திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 3.3 – ஒழிவில்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 2.10

srinivasan -ahzwar

“தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருக்கும் சரீரத்தைப் போக்கியருள வேண்டும்” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமானும் “உம்முடைய இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பெற்றுக் கொள்ளத்தான் வடக்குத் திருமலையில் வந்த சேவை சாதிக்கிறோம். ஆகையால் இங்கே வந்து நீர் நம்மை அனுபவிக்கலாம்” என்று சொல்ல, ஆழ்வார் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானிடம் தனக்கு நிரந்தரமான கைங்கர்யத்தைத் தந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார்.

முதல் பாசுரம். எல்லோருக்கும் தலைவனான திருவேங்கடமுடையானுக்கு எல்லா விதமான கைங்கர்யத்தையும் செய்ய வேண்டும் என்று தன் பந்துக்களுடன் சேர்ந்து ஆசைப்படுகிறார்.

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டுநாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே

பெரிய ஆரவாரத்தை எழுப்பும் அருவியையுடைய திருவேங்கடமாகிற திருமலையில் இருப்பதாலே அழகையுடைத்தான ஒளிமயமான திருமேனியையுடைய நம்முடைய குலநாதனுக்கு நாம் ஒழிவில்லாத காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து, எல்லா நிலைகளிலும் பிரியாமல் நின்று, ஒன்றும் நழுவாதபடி எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும்.

இரண்டாம் பாசுரம். இப்படிப்பட்ட எல்லோரையும் விட உயர்ந்த தலைவனின் குணங்கள், திருமேனி ஆகியவற்றின் பெருமையை அருளிச்செய்கிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே

நமது பரம்பரபரையில் முதல்வனாகத் திகழும் எம்பெருமான், பரமபதத்திலே வசிப்பவர்கள் தங்கள் தலைவரான சேனை முதலியாருடன், நிலத்தில் தூவின புஷ்பங்கள் மலரும்படியான திருமலையில் வாழ்வதாலே, முடிவில்லாத புகழை உடையவனாய் கறுத்த வடிவழகையுடைய தலைவனாக விளங்குகிறான்.

மூன்றாம் பாசுரம். இப்படி அழகிய திருமேனியை உடையவன் நித்யஸூரிகளால் வணங்கப்படுபவன் என்கிறார்.

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் 
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர்த் திருவேங்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே

திருமேனியைப் பார்த்தாலே ஸ்வாமி என்று தோற்றும்படியாய், ஆச்சர்யமான குணங்கள் மற்றும் சொத்துக்களை உடையவனாய், அழகை உடைய புண்டரீகாக்ஷனாய், சிவந்த கனி போன்ற திருப்பவளத்தை உடையவனாய் நீல ரத்னம் போலே ஒளிவிடும் திருமேனியை உடையவன். தெளிந்து ப்ரகாசமான நிறத்தையுடைய சுனைநீரைக் கொண்ட திருமலையிலே நிற்பதாலே கணக்கற்ற இயற்கையான குணத்தை உடையவனாய் பரமபதத்திலே வசிப்பவர்களுக்கு ஸ்வாமியானவன்.

நான்காம் பாசுரம். என்னைப் போன்ற தாழ்ந்தவனை ஏற்றுக்கொண்ட எம்பெருமானின் எளிமைக்கு முன்பு நித்யஸூரிகளால் வணங்கப்படுவது ஒரு பெருமையோ என்கிறார்.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் 
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

நித்யஸூரிகளுக்குத் தலைவன் என்று சொல்லுவேன். இப்படிச் சொன்னால், மிகவும் தாழ்ந்தவனாய், நல்ல குண பூர்த்தி இல்லாமல் இருக்கும் என்னிடத்தில் அன்பைவைத்து அதனாலே மிகவும் ஒளிபடைத்த திருமேனியையுடையவனான திருவேங்கடத்தானுக்கு அது ஒரு பெருமையோ?

ஐந்தாம் பாசுரம். எளிமையை உடையவன் என்று மட்டுமோ அவன் பெருமை? எளிமையுடன் மிகவும் இனிமையானவனுக்கு ஸர்வேச்வரன் என்பதனால் ஒரு பெருமையோ என்கிறார்.

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ
வேதியர் முழு வேதத்தமுதத்தைத்
தீதில் சீர்த் திருவேங்கடத்தானையே

வைதிகர்களுடைய எல்லா வேதங்களிலும் கொண்டாடப்பட்டபடி மிகவும் இனிமையை உடையவனாய் ஆள்பார்த்து அனுபவம் கொடுக்கும் தீமை இல்லாத எல்லாருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் குணத்தை உடையவனான  ஒளிவிடும் திருவேங்கடமுடையானைக் கொண்டு எல்லாரும் தொழும்படி எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரன் என்றால் அது ஒரு பெருமையோ?

ஆறாம் பாசுரம். விரோதிகள் நீங்கி பகவானை அனுபவிப்பதற்குக் காரணமான எளிமையாக அடையும்படி இருப்பதை அருளிச்செய்கிறார்

வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே

திருமலையிலே நிரந்தரமாக வாழும் ஸ்வாமிக்கு “நம:” என்று சொல்வதை தங்கள் தலையிலே சுமப்பவர்களுக்கு முற்காலத்தில் சேர்த்துவைத்த பாபங்கள் மற்றும் வருங்காலத்தில் வரும் பாபங்கள் ஆகிய இரண்டும் முழுவதுமாக எரிந்துபோய்விடும். இது ஸத்யம். அப்படி எம்பெருமானை அடைபவர்கள் தங்கள் ஸ்வரூபத்துக்கு இனிமையைக் கொடுக்கும் பகவானை அனுபவிப்பது போன்றவைகளையே செய்வார்கள்.

ஏழாம் பாசுரம். எம்பெருமானை அடைவதின் எல்லை நிலமாக அவன் நின்றருளின திருமலை தானே பரம ஸாம்யாபத்தியைத் தரும் என்று அருளிச்செய்கிறார்

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே

உயர்ந்ததான புஷ்பங்களையும் நல்ல நீரையும் சிறந்ததான தீபத்தையும் நல்ல தூபத்தையும் கையிலே ஆசையுடன் வைத்துக்கொண்டு வேறு ப்ரயோஜனங்களில் ஆசை இல்லாமல் நன்றாக அமர்ந்து, நித்யஸூரிகள், தங்கள் தலைவரான சேனைமுதலியாருடன் வணங்கி எழும்படி, திருவேங்கடம் என்ற திருநாமத்தை உடைய மிகவும் பரந்த திருமலை, நமக்கு பரம ஸாம்யாபத்தி மோக்ஷத்தைத் தானே தரும்.

எட்டாம் பாசுரம். இப்படிப்பட்ட திருமலையை அனுபவிக்க, ப்ராப்திக்குத் தடையாக இருப்பவை தானே அழிந்துவிடும் என்கிறார்.

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

கல் மாரியாலே திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் துன்பப்பட, கோவர்த்தன மலையை ஏந்தி அவர்களைக் காத்தவனாய், அன்று பூமியை அளந்து தனக்காகக் கொண்ட உபகாரகனான உயர்ந்த தலைவன் சென்று சேர்ந்த திருவேங்கடமாகிற பெரிய திருமலை ஒன்றை மட்டும் தொழ, நம்முடைய விரோதிகள் தானே ஒழிந்துவிடும்.

ஒன்பதாம் பாசுரம். நல்ல கதியைக் காட்டக்கூடிய திருவேங்கடமுடையானுக்கும் விரோதியைப் போக்கும் தன்மை இந்த தேசத்துடன் இருக்கும் ஸம்பந்தத்தாலே என்கிறார்.

ஓயும் மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

அப்பொழுது அலர்ந்த திருவடித்தாமரைகளை வாக்குள்ளும் மனத்துள்ளும் வைப்பவர்களுக்கு பலவீனத்தைக் கொடுக்கும் வயோதிகம், பிறப்பு, இறப்பு, நோய்கள் ஆகியவை அழியும்படிச் செய்பவன் திருமலையிலே வாழும் கண்ணன் எம்பெருமான்.

பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருவேங்கடத்தைப் பற்றுங்கள் என்று தன் பந்துக்களுக்கு உபதேசம் செய்கிறார்.

வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே

உங்களுக்கு நிர்ணயித்து வைத்த நாளினுடைய எல்லையானது உங்களருகில் வந்து பலவீனத்தைத் தந்து அதன் காரணமாக இளைப்பதற்கு முன்னே, விரிகிற பணங்களையுடைய அநந்தனை படுக்கையாக உடைய ஸர்வேச்வரனின் திருமலையில், செறிந்த சோலையினுடைய அழகிய புஷ்பங்களையுடைய பரந்த திருத்தாழ்வரையைச் சென்று அடையுங்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக கைங்கர்யஸ்ரீ கிடைக்கும் என்பதை அருளிச்செய்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்துகொண்ட ஸர்வேச்வரனை, உயர்ந்த சோலையையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் சொல்ல வல்லவர்கள் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று உலகம் புகழும்படி அடிமை செய்து வாழப்பெறுவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment