுமாகத் துறத்தியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். இவற்றுக்குக் காரணமாய், நிறைந்து வருகிற கலியைச் சிறிதும் இல்லாதபடி போக்கடித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். அழகு நிறைந்த திருவரங்கத்து எம்பெருமானுடைய செல்வம் முழுவதையும் திருத்தி வைத்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். வேதத்தில் காட்டப்படும் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய க்ரந்தங்களான ஸ்ரீபாஷ்யம் முதலியவை மூலமாக அருளிச்செய்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதங்களை நன்கு வளர்த்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். அந்தத் தமிழ் ப்ரபந்தங்களுடைய தாத்பர்யமான சரணாகதி தர்மம் இவ்வுலகில் நன்கு பரவ சிறந்ததான ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். அழகு முதலியவைகளால் பூர்த்தியையுடைய எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.

பாசுரம் 32

எம்பெருமானாரின் திருநக்ஷத்ர தினமான திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுகிறார்.

சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

சங்கரனின் மதம் (அத்வைதம்), பாஸ்கரனின் மதம் (பேதாபேதம்), யாதவப்ரகாசனின் மதம் (பேதாபேதம்), குமாரில பட்டன் மற்றும் ப்ரபாகரனின் மதங்கள் (மீமாம்ஸா) நாசம் அடைவதால், வாதம் செய்யும் அவ்வவ மதஸ்தர்கள் ஐயமின்றி நாசம் அடைவார்கள் என்று நான்கு வேதங்களும் நன்றாக வளரும் நாள். க்ரூரமான கலியும் “இனி நம்மால் இங்கு ஆட்சி செய்ய முடியாது” என்று மிகவும் தளர்ந்து போகும் நாள். பூமியும் “நம் தலைச்சுமை கழியும்” என்று துக்கத்தை விட்டு நன்றாக ப்ரகாசிக்கும் நாள். திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் பூர்வாசார்யர்களுடைய் வாழ்வு நன்றாக முளைக்கும் நாள். பொருந்தி இருக்கும் அழகிய திருவரங்கம், திருமலை மற்றும் ஏனைய திவ்யதேசங்களும் ஆனந்தம் அடையும் நாள். இதெல்லாம் நடக்கும் நாள் எந்நாள் என்றால் சிவந்து அழகாய் இருக்கும் மீன்களையுடைய தடாகங்களால் சூழப்பட்டுள்ள சிறந்ததாய் இருக்கும் ஸ்ரீபெரும்பூதூரை திருவவதார ஸ்தலமாக உடைய கைங்கர்ய ஸ்ரீயை உடைய இளையாழ்வார் என்ற திருநாமத்தை உடைய எம்பெருமானார் வந்தருளிய நாளான திருவாதிரைத் திருநாளே.

பாசுரம் 33

எம்பெருமானாருக்குச் சில பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்த பிறகு மீண்டும் முன்பு சொன்ன விஷயத்தையே சொல்ல நினைத்து “அடியேனுடைய நிலையை நன்கறிந்திருந்தும் அடியேனைப் பரமபதத்தில் சேர்க்கத் திருவுள்ளம் பற்றியும், ஏன் கால தாமதம் செய்கிறீர்?” என்கிறார்.

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!

யதிராஜரே! இன்னமும் எவ்வளவு காலம் கைவிட வேண்டிய இந்த தேஹத்தோடே இதில் பொருத்தமற்றிருக்கிற அடியேன் இருப்பேன்? எப்பொழுது இந்த தேஹம் கீழே விழும்? அதுதான் எந்த விதத்திலே எந்த இடத்திலே நடக்கும்? இவ்வாறு சொல்லப்படும் விஷயங்களையெல்லாம் தேவரீர் அறிவீர். அஜ்ஞனான அடியேன் இவை ஒன்றும் அறியேன். ஆன பின்பு, இப்படி அடியேனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி அடியேனை அடிமை கொண்ட பெருமானே! இனி, இவ்வுலகில் பொருத்தமற்றிருக்கிற அடியேனை தேவரீர் க்ருபையாலே இவ்வுடம்பிலிருந்து விடுவித்து அழகு மிகுந்த பரமபதத்திலே ஏற்றத் திருவுள்ளமாகில், பின் விரைந்து செய்யாமல் மறந்திருப்பதற்குக் காரணம் என்ன? அதை அருளிச்செய்ய வேண்டும்.

பாசுரம் 34

எம்பெருமானார் “நாம் உமக்கு உதவ நினைத்தாலும் உம்முடைய பாபங்கள் கிடக்க நாம் எப்படிச் செய்வது” என்று நினைப்பதாகக் கொண்டு, “எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடிய எம்பெருமானே தேவரீருக்கு அடங்கி இருப்பதால், தேவரீரையே எல்லாமாகக் கொண்டிருக்கும் அடியேனை முக்தனாக ஆக்க வேண்டும்” என்கிறார்.

முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே

யதிராஜரே! பூர்வாகம் (சரணாகதிக்கு முன்பு பண்ணிய கர்மங்கள்), உத்தராகம் (சரணாகதிக்குப் பின்பு பண்ணும் கர்மங்கள்), ப்ராரப்தம் (பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மங்கள்) என்று சொல்லப்படும் மூன்று வகையான கர்மங்களின் கூட்டங்கள் எல்லாவற்றையும் ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் போன்ற குணங்களை உடைய நானே வாத்ஸல்யம் போன்ற குணங்கள் நிறைந்த என்னையே தஞ்சம் என்று பற்றியவர்களுக்கு கழிப்பேன் என்று அருளிச்செய்த ஸ்ரீரங்கநாதனான பெரிய பெருமாள் தேவரீர் இட்ட வழக்கன்றோ? இப்படிப்பட்ட தேவரீரை அல்லது வேறொரு ரக்ஷகரை அறியாத அடியேன் இந்த உடம்போடு பொருந்தி இருந்து இவ்வுடம்பின் பலனான கர்ம பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கட்டாயமோ? தேவரீரே அடியேனுடைய கர்மபலன்களை க்ஷண காலத்தில் போக்கி அழகு நிறைந்துள்ள வைகுந்தத்தில் ஏற்றிவிட்டு அருளவேண்டும்.

பாசுரம் 35

அடியேனை ரக்ஷிக்க முயலும் தேவரீர் அடியேனுக்கு நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்க நினைக்க, அதையும் மீறி அடியேன் செய்யும் பாபங்களைப் போக்கி தேவரீரையே நினைக்கும்படிப் பண்ணவேண்டும் என்கிறார்.

அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!

யதிராஜரே! அருளாலே அடியேன் விஷயத்தில் கருணையைக் காட்டி, நிரந்தரமாக நித்ய கைங்கர்யம் கொண்டருளுவதாக தேவரீர் இருக்க, அதை அறிய விடாத அஜ்ஞானத்தாலே புலன்களுடைய விஷயமான இன்பங்களை ஆசைப்படுகிற அடியேனுடைய வலிமை பொருந்திய கர்மங்களை மாற்றி தேவரீர் விஷயத்தில் மனதை வைக்கும்படிப் பண்ணியருளவேண்டும். ஞானம் நிறைந்திருக்கும் ஸ்ரீ கூரத்தாழ்வானும், அவர் திருக்குமாரராக இருக்கும் செல்வத்தையுடைய பராசர பட்டரும் தங்கள் விஷயத்தில் தாழ்வுகளாகச் சொல்லிக்கொண்ட பாபக்கூட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர உண்டான அடியேனை நன்றாகத் திருத்தி உஜ்ஜீவனம் அடைவிக்கும் வழியை தேவரீரே சிந்தித்தருளும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 26 – 30

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 21 – 25

பாசுரம் 26

தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக்கருத்தை “தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி, ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே

எம்பெருமானாரே! அடியேனுடைய அபராதங்களை மன்னிக்க, பெரிய பெருமாளுக்கு முடியுமோ? பெரிய பிராட்டியார் தொடக்கமான எம்பெருமானின் தேவிமார்களுக்கு முடியுமோ? ஸேனை முதலியார் முதலான நித்யஸூரிகளுக்கு முடியுமோ? நித்யமாயிருக்கும் திருக்கல்யாண குணங்களை உடைய நம்மாழ்வார், அடியார்கள் விஷயத்தில் அருள் புரியும் திருமங்கை ஆழ்வார் முதலானவர்களுக்கு முடியுமோ? மற்றுமுண்டான நம் ஆசார்யர்களுக்கு முடியுமோ? என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ள யாருக்கு முடியும்? தேவரீரைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லாத அடியேனுக்கு, தேவரீர் க்ருபையால் ருசியையும் உண்டாக்கி, மிகவும் ஒளி படைத்த பரமபதத்தில் அடியேனை விரைவில் சேர்த்து அருள வேண்டும்.

பாசுரம் 27

எம்பெருமானார் தனக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதில் ஆர்வத்துடன் இருப்பதைக் கண்ட மணவாள மாமுனிகள் ஸம்ஸாரத்தில் எல்லாம் கைவிட வேண்டியதாகவும், பரமபதத்தில் எல்லாம் கைக்கொள்ள வேண்டியதாகவும் ஆனபின்பு அவ்வவற்றை மறப்பது மற்றும் நினைப்பது ஆகியவற்றை தனக்கு அடங்கிய மனதுக்கு அருளிச்செய்கிறார்.

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே

நெஞ்சே! இந்த உலகத்தில் இனி ஒன்றையும் சிந்தியாதே, இரவும் பகலும் எம்பெருமானார் நமக்கு அருளும் பரமபதத்தையும், மலர்மகளான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமான் அங்கே திவ்ய ஸிம்ஹாஸனத்தில் இருக்கும் இருப்பையும், நித்யர்கள் மற்றும் முக்தர்கள் குழாங்களையும், அவர்கள் அனுபவத்தை அதற்காக இட்டுப் பிறந்தும் இந்த ஆத்மா இழந்து கிடந்தது என்பதையும், எக்காலமும் அந்த அனுபவத்துக்குத் தடையாய் இருக்கும் நம்முடைய க்ரூர கர்மங்களால் வந்த இந்த உடலில் இருந்து விடுதலை பெறும் காலத்தையும், இந்த தேஹத்தை விட்ட பிறகு கிடைக்கும் பேரின்பத்தையும், இவை எல்லாவற்றையும் இடைவிடாமல் சிந்தித்திரு.

பாசுரம் 28

அநாதி காலமில்லாத ப்ராப்ய ருசி (பகவானை அடைவதில் உள்ள ருசி) இப்போது எம்பெருமானார் க்ருபையால் உண்டானது என்று அந்த லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே

முற்காலத்தில் ஆத்மாவை உஜ்ஜீவனம் அடையச் செய்வதிலே நோக்காக இருக்கும் நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த உலகத்தில் இருப்போர் அனைவரும் உஜ்ஜீவனம் அடைய வேண்டும் என்பதற்காக இவர்களிடத்தில் உள்ள அன்பினாலே அருளிச்செய்த பல ப்ரபந்தங்களைப் பார்த்ததெல்லாம் எழுதி, அவற்றை ஆசார்யன் மூலமாகக் கற்று, மற்றவர்களுக்கு அன்புடனே கற்பித்தும் காலத்தைப் போக்கினேன்; மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற பரமபதத்துக்குப் போகவேண்டும் என்கிற நினைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி வாழ்ந்தேன்; எட்டுத் திக்கில் உள்ளோரும் ஸ்தோத்ரம் பண்ணும்படியான பெருமையை உடைய யதிராஜரின் க்ருபையாலே சிறந்ததான பரமபதத்தைத் தவிர என் மனமானது வேறொன்றை இப்போது எண்ணாது.

பாசுரம் 29

தம்முடைய தடைகளைப் போக்கி எம்பெருமானை அடையும்படிச் செய்யும் எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலம் பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதத்தவர்களை ஜயித்து அருளினவற்றைச் சொல்லி, அவருடைய வீரஸ்ரீக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சாருவாகமதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக்கிரி முறித்திட
மாறு செய்திடுகணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்கசரம் விட்ட பின் குறுகிய மாயவாதியரை வென்றிட
மீறிவாதில் வருபாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெருவீரர் நாளும் மிக வாழியே

கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்று சொல்லக்கூடிய சாருவாக மதத்தை பஸ்மமாகும்படிச் செய்து, சமண மதம் என்கிற செடியை எரித்து, சாக்கிய (பௌத்த) மதம் என்கிற கடலை வற்றிப்போகும்படிச் செய்து, பெருத்திருந்த ஸாங்க்ய மதம் என்கிற மலையைத் தகர்த்து, எதிர் வாதம் செய்யும் கணாத மதத்தவர்கள் [கணபதியை வழிபடுபவர்கள்] வாக்கை உடைத்தெறிந்து, மிகவும் எதிரிட்டு வந்த பாசுபத மதத்தைச் சேர்ந்தவர்கள் சிதறி ஓடும்படி வாது செய்தார் யதிராஜர்; பின்பு அவரே பெரிய பிதற்றலான ப்ரபாகர மதத்தோடு பாட்ட மதத்தின் மேல் தன்னுடைய வெல்வதற்கரிய தர்க்க பாணங்களை விட்டார்; பின்பு மாயாவாதிகள் இருந்த இடம் சென்று அவர்களை வென்றார்; அதற்குமேலே மிகவும் வாதித்து வரும் பாஸ்கர மதம் என்கிற வேர்க்கொடிகள் நெருக்க அவற்றை வெட்டி வீழ்த்தினார்; பின்பு மிகுத்திருந்த யாதவப்ரகாச மதத்தை அழித்த பெரிய வீரரான யதிராஜர் எப்பொழுதும் வளர்ந்து வரும் மங்களத்தை உடையவராக வேண்டும்.

பாசுரம் 30

இனி, இப்படி அனைத்து பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களை ஜயித்த பிறகு, எம்பெருமானார் பகவத் விஷயமான திருவாய்மொழிக்கு விளக்கங்கள் அளித்துக் கொண்டு இருப்பது தம்மை மிகவும் ஈர்க்க, அவருடைய திருவடிகள் முதல் திருமுடிவரை அனுபவித்து அவை நித்யமாகச் செல்ல வேண்டும் என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே

திருக்கல்யாண குணங்கள் நிறைந்திருக்கும் யதிராஜருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; இடுப்பிலே சாற்றியிருக்கும் காஷாய வஸ்த்ரமானது எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அழகு மிக்கிருக்கும் சிவந்த திருமேனி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; திருமார்பில் விளங்கிக் கொண்டிருக்கும் யஜ்ஞோபவீதம் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; பொருத்தமான மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட இரண்டு திருத்தோள்கள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; எப்பொழுதும் சுருங்காத, தூய்மையான, சிறந்ததான முகத்தின் ஒளி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களை ரக்ஷிப்பதால் வரும் ஆனந்தத்தை வெளியிடும் புன்முறுவல் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களின் அமலங்களைப் போக்கும் இரண்டு தாமரை போன்ற கண்கள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; சிவந்த திருமேனியில் அணிந்திருக்கும் பன்னிரு திருநாமங்கள் அணிந்திருக்கும் அழகு எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; பத்மாஸனத்தில் இனிது இருக்கும் இருப்போடு, திருக்கையில் இருக்கும் ஞான முத்திரை எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 21 – 25

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 16 – 20

பாசுரம் 21

மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து “நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு. எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். நமக்கு ஒரு பயமும் இல்லை” என்கிறார்.

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?

மனமே! ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமத்தையுடைய திருவாய்மொழிப் பிள்ளை தம்முடைய இயற்கையான கருணையாலே அருளும் ஞானத்தைக் கொண்டு, இவரையே நம்மை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பவராகக் கொண்டு, உறுதியோடு இரு! நம் ஆசார்யருக்காக யதிராஜர் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்றிருக்கிற நம்மை விரைவில் பரமபதத்தில் ஏற்றி அருளுவார். இவ்விஷயத்தில் நமக்கு என்ன பயம்? [ஒரு பயமும் வேண்டாம் என்று கருத்து]

பாசுரம் 22

திருவாய்மொழிப் பிள்ளையுடைய இயற்கையான கருணையால், எம்பெருமானாருடைய அபிமானத்தால் ஸம்ஸாரத்தைக் கடந்து ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவேன் என்கிறார்.

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே

குற்றமற்ற ஆத்மஜ்ஞான குணங்களையுடைய திருவாய்மொழிப் பிள்ளையுடைய இயற்கையான கருணையாலே, காமம் முதலிய தோஷங்களைப் போக்கும் யதிராஜருடைய அபிமானம் (கருணை) என்கிற கப்பலில் ஏறி ஸம்ஸாரமாகிற பெருங்கடலைக் கடந்து குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயிருக்கும் ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகள் என்னும் கரையை அடைவேன்.

பாசுரம் 23

கீழ் இரண்டு பாசுரங்களில் தம்முடைய ஆசார்யரான பிள்ளை, பரமாசார்யரான எம்பெருமானார் ஆகியோருடைய அபிமானத்தாலே தமக்கு பேறு உறுதியாகக் கிட்டும் என்றவர், இப்படி ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிமார்களோடு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலையை விரைவில் அனுபவிக்கும்படி தேவரீர் பண்ணியருளவேண்டும் என்று எம்பெருமானாரிடம் ப்ரார்த்திக்கிறார்.

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!

அடியேனுக்கு நாதரான யதிராஜரே! நித்யர்கள் முக்தர்கள் என்கிற அடியார்கள் சூழ இருந்து அழகாக ஸேவித்துக்கொண்டிருக்க, உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுக்கும் திருமாமணி மண்டபத்திலே, ஒப்பற்ற திவ்யமான படுக்கையாயிருக்கும் ஆதிசேஷனுடைய பணாமணிகளின் ஒளி வட்டத்துக்குள்ளே மிக்க அழகையும் மென்மைத்தன்மையும் உடைய பெரிய பிராட்டியார் வலது பக்கத்திலும், அவளைப் போன்ற பூமிப் பிராட்டியும் நீளாதேவியும் இடது பக்கத்திலும் ஸேவித்திருக்க, இவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை, விரைவிலே அடைந்து அனுபவிக்கும் வகையை அருளவேண்டும்.

பாசுரம் 24

இதில் தேஹத்தில் இருந்து விடுதலை பெறுவது தொடங்கி பரமபதத்தில் அடியார் குழாங்களை அடைவது வரையான பேற்றை ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!

அடியேனுக்கு நாதரான யதிராஜரே! தாழ்ந்ததான இந்த ஸ்தூல சரீரத்தை விட்டு, ஸூர்ய மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு அதற்கும் மேலே போய், இந்த ப்ரஹ்மாண்டத்தையும் கடந்து, நடுவிலுள்ள ஏழு ஆவரணங்களையும் கடந்து, முடிவில்லாத மூல ப்ரக்ருதியைக் கடந்து, மிகவும் அழகாக இருக்கிற விரஜா நதியில் குளித்து, அங்கே அமாநவனுடைய கர ஸ்பர்சத்தைப் பெற்று, ஒளிபடைத்த திவ்யமான தேஹத்தையும் பெற்று, நித்யஸூரிகள் எதிர்கொண்டு வரவேற்று, பகவானை அலங்கரிப்பதைப் போலே அலங்கரித்து, ஸ்தோத்ரம் பண்ணி, நல்ல வழியிலே சென்று, வைகுந்த மாநகரத்தை அடைந்து, உள்ளே சென்று, திருமாமணி மண்டபத்தைக் கிட்டி, நமக்கு ஸ்வாமிகளாகவும் ஸ்ரீமந் நாராயணனுக்கு அடியார்களுமான குழாங்களுடன் கூடும் நாளானது அடியேனுக்கு அருகே ஏற்படும் வழியை நன்றாக ப்ரகாசிக்கும்படிச் செய்ய வேண்டும்.

பாசுரம் 25

எம்பெருமானார் “நீரோ உம்முடைய அபராதத்தைப் பார்க்காமல் பெரிய பேற்றை ஆசைப்படுகிறீர். அதற்கு நாம் செய்வது என்?” என்று நினைப்பதாகக் கொண்டு, முதலில் இருந்து அடியேனுடைய அபராதங்களைப் பொறுத்து, மோக்ஷத்தையும் கொடுக்கிறேன் என்று எண்ணியிருக்கும் தேவரீர், கால தாமதம் பண்ணக் கூடாது என்கிறார்.

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!

யதிராஜரே! என்று ஒரு காரணமும் இல்லாமல் அடியேனை “இவன் நம்முடையவன்” என்று அபிமானித்து அருளி, என்று அடியேனும் அந்தக் கருணையை அறிந்து தேவரீருக்கே அடிமையாய் இருக்கும்படி செய்தருளினீரோ, அன்று முதல் இன்று வரை தவறுகளையே செய்து விட்டு, அத்தவறுகளுக்கு அனுதாபப்படுவது, இனிமேல் செய்யமாட்டேன் என்று தேவரீரிடத்தில் ப்ரார்த்திப்பது ஆகிற அடியேனுடைய கொடும் செயல்களைக் கண்டும், அடியேனை இகழாமல், தேவரீர் திருவடிகளில் எப்போதும் கைங்கர்யம் கொண்டு அருளினீர். இவ்வளவோடு நிறுத்தாமல் இன்று அடியேனுக்கு பரமபதத்தையும் கொடுத்தருளத் திருவுள்ளத்தில் நினைக்கிறீர். அதை விரைவிலே செய்தருள வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 16 – 20

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 11 – 15

பாசுரம் 16

எம்பெருமானார் “நம்மிடத்தில் உமக்குச் சிறிதளவும் அன்பில்லை என்றாலும், விரோதமாகவாவது செய்யாமல் இருக்கிறீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அதுவும் இல்லை. அறிவிலியான அடியேனுடைய குற்றத்தை போகமாகக் கொள்ளும் தேவரீர் திருவடிகளை என்று நான் அடைவேன்?” என்கிறார்.

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?

யதிராஜரே! நல்லோர்களால் கைவிடப்படுவன எது என்று நன்கறிந்தும், அதை மற்றவர்களுக்கு உபதேசித்தும், அப்படிப்பட்ட செயல்களையே எப்பொழுதும் செய்வேன். இப்படி இருப்பதால், மோஹத்தாலே குருடானவன் என்று திருவுள்ளத்திலே கொண்டு, அடியேனைத் தள்ளிவிட வேண்டாம். எப்போது அடியேன் தேவரீர் திருவடிகளை அடையக் கடவேன்?

பாசுரம் 17

கீழே “எப்பொழுது தேவரீரை அடைவேன்?” என்று கேட்ட இவருக்கு எம்பெருமானார் “சரீர வியோகத்தில் கொடுக்கிறோம்” என்று சொன்னதாகக் கொண்டு “உடனே கொடுக்காமல் காலம் தாழ்த்துவதன் காரணம் ஏதோ?” என்கிறார்.

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?

யதிராஜரே! தீய செயல்கள் எல்லாவற்றையும் பதித்துக் கொண்டு, நல்ல செயல்கள் ஒன்றும் இல்லாத அடியேனுக்கு, ஸத் புருஷர்கள் அடையத் தகுந்த பரமபதத்தை நாமே தருகிறோம் என்று அருளிச்செய்த தேவரீர் கால தாமதம் செய்வதன் காரணம் என்ன? [உடனே தந்தருள வேண்டும் என்று கருத்து]

பாசுரம் 18

எம்பெருமானார் இவர் ஆசைப்பட்டதைச் செய்து தருவதாக இருக்க, அது கிடைக்கும் வரை பொறுக்க முடியாமல், இந்த ஸம்ஸாரமாகிற இருட்டு அடியேனுக்கு எப்போது முடியும் என்று அவரையே கேட்கிறார்.

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப்பவமாம் நீண்ட இரவு

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! குறையாமல் இப்படியே இந்த ஆத்மாவுக்கு அறியாமை என்னும் இருட்டை விளைக்கும் இந்த ஸம்ஸாரமாகிற காள ராத்ரியில் (கருப்பு இரவு) அகப்பட்டு வழி தெரியாமல் திகைக்கும் அடியேனுக்கு எப்போது தேவரீரை அடைவதான நல் விடிவு ஏற்படும்? இவ்விஷயத்தில் அடியேன் ஒன்றும் அறியாமல் இருக்கிறேன். எல்லாம் அறிந்த தேவரீர் இதற்கு ஒரு நல்ல விடிவை அருளவேண்டும்.

பாசுரம் 19

எம்பெருமானாரின் கை பார்த்திருக்கும் தான் இப்படி உடம்புக்கு வசப்பட்டிருப்பது அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறார்.

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! இரவும் பகலும் அடியேன் இந்த உடம்பின் வழி சென்று ஈடுபட்டிருப்பது தேவரீருடைய பெருமைக்கு ஒரு கேடன்றோ? ப்ரஹ்ம ஞானத்தை உடைய நல்லார்கள் தங்கள் புதல்வர்கள் தாழ்ந்தவர்களுக்கு தாழ்ந்த தொண்டுகளைச் செய்துகொண்டிருப்பதைப் பொறுப்பார்களோ? இதைத் தேவரீரே அருளிச்செய்யவேண்டும்.

பாசுரம் 20

எம்பெருமானார் தனக்கு அர்ச்சிராதி கதியில் சென்று பரமபதத்தை அடையும் பேற்றைச் செய்து கொடுக்க இருக்கிறார் என்பதை உணர்ந்து இனி நமக்குப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி, அர்ச்சிராதி கதியில் போவது தொடங்கி பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வது முடிய எல்லாவற்றையும் தாம் பெற்றதாக நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே

பரமபதத்தை அடைவதைவிடப் போகும் வழியே சிறந்தது என்று சொல்லும்படியான அர்ச்சிராதி கதியில் போகும் இன்பம் எல்லாம் அனுபவித்து, அம்ருதமயமான விரஜா நதியிலே நாம் நம்முடைய வருத்தம் எல்லாம் தீரும்படித் தீர்த்தமாடி, எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, பரிசுத்தமான பரமபதத்தை அடைந்து, குணங்களெல்லாம் திகழும், சுத்தஸத்வமயமான திவ்ய உடம்பைப் பெற்று, நித்யஸூரிகள் எதிர்கொண்டு அழைத்து, ப்ரஹ்மாலங்காரத்தைப் பண்ணி, ஸத்காரங்கள் செய்து, அவர்களுடன் திருமாமணி மண்டபத்திலே சென்று, ச்ரிய:பதியான ஸ்ரீமந்நாராயணன் தன் மடியிலே நம்மை வைத்து மகிழும் செல்வம், யதிராஜர் இதில் ஆசையுடைய நமக்கு அருளும் செல்வமே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 11 – 15

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 6 – 10

பாசுரம் 11

எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர் பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல, மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி, அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார்.

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என்தனக்கு நீ தந்து எதிராசா! எந்நாளும்
உன்தனக்கே ஆட்கொள் உகந்து

எம்பெருமானாரே! தேவரீரைத் தவிர எம்பெருமானைக் கூட தெய்வமாக அறியாத, பொருந்திய புகழை உடைய வடுகநம்பியுடைய சரம பர்வ நிஷ்டையை தேவரீர் தந்தருளி எக்காலத்திலும் தேவரீருக்கே அடியேனை அடிமையாகக் கொள்ள வேண்டும்.

பாசுரம் 12

எம்பெருமானார் “இப்படி நீர் சொல்வதைச் செய்வதற்கு நமக்குள் என்ன உறவு உள்ளது” என்று கேட்பதாகக் கொண்டு தனக்குத் திருவாய்மொழிப் பிள்ளையுடன் உள்ள உறவை எடுத்துரைக்கிறார் மணவாள மாமுனிகள்.

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்

எம்பெருமானாரே! எல்லா இடங்களிலும் ப்ரகாசிக்கும் வைபவத்தை உடையராய் திருவாய்மொழியில் உள்ள ஈடுபாட்டாலே திருவாய்மொழிப் பிள்ளை என்றே அழைக்கப் படுபவரான, தன்னிடத்தில் தானே ஆசார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்கை முதலான குற்றங்கள் இல்லாத திருமலை ஆழ்வார், தம்முடைய தயைக்குப் பாத்ரமான அடியேனை “இவன் எப்படி மாறினால் உஜ்ஜீவனத்தை அடைவான்?” என்று ஆராய்ந்து தேவரீர் திருவடிகளிலே சேர்த்தருளினாரோ, அவ்வழியிலேயே தேவரீர் அடியேனை உஜ்ஜீவனம் அடையச் செய்ய வேண்டும்.

பாசுரம் 13

தாம் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கக் கூடிய எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணி அவர் திருவடிகளில் பரம்பரையாக ஸம்பந்தம் பெற்றவர்கள் பெறும் பேற்றை அருளிச்செய்கிறார்.

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்

“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக” என்று பல முறை சொல்லி, ஸ்தோத்ரம் பண்ணி, ஸாமர்த்யமாக வாழ்பவர்களுடைய திருவடிகளின் கீழே வாழ்பவர்கள் ஆழ்வார்களுடைய அருளை முழுவதுமாகப் பெறுவர்கள்.

பாசுரம் 14

“தேசம் திகழும்” என்னும் பாசுரத்தோடு இப்பாசுரத்துக்குத் தொடர்பு. நடுவில் வந்த பாசுரம், எம்பெருமானார் வைபவத்தை நினைத்து சொல்லப்பட்டது. எம்பெருமானார் “திருவாய்மொழிப் பிள்ளை உம்மை நம்மிடத்திலே சேர்த்ததைச் சொன்னீர். நீர் அதற்கு மேலே எதுவும் அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அதிகாரம் இருந்தால் தேவரீரிடத்தில் வரவேண்டிய அவச்யம் இல்லையே என்கிறார்”.

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!

எம்பெருமானாரே! ஞானம் மற்றும் அநுஷ்டானங்களில் பூர்த்தியோடு இருக்கும் அதிகாரம் இருந்தால் பெரிய பெருமாளே தன் அருளைக் கொடுக்க மாட்டாரோ? அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்காகத் தானே தேவரீர் அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டுவது? தேவரீரும் அதிகாரிகளுக்கே அருள் புரிவேன் என்று சொன்னால் அடியேனைப் போன்ற அதிகாரமில்லாதவர்கள் என் செய்து உஜ்ஜீவனத்தை அடையப் போகிறோம்?

பாசுரம் 15

பரம தார்மிகரான எம்பெருமானாரை மீண்டும் மீண்டும் குற்றம் சொல்கிறோம். அவர் திருவடிகளை அன்போடு நினைத்தால் அவரே நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார். இப்படியிருக்க, அவரிடத்திலே நமக்கு உண்மையான அன்பு இல்லையே என்று வருந்துகிறார்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர்பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?

“எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று சொல்லப்படும் இந்த வாசகத்தையே அடியேனுடைய நாக்கு அன்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். இதனால் என்ன பயன்? இந்த க்ஷணம் வரை அவர் விஷயத்தில் ஒரு அன்பையும் என்னிடத்தில் பார்க்கவில்லை. இது வரை வாராத அது இனி எப்பொழுது வரப்போகிறது?

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org