சாற்றுமுறை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸர்வ தேஶா  காலேஷ்வவ்யாஹத பராக்ரமா |
ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||

பகவத் ராமானுஜரின் திவ்ய ஆணையானது (விசிஷ்டாத்வைத ஸித்தாந்தமும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளும்) சிறந்த முறையில் எந்தத் தடையுமின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் வளரட்டும், நன்றாக வளரட்டும்.

ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா |
திகந்தவ்யாபிநீ பூயாத் ஸாஹி லோக ஹிதைஷிணீ ||

பகவத் ராமானுஜரின் திவ்ய ஆணையானது ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் ஒளிவிட்டு வளரட்டும். எல்லா திக்குக்களிலும் பரவி இந்த ஆணையானது நன்மைகளைக் கொடுக்கட்டும்.

ஸ்ரீமந்! ஸ்ரீரங்க ஶ்ரியமனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய! |
ஸ்ரீமந்! ஸ்ரீரங்க ஶ்ரியமனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய! ||

ஸ்ரீரங்கஸ்ரீயானது எந்தத் தொல்லைகளும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் நன்றாக வளரட்டும். ஸ்ரீரங்கஸ்ரீயானது எந்தத் தொல்லைகளும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் நன்றாக வளரட்டும்.

நம ஸ்ரீஶைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்ய
ஶாலிநே ||

குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் மிகவும் உயர்ந்ததான கைங்கர்யஸ்ரீயை அடைந்தவரான திருமலை ஆழ்வார் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

ஸ்ரீஶைலே தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருமலையாழ்வார் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையினுடைய திருவருளுக்குப் பாத்திரமானவரும், ஞானம், பக்தி முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவரும், எம்பெருமானாரிடத்தில் பக்தி நிறைந்தவருமான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

[ ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம்ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே ||

(வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரின் தனியன் – ஸ்ரீ வானமாமலை மடம் அநுஸந்தானம்)

ஸ்ரீ மணவாள மாமுனிகள் அடியொற்றி அவரின் பாதரேகை போல இருப்பவரும் தன்னை அன்னாரின் தாஸனாக அனைத்து செயல்பாட்டிற்கும் தன் வாழ்வு நிலைபெற அவரையே சார்ந்திருந்த வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரை வணங்குகிறேன்]

வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்
வாழும் மணவாள மாமுனிவன் வாழியவன்
மாறன் திருவாய்மொழிப் பொருளை மானிலத்தோர்
தேறும் படி உரைக்கும் சீர்

திருவாய்மொழிப்பிள்ளையின் பெரிய க்ருபையால் வாழும் மணவாள மாமுனிகள் வாழி! அந்த மாமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பொருளை இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்கள் அறிந்து தேறும்படி உரைக்கும் அழகு வாழி!

செய்ய தாமரைத் தாளிணை வாழியே
சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே
சுந்தரத் திருத்தோளிணை வாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணிணை வாழியே
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே

மாமுனிகளின் சிவந்த தாமரை போன்ற திருவடிகள் வாழி! அணிந்திருக்கும் காஷாய வஸ்த்ரமும் திருநாபீகமலமும் வாழி! தூய்மையான திருமார்பும் யஜ்ஞோபவீதமும் வாழி! அழகான இரண்டு திருத்தோள்கள் வாழி! கையில் ஏந்திப் பிடித்திருக்கும் த்ரிதண்டம் வாழி! கருணை பொங்கி வரும் இரண்டு திருக்கண்கள் வாழி! பொய் கலவாத மெய்யே வடிவான மணவாள மாமுனிகளின் ஜ்ஞானம் எப்பொழுதும் வாழி!

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ – மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டிரும்

பகவத்/பாகவத அடியார்கள் வாழ! திருவரங்கப் பெருநகர் வாழ! நம்மாழ்வாரின் குளிர்ந்த ப்ரபந்தங்கள் வாழ! கடல் சூழ்ந்த, பொருந்தியிருக்கும் இவ்வுலகம் வாழ! மணவாள மாமுனிகளே! தேவரீர் எங்களுடன் எப்பொழுதும் இருந்து க்ருபை பண்ண வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment