திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 2.10 – கிளரொளி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 1.2

kallalagar-mulavar-uthsavar-azhwar

ஆழ்வார், எம்பெருமான் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட எம்பெருமானும் தெற்குத் திருமலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை ஸ்தலத்தை எண்ணித் தான் அங்கே இருக்கும் இருப்பை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்து “நாம் உமக்காக இங்கே வந்துள்ளோம், நீர் இங்கே வந்து எல்லா விதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்” என்று சொல்ல, ஆழ்வாரும் திருமலையை முழுவதுமாக அனுபவித்து இனியராகிறார்.

முதல் பாசுரம். மிகவும் ஒளிவிடும் ஸர்வேச்வரன் விரும்பிய திருமலையே நமக்குக் குறிக்கோள் என்கிறார்.

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே

கிளர்ந்து வருகிற ஞான ஒளிக்கு யோக்யதை உண்டான இளமையானது கெடுவதற்கு முன்னே வளர்ந்து வருகிற குண ஒளியையுடைய ஆச்சர்ய ரூபனான ஸர்வேச்வரன் பொருந்தி வாழ்கிற திவ்யஸ்தானமாய் வளர்ந்திருந்தாலும் இளமையாக இருக்கும் பொழில்களாலே சூழப்பட்டு அதனாலே மாலிருஞ்சோலை என்று திருநாமம் கொண்ட திருமலையை வேறு ப்ரயோஜனங்களை எதிர்பார்க்கும் தளர்த்தி இல்லாமல் அடைவதுவே சிறந்தது.

இரண்டாம் பாசுரம். அழகருடைய திருமலையோடு சேர்ந்து இருக்கும் திவ்யதேசத்தைக் கொண்டாடுவதே குறிக்கோள் என்கிறார்.

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதி அது ஏத்தி எழுவது பயனே

ஸாமர்த்யம் மற்றும் இளமை ஆகியவற்றை உடைய ஸ்த்ரீகளுடைய தாழ்ந்ததான காமச்சொற்கள் மற்றும் செயல்களை ஆசைப்படாமல் முழங்குகிற ஸ்ரீபாஞ்சஜன்யத்தை உடையவராகையாலே மிகவும் அழகாக இருக்கும் அழகருக்கு தனித்துவம் வாய்ந்த ஸ்தானமாய் சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரங்களைக் கொண்ட திருமலையில் இருக்கும் ப்ரஸித்தமான திவ்யதேசத்தை ஸ்தோத்ரம் பண்ணி வாழ்ச்சிபெறுவதே குறிக்கோள்.

மூன்றாம் பாசுரம். பெரிய வள்ளல் தன்மையை உடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையோடு சேர்ந்த அருகாமை மலையை அடைவதே குறிக்கோள் என்கிறார்.

பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை  அடைவது அது கருமமே

நெஞ்சே! பயனற்ற செயலைச் செய்து ஒரு ப்ரயோஜனமும் இல்லை. தூறலும் துளியுமான காளமேகம்போலே ஸ்வபாவத்தையுடைய அழகர் எம்பெருமான் ஈடுபாடு கொண்டு நிரந்தரமாக வாழ்கிற ஸ்தானமாய், கண்டார் நெஞ்சு கலங்கும்படி அழகான பொழில் சூழ்ந்த திருமலைக்கு அருகில் இருக்கும் மலையை அடைவதுவே செய்ய வேண்டியது.

நான்காம் பாசுரம். நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை அடைவதுவே செய்யவேண்டியது என்கிறார்.

கருமவன் பாசம் கழித்து உழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே

கர்மங்களாகிற கழற்ற அரிய கயிறுகளைக் கழற்றி அடிமைசெய்து ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடையவே கோபர்கள்/கோபிகைகளின் துன்பம் தீரும்படி பெரிய மலையை எடுத்துக் காத்தவன் தன்னுடைய காப்பாளன் என்கிற பெருமை விளங்கும்படி வாழ்கிற ஸ்தானமாய் வருகிற மேகங்கள் தவழும்படி மிகவும் உயர்ந்து பரந்த சோலையையுடைத்தான திருமலையை அடைவதே செய்யவேண்டியது.

ஐந்தாம் பாசுரம். ரக்ஷிக்க உதவும் திருவாழியையுடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையின் சுற்றில் இருக்கும் மலையை அடைவது நல்ல வழி என்கிறார்.

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப் படை அவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை
புற மலை சாரப் போவது கிறியே

பல விதமான வலிமையினாலே கொடிய பாபங்களை வளர்த்துக் கொள்ளாமல் அடியார்களைக் காக்கும் தர்மத்தில் முயலும் திருவாழியை ஆயுதமாக உடையவனுடைய இருப்பிடமாய், வந்து அடைபவர்களுக்கு நன்மை செய்யும் களங்கம் இல்லாத சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின் சுற்றில் இருக்கும் மலைக்கு அருகே போவது நல்ல வழி.

ஆறாம் பாசுரம். அடியார்களிடத்திலே மிகுந்த அன்புகொண்ட எம்பெருமான் வாழ்கிற திருமலைக்குப் போகும் வழியை நினைப்பதே நன்மை என்கிறார்.

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே

உலக விஷயங்களில் ஈடுபட நினைக்கும் தாழ்ச்சியைச் செய்யாமல் இதை நல்ல வழி என்று நினையுங்கள். ஏனெனில் உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுதுசெய்த க்ருஷ்ணனுடைய கோயிலாய், கன்றுகளோடேகூட மான்பேடைகள் சேருகிற திருமலையினுடைய வழியிலே இருக்கவேண்டும் என்கிற அதையே நினைக்கை நமக்கு ப்ரயோஜனம்.

ஏழாம் பாசுரம். ப்ரளய ஆபத்திலே நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற திருமலை விஷயத்தில் செய்யும் அனுகூலமான செயல்களே சிறந்தது என்கிறார்.

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே

ஸம்ஸாரம் என்னும் நரகத்தில் அழுந்தாதே இதை உயர்ந்த குறிக்கோள் என்று எண்ணுங்கள். முற்காலத்திலே பூமியை இடந்தெடுத்தவன் நிரந்தரமாக வாழ்கிற கோயிலாய், களங்கமில்லாத சந்த்ரன் பொருந்தியிருக்கும் திருமலையை தலைவைன்/தொண்டன் என்ற க்ரமத்தில் அனுகூலமான செய்லகளைச் செய்து பொருந்துவதே உயர்ந்த ப்ரயோஜனம்.

எட்டாம் பாசுரம். அடியார்கள் விஷயத்தில் நன்மைகளைச் செய்யும் க்ருஷ்ணன் வாழ்கிற திருமலையிலே நிரந்தரமாக அனுகூலமான செயல்களைச் செய்வதே நம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்கிறார்.

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே

அடியார்களுக்கு அடங்கி இருக்கும் அனுகூலமான செயலை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்யபூதனுடைய கோயிலான, பரமபதத்தைச் சேர்ந்தவர்களும் அனுகூலமான செயல்களைச் செய்யும் திருமலையைக் குறித்து, வலிமையை உண்டாக்கி நிரந்தரமாக அந்த வலிமையை வேறு விஷயங்களில் செலவிட்டு வீணாக்காமல், ப்ரதக்ஷிணம் முதலிய அனுகூலமான செயல்களைச் செய்து, நிரந்தரமாகக் கூடி இருத்தலே ந்யாயம்.

ஒன்பதாம் பாசுரம். பூதனையைக் கொன்ற எம்பெருமான் வாழ்கிற திருமலையைத் தொழவேண்டும் என்கிற நினைவில் உறுதியே வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழக்களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே

மிகவும் வலிமையான பாபங்களிலே மூழ்காதே, இது ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்று நினையுங்கள். பேயான பெண்ணை அழைத்தவன் பொருந்து வாழும் பெரிய கோயிலாய் ஆனைக்கன்றுகளின் கூட்டம் சேரும் திருமலையை தொழவேண்டும் என்கிற நினைவிலே உறுதியுடன் இருக்கையே ஸம்ஸாரத்தை வெல்வதற்கான வழி.

பத்தாம் பாசுரம். வேதத்தை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவனான எம்பெருமான் வாழ்கிற திருமலையில் புகுகிற இதுவே குறிக்கோள் என்று தொடங்கிய உபதேசத்தை முடித்தருளுகிறார்.

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே

எளிமையான வழி என்று நினைத்து களவாடுதல், பார்த்துக்கொண்டிருக்கும்போதே அபஹரித்தல் ஆகியவைகளைச் செய்யாமல் முற்காலத்தில் கீதோபதேசம் மூலமாக, வேதார்த்தத்தை விவரித்தவனான எம்பெருமான் விரும்பி வாழும் கோயிலாய், மென்மையை உடைய மயில்கள் சேர்ந்து வாழும் ஓங்கி, பரந்த சோலைகளில் பூவானது மலருகிற திருமலையிலே சென்று புகுவதே குறிக்கோள்.

பதினொன்றாம் பாசுரம். பகவானை அடைவதை இந்தப் பதிகத்துக்கு ப்ரயோஜனமாக அருளிச்செய்கிறார்.

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து
அருள் உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

அடியார்களின் அனுகூலம் ப்ரயோஜனம் என்று இந்த உலகத்தைப் படைத்தவனுடைய தயை, க்ஷமை முதலிய குணங்களின் பெருமை விஷயமாக, அறியாமை சற்றும் இல்லாதவராய், உயர்ந்ததான ஆழ்வார்திருநகரிக்குத் தலைவராய், பெரிய வள்ளலான நம்மாழ்வார், உண்மை ஞானமானது ஆத்மாக்கள் பெறும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரத்துள் இந்தப் பதிகமானது, ஸம்ஸாரத்தை அழித்து பரிபூர்ண க்ருபையையுடைய அழகருடைய திருவடிகளைப் பெற்றுக் கொடுக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment