வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை – ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்

நமது சம்பிரதாயத்தில் பல ஆசார்யர்கள் இருந்துள்ளனர்.  ஆனால் பொதுவாக நமது ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பரம்பரையாக ஒரு ஆசார்யன் அவருக்கு அடுத்து இன்னொருவர், அதன்பின் மற்றொருவர் என்று தொடர்ந்து அந்த ஆசார்ய தலைமை பீடத்தில் இருந்தவர்கள் என்று அறியலாம்.   இந்த ஒராண் வழி ஆசார்ய பரம்பரையில் முதலில் இருப்பது பெரிய பெருமாள் ஸ்ரீமந் நாராயணன்.  எம்பெருமான் தானும் ஆச்சார்யத்துவத்தில் ஆசைப்பட்டான் என்பதை நமது பூர்வர்கள் வியாக்கியானங்களில் காண்பித்துள்ளனர்.  ரகசிய கிரந்தங்களிலும்  காண்பித்துள்ளனர்.  இந்த ஆசார்ய பீடம் என்பது உயர்ந்த பீடமாக இருப்பதனாலும் எம்பெருமானை விட தகுதியான ஒருவர் ஆசார்யராக இருக்க முடியாது என்பதனாலும் தானே முதல் ஆசார்யராக எம்பெருமான். நம்முடைய குரு பரம்பரையில் எழுந்தருளியிருக்கிறான் அது மட்டுமன்று.   குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஆசார்யனாக இருந்து கீதோபதேசம் செய்தான். பத்ரிகாச்ரமத்தில் திருமந்திரத்தை நாராயண ரிஷியாக இருந்து நர ரிஷிக்கு  உபதேசித்தான்.   இப்படிப் பல சமயங்களில் எம்பெருமான் தானே ஆசார்யனாக இருந்திருக்கிறான்.

மேலும் நமது  சம்பிரதாயத்தில் ஆசார்யனையே அண்டியிருக்க வேண்டும், அவரது கருணையினாலேயே நாம் மோக்ஷத்திற்குப் போகிறோம் என்று நாம் உறுதியாக நம்புவதாலும் நமது பெரியவர்கள் காட்டியுள்ளபடி ஆசார்யன் என்பவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.  பொதுவாக நாம் ஸந்நிதிகளில் ஸேவிக்கப் போகும் போது,  பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்வதைப்போன்று இரண்டு மடங்கு ஆசார்யனுக்கு செய்யவேண்டும்.  அதை இரட்டை சம்பாவனை என்று கூறுவார்கள். ஆசார்யர் எழுந்தருளினார் என்றால்  அவருக்கு விசேஷமாக கைங்கர்யம் / மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்பதை இன்றளவும் நமது சம்பிரதாயத்தில் வழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.   நாம் ஒரு பத்திரிகை சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினாலும் ஆசார்யனுக்கு இரண்டு பத்திரிகைகள் சமர்ப்பிக்க வேண்டும்.  ஆசார்யன் என்றாலே இரட்டை கெளரவம் கொடுக்க வேண்டும் என்று அறிகிறோம்.  அவ்வாறு ஆசார்யன் என்பவர் சிறந்த வழிகாட்டியாக நம்மை எம்பெருமானிடத்தில் கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார்.

இந்த ஓராண் வழி ஆசார்யர்களில் முதன்மையானவர் 1. பெரிய பெருமாள் (நம்பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர்).

  1. பெரிய பிராட்டி – இரண்டாவது ஆசார்யராகக் கருதப்படுபவர் பெரிய பிராட்டி (ஸ்ரீரங்கநாயகித் தாயார்).  பிராட்டி எம்பெருமானுக்கு மிகவும் பிடித்தமானவள், எம்பெருமானின் பட்டமகிஷி.  எம்பெருமான் பெரிய பிராட்டிக்கு த்வய மந்திரத்தை உபதேசம் செய்கிறான்.  பிராட்டியையே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அடுத்த ஆசார்யராக எம்பெருமான் அறிவிக்கிறான்.
  1. ஸேனை முதலியார் – பெரிய பிராட்டியாருக்கு அடுத்ததாக ஸேனை முதலியார் என்று அழைக்கப்படும் ஸ்ரீவிஷ்வக்ஸேனர்.  இவர் பரமபதத்தில் வசித்துக் கொண்டு லீலா விபூதியில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் அதாவது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை மேற்பார்வையிடும் சேனாபதியாக இருக்கிறார்.  ஸ்ரீவிஷ்வக்ஸேனர் மூன்றாவது ஆசார்யராவார்
  1. நம்மாழ்வார் – நான்காவது ஆசார்யராக நம்மாழ்வார் கருதப்படுகிறார்.  எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் நம்மாழ்வார்.  இப்பூவுலகில் ஆசார்யர்கள் பரம்பரை வளர வேண்டும் என்பதற்காக ஸேனை முதலியாரைக் கொண்டு நம்மாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து நம்மாழ்வாரை ஆசார்யனாக எம்பெருமான் காட்டுகிறான்.  நம்மாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் முதன்மையானவர் என்பதை நாம் அறிவோம்.  “ப்ரபந்ந ஜந கூடஸ்தர்”, “வைஷ்ணவ குலபதி” என்று அறியப்படுபவர்.

5, நாதமுனிகள் – ஐந்தாவது ஆசார்யராக நாதமுனிகள் அறியப்படுகிறார்.  நம்மாழ்வார் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.  நாதமுனிகளோ 1200 ஆண்டுகளுக்கு முன் இப்பூவுலகில் இருந்தவர்.  நாதமுனிகளுக்கும், நம்மாழ்வாருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது எனில், நாதமுனிகள் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பற்றி கேள்விப்படுகிறார். திருக்குடந்தை ஆராவமுதன் பெருமான் பற்றிய பாசுரங்களை மேல் நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகள் வசிக்கக் கூடிய காட்டுமன்னார்கோயிலில் ஸேவிக்கிறார்கள்.  அவற்றை செவியுற்ற நாதமுனிகள், அவர்களிடமிருந்து அந்தப் பாசுரங்களைப் பெற்று அந்தப் பதிகத்தின் இறுதிப் பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன்” என்ற வார்த்தையையும் “ஆயிரத்துள் ஓர் இப்பத்தும்” என்ற சொல்லையும் கொண்டு நம்மாழ்வாரைத் தேடி ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார்.  அங்கு இருந்தவர்களிடம் இந்தப் பாசுரங்களைப் பற்றி விசாரிக்க, அங்கு இருந்த மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தவர்கள் “நாங்கள் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்கள் தான் அறிவோம்” என்றனர். மேலும் அவர்கள் எவர் ஒருவர் நம்மாழ்வார் வாசஸ்தலம் செய்த திருப்புளியாழ்வாரின் அடியில் தியானத்தில் அமர்ந்து இந்தக் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை பன்னீராயிரம் முறை ஸேவிக்கிறார்களோ அவருக்கு நம்மாழ்வார் ப்ரத்யக்ஷமாக ஸேவை சாதிப்பார் என்பதை அறிவோம் என்றனர்.    நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் வல்லவராதலால் திருப்புளியாழ்வார் மரத்தினடியில் அமர்ந்து பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை அநுஷ்டிக்க நம்மாழ்வார் அவர் முன் தோன்றி “என்ன வேண்டும்” என்று வினவ, அதற்கு நாதமுனிகள் “நீவிர் இயற்றிய ஆயிரம் பாசுரங்களைத் தந்தருள வேண்டும்” என்றார்.  நம்மாழ்வார் தாம் இயற்றிய அனைத்து ப்ரபந்தங்கள் (முறையே திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி) மட்டுமன்றி ஏனைய ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களையும் சேர்த்து நாலாயிர திவ்ய ப்ரபந்தமாக ஆசார்யனாக இருந்து  நாதமுனிகளுக்குக் கொடுத்து அருளினார்.  மேலும் இந்த நாலாயிர ப்ரபந்தங்களுக்குமான விளக்கவுரையையும் நாதமுனிகளிடம் அளித்தார்.

நாதமுனிகளுக்குப் பின் வந்த ஆசார்யர்களைக் கீழ்க்கண்ட வரிசையில் காணலாம்.

  1. புண்டரீகாக்ஷர் எனப்படும் உய்யக்கொண்டார்,
  1. ஸ்ரீராம மிச்ரர் என்று சொல்லப்படுகிற மணக்கால் நம்பி.
  1. யாமுனாசார்யர் எனப்படும் ஆளவந்தார் (நாதமுனிகளின் திருப்பேரனார்)
  1. மஹாபூர்ணர் என்று அழைக்கப்படும் பெரிய நம்பி.  இவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்த மஹாசார்யர்.  ஆளவந்தாரின் சிஷ்யர்களில் முதன்மையாகக் கருதப்பட்டவர்.  மேலும் இவர் இளையாழ்வார் எனப்பட்ட ஸ்ரீராமானுஜருக்கு ஆசார்யராக இருந்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தவர்.  இளையாழ்வாருக்கு ஆளவந்தாரிடம் சிஷ்யராக வேண்டும் என்று விருப்பம்.  காஞ்சீபுரம் தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக இளையாழ்வாரிடம் நீவிர் பெரிய நம்பியிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட அதன்படி பெரிய நம்பியும் ஸ்ரீராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார்.
  1. எம்பெருமானார் எனப்படும் ஸ்ரீராமானுஜர்.  ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்தார்.
  1. கோவிந்தப்பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட எம்பார். இவரும் நம் சம்பிரதாயம் வளர பெரிதும் உதவியவர்.  எம்பெருமானாரைப் பிரிந்திருக்க முடியாமல் அவரைத் தொடர்ந்து பரமபதம் அடைந்தவர்.
  1. பராசர பட்டர். இவர் கூரத்தாழ்வாரின் திருக்குமாரர்.  எம்பாரின் சிஷ்யர்.

13, வேதாந்தி என்று அறியப்படும் நஞ்சீயர்.  மாதாவாசார்யார் என்று அழைக்கப்பட்ட இவர் பராசர பட்டரால் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வரப்பட்டவர்.  மேலும் பராசர பட்டரால் நம் சீயர் என்னும் பொருள் படும்படி “நஞ்சீயர்” என்று அழைக்கப்பட்டவர்.

  1. நம்பிள்ளை. “வாத்ஸ்ய வரதாசார்யர்” என்று அழைக்கப்பட்ட இவர் நஞ்சீயரின் கருணைக்குப் பாத்திரமானபடியால் நம்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.  இவர் சாஸ்திரங்களில் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்.  தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் மிகுந்த புலமை உடையவர்.  திருவாய்மொழிக்கு மிக விளக்கமான உரையை அருளிச் செய்தவர்.  அவை ஈடு வ்யாக்யானம் என்று இன்றளவும் கொண்டாடப் படுகிறது.  இவர் “லோகாசார்யர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
  1. “ஸ்ரீக்ருஷ்ண பாதர்” என்று சொல்லப்படும் வடக்கு திருவீதிப் பிள்ளை.  இவர் நம்பிள்ளையின் பிரதான சிஷ்யராகக் கருதப்பட்டவர்.  இவர் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைச் செவியுற்று ஏடுபடுத்தி நமக்கு வ்யாக்யானங்களாக அருளிச் செய்த வள்ளல்.  இவருடைய திருக்குமாரர்கள் பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
  1. பிள்ளை லோகாசார்யர்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குத் தூணாக விளங்கியவர்.   பல ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச் செய்தவர்.    நம்பெருமாளையும் அந்நியர்கள் படையெடுப்பின் போது பாதுகாத்து வைத்து நமக்காகக் கொடுத்தவர்.
  1. ஸ்ரீசைலேசர் என்று அழைக்கப்பட்ட திருவாய்மொழிப்பிள்ளை,  திருமலையாழ்வார் என்றும் கொண்டாடப் படுபவர்.  இவர்  பிள்ளை லோகாசார்யரின் முதன்மையான சிஷ்யர்.   மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரம் என்ற ஊரிலே அவதரித்தவர்.  இவர் பாண்டிய அரசருக்கு மந்திரியாக சில காலம் இருந்தவர். இவரை கூரகுலோத்தம தாஸர் எனப்படும் பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர் திருத்தி நம்முடைய சம்பிரதாயத்தில் கொண்டு வந்து பிள்ளை லோகாசார்யரின் விருப்பப்படி ஆசார்ய பீடத்தில் அமர்த்தினார்.   ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்து வந்த திருவாய்மொழிப்பிள்ளை காடாக மண்டிக் கிடந்த ஆழ்வார் திருநகரியை சீரமைத்து, ஆதிநாதப் பெருமான் மற்றும் நம்மாழ்வாருக்கு சந்நிதிகளை ஏற்படுத்தி புனர் நிர்மாணம் செய்தவர்.   கலாப காலத்தில் ஊருக்கு வெளியே இருந்த நம்மாழ்வாரை ஊருக்குள் எழுந்தருளச் செய்து அவருக்கு அனைத்துக் கைங்கர்யங்களும் சிறப்பாக நடக்கும்படிச் செய்தவர்.  திருப்புளி ஆழ்வாருக்குக் கீழ் எம்பெருமானார் விக்ரஹம் இருப்பதைக் கனவில் கண்டு அந்த எம்பெருமானார் விக்ரஹத்தை ஆழ்வார் திருநகரியில் மேற்குப் பகுதியில் சதுர்வேதி மங்கலம் என்ற இடத்தை ஏற்படுத்தி எம்பெருமானாருக்காக  பவிஷ்யதாசார்யர் சந்நிதியை ஏற்படுத்தி அனைத்துக் கைங்கர்யங்களும் சிறப்பாக நடக்கும்படி செய்தவர்.  திருவாய்மொழியில் மிகுந்த ஈடுபாடு கொண்டமையால் இவருக்குத் திருவாய்மொழிப் பிள்ளை என்ற பெயர் ஏற்பட்டது.  சடகோபதாசர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.  நம்மாழ்வாரைப் போற்றிப் பாதுகாத்தவர்.
  1. பெரிய ஜீயர் எனப்படும் மணவாள மாமுனிகள்.  இவர் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து திருவாய்மொழிப் பிள்ளைக்கு சிஷ்யராகி பவிஷ்யதாசார்யர் சந்நிதியில் மிகுந்த ப்ரீதியுடன் கைங்கர்யம் செய்து வந்தவர்.  யதீந்த்ரரான  எம்பெருமானாருக்கு  ப்ரியத்துடன் கைங்கர்யம் செய்தமையால் யதீந்த்ர ப்ரவணர் என்று அழைக்கப்படுகிறார்.  திருவாய்மொழிப் பிள்ளை திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு மணவாள மாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளி கலாப காலங்களில் சிதிலமடைந்திருந்த திருவரங்கத்தை சீர் செய்து, கைங்கர்யம் மற்றும் கௌரவங்களை இழந்திருந்தவர்களின் பெருமையை மீட்டுக் கொடுத்து கைங்கர்யங்கள் சிறப்புற நடக்கும்படி செய்தவர்.  திருவாய்மொழியின் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் மிகுந்த ஞானமும் ஈடுபாடும் உடையவர்.  அதனால் ஈட்டுப் பெருக்கர் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் எம்பெருமானுக்கே ஆசார்யனாகக் கருதப்பட்டவர்.  திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் ஆணைப்படி திருவரங்கத்தில் இருந்து பல கைங்கர்யங்களைச் செய்தவர்.  பிற்காலத்தில் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலக்ஷேபமாக சாதிக்கச் சொல்லி எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் தனது உற்சவங்களை நிறுத்தி மிக விரிவாக மணவாள மாமுனிகளின் திருவாய்மொழியின் காலக்ஷேபத்தை அனுபவித்தான்.  காலக்ஷேபத்தின் முடிவில் சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை மணவாள மாமுனிகளுக்கு சம்பாவனையாக சமர்ப்பித்து அவரை மிகவும் கொண்டாடினான்.  இவர் ரம்யஜாமாத்ரு முனி என்றும் அறியப்படுகிறார்.

இவ்வாறாக பெரிய பெருமாள் தொடக்கமாக ஓராண் வழி ஆசார்யர் பரம்பரை தொடங்கி மணவாள மாமுனிகளிடம் முடிந்து மீண்டும் மணவாள மாமுனிகளை ஆசார்யராகக் கொண்டு பெரிய பெருமாள் மூலமாக ஆசார்ய பரம்பரை விரிவடைந்ததை அறிகிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையை பின்வரும் பகுதிகளில் நாம் அநுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

About Sarathy Thothathri

Disciple of SrImath paramahamsa ithyAdhi pattarpirAn vAnamAmalai jIyar (29th pattam of thOthAdhri mutt). Descendant of komANdUr iLaiyavilli AchchAn (bAladhanvi swamy, a cousin of SrI ramAnuja). Born in AzhwArthirungari, grew up in thiruvallikkENi (chennai), lived in SrIperumbUthUr, presently living in SrIrangam. Learned sampradhAyam principles from (varthamAna) vAdhi kEsari azhagiyamaNavALa sampathkumAra jIyar swamy, vELukkudi krishNan swamy, gOmatam sampathkumArAchArya swamy and many others. Full time sEvaka/servitor of SrIvaishNava sampradhAyam. Engaged in translating our AzhwArs/AchAryas works in Simple thamizh and English, and coordinating the translation effort in many other languages. Also engaged in teaching dhivyaprabandham, sthOthrams, bhagavath gIthA etc and giving lectures on various SrIvaishNava sampradhAyam related topics in thamizh and English regularly. Taking care of koyil.org portal, which is a humble offering to our pUrvAchAryas. koyil.org is part of SrI varavaramuni sambandhi Trust (varavaramuni.com) initiatives.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *