வாழிதிருநாமங்கள் – ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார்

ஸேனை முதலியார் வைபவம்

ஸேனை முதலியார் என்பவர் விஷ்வக்ஸேனர் என்று கொண்டாடப்படும் நித்யஸுரி ஆவார்.   நித்யஸுரிகள் என்பவர்கள் பரமபதத்தில் இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்.  அவர்களுக்கு சம்ஸார பந்தங்கள் என்பது அறவே கிடையாது.  அந்த நித்யஸுரிகளுக்குத் தலைவராகக் கருதப்படுபவர் விஷ்வக்ஸேனர்.  எம்பெருமானுக்கு சேனாதிபதியாக இருந்து நிர்வாகம் செய்பவர்.  எம்பெருமான் பரமபதத்தில் பிராட்டிமார்களுடனும், நித்யஸுரிகளுடனும், முக்தர்களுடனும் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டு இருப்பான்.  விஷ்வக்ஸேனர் ஒரு மூத்த மந்திரி போல் இருந்து அனைத்து நிர்வாகங்களையும் சிறப்பாக நடத்துவார் என்பதை அறிகிறோம். “த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா” என்று ஸ்தோத்ர ரத்நத்தில் இவருடைய வைபவத்தை ஆளவந்தார் அருளியுள்ளார்.  எம்பெருமான் அமுது செய்த சேஷப் பிரசாதத்தை முதலில் உண்ணக் கூடியவர் இந்த விஷ்வக்ஸேனர் என்றும் அறியலாம்.  எம்பெருமானுடைய சேஷத்தை உண்ணக் கூடியவர் என்னும் பொருள் படும்படி “சேஷாஸநர்” என்றும் அழைக்கப் படுகிறார்.  இவருடைய திருநக்ஷத்ரம் ஐப்பசி பூராடம்.  நித்யஸுரிகளுக்குப் பிறப்பு இல்லாதபோது திருநக்ஷத்ரம் எப்படி இருக்கும் என்ற ஐயம் எழலாம்.  எவ்வாறு எம்பெருமான் அவதாரம் எடுத்து இந்தப் பூவுலகில் எழுந்தருளினாரோ அதே போன்று எம்பெருமானின் அர்ச்சாவதார காலத்தில் விஷ்வக்ஸேனரும் உடன் எழுந்தருளியிருப்பார்.  ப்ரம்மோத்ஸவ காலங்களில் திவ்யதேசங்களில் கொடியேற்றம் முன்பே நகர சோதனை என்ற பெயரில் எம்பெருமான் வீதி உலா செல்லும் திருவீதிகளை சோதனை செய்து வருவார்.  இவ்வாறு ஸேனை முதலியார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.  பெரிய பிராட்டிக்குப் பிறகு, மூன்றாவது ஆசார்யராக இவர் இருக்கிறார்.

ஸேனை முதலியாரின் வாழி திருநாமம்

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸேனை முதலியாரின் வாழி திருநாமம் விளக்கவுரை

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே – சிறப்புடைய ஐப்பசி மாதத்தில் பூராட நக்ஷத்ரத்தில் உதித்த செல்வன் (எம்பெருமானுக்கு விடாது கைங்கர்யம் செய்யும் செல்வத்தை உடையவர்) வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே – ஒண்டொடியாள் என்றால் வளைந்த அழகிய கைகளை உடையவள்.  சூத்ரவதி என்பது விஷ்வக்ஸேனரின் தர்மபத்தினி.  வளைந்த அழகிய கைகளையுடைய சூத்ரவதி திருமார்பில் உறைந்திருக்கக் கூடிய விஷ்வக்ஸேனர் வாழ்க.  ஒண்டொடியாள் என்ற சொல்லை நம்மாழ்வாரும் தனது பாசுரங்களில் எடுத்து ஆண்டிருக்கிறார்.  பிராட்டியை வர்ணிக்கும்போது ஆழ்வார் அழகிய வளைந்த கைகளை உடையவள் என்று கூறுகிறார்.  எவ்வாறு பிராட்டியானவள் எம்பெருமானை “அகலகில்லேன் இறையுமென்று” என்று இமைப்பொழுதும் எம்பெருமானின் திருமார்பை விட்டுப் பிரியாது இருக்கிறாளோ அவ்வாறே சூத்ரவதியும் விஷ்வக்ஸேனரை விட்டுப் பிரியாது இருக்கிறாள்.  விஷ்வக்ஸேனரும் எம்பெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறார்.   பல திவ்யதேசங்களில்  ப்ரம்மோத்சவம் துவங்குவதற்கு முன்பாக மண்ணில் விதைகளை விதைத்து “திருமுளைச்சாற்று” என்ற வைபவம் நடக்கும். இந்த வைபவத்தை விஷ்வக்ஸேனர்தான் மேற்பார்வையிடுவதாக ஐதீகம்.  நகர சோதனை செல்வதற்கு முன்பாக விஷ்வக்ஸேனரை ஒரு பல்லக்கில் எம்பெருமானுக்கு முதுகு காட்டியபடி எழுந்தருளச்செய்து இந்த திருமுளைச்சாற்று வைபவத்தை நடத்துவர்.  மற்றைய ஆழ்வார்களோ ஆசார்யர்களோ எழுந்தருளச் செய்யும்போது எம்பெருமானைப் பார்த்தபடிதான் எழுந்தருளச் செய்வார்கள்.  இவர் எம்பெருமானின் பிரதிநிதியாக இருப்பதால் எம்பெருமானைப் போலவே எழுந்தருளியிருப்பார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்.  தன் பத்தினியான வளைந்த அழகிய கைகளையுடைய சூத்ரவதி உறையும் திருமார்பை உடைய விஷ்வக்ஸேனர் பல்லாண்டு வாழ்க.

ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே – இந்தப் பூவுலகில் சடகோபன் எனப்படும் நம்மாழ்வாருக்கு நல்ல உபதேசங்களை அருளியவர் விஷ்வக்ஸேனர்.  எம்பெருமான் நம்மாழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளிய போதும், விஷ்வக்ஸேநர் மூலமாக நம்மாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து நல்ல உபதேசங்களைச் செய்து நம்மாழ்வாருக்கும் குரு பரம்பரையில் தனக்கு அடுத்தபடியான ஆசார்யர் ஸ்தானத்தை அருளியவர் இந்த ஸேனை முதலியார்.  அவ்வாறு நம்மாழ்வாருக்கு உபதேசங்களை செய்வித்த ஸேனை முதலியார் பல்லாண்டு வாழ்க.

எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே –  எம்பெருமான் சார்பில் எம்பெருமான் செங்கோலையும், கையில் ஒரு பிரம்பையும் வைத்துக்கொண்டு எம்பெருமானின் அரசை வழி நடத்தும் விஷ்வக்ஸேநர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே – முப்பத்து மூவர் என்பது ஒவ்வொரு அண்டத்திற்கும் ப்ரம்மா (1), இந்த்ரன் (1), த்வாத ஆதித்யர்கள் (12), ஏகாத ருத்ரர்கள் (11), அஷ்ட வசுக்கள் (8) என்று முப்பத்து மூன்று தேவர்கள் உண்டு.  இந்த முப்பத்து மூன்று தேவர்களும் விஷ்வக்ஸேநரின் சொற்படி நடப்பவர்கள்.  அவ்வாறு இந்த முப்பத்து மூவரும் பணிந்து நடக்கும் சிறப்புடைய விஷ்வக்ஸேநர் வாழ்க.

பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே – தாமரை மலரில் தோன்றிய ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவடிகளை வணங்குபவர் விஷ்வக்ஸேநர்.  குரு பரம்பரையில் பெரிய பிராட்டியாரின் சிஷ்யராக இருக்கக் கூடியவர் விஷ்வக்ஸேநர்.  அவர் வாழ்க.

தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே  – திருவரங்கத்தில் பெரிய பெருமாளின் முதல் ப்ராகாரத்திலேயே விஷ்வக்ஸேநரின் சந்நிதி அமைந்துள்ளது. சிறந்த புகழை உடைய திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதரை எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய விஷ்வக்ஸேநர் பல்லாண்டு வாழ்க என்று இந்த வரியில் காட்டப்படுகிறது.

சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே – படைத்தளபதி, சேனாதிபதி என்று சொல்லக் கூடிய விஷ்வக்ஸேநருடைய சிவந்த தாமரை போன்ற திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ்க என்று விஷ்வக்ஸேநரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.

நம்மாழ்வார் வைபவம்

சடகோபன், மாறன், மகிழ்மாறன், வழுதிவளநாடன் என்று வேறு பெயர்களை உடையவர்.  வைஷ்ணவ குலபதி என்று கொண்டாடப்படுபவர்.  ப்ரபந்நர்களுக்குத் தலைவராக இருப்பதால் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று அழைக்கப்பட்டவர்.  ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரிலே எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்று அவதரித்தவர்.  நம்மாழ்வாருடைய திருநக்ஷத்ரம் வைகாசி விசாகம்.  இன்றளவும் வைகாசி விசாகம் ஆழ்வார் திருநகரியிலே மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானுக்கு உள்ள அனைத்து பெருமைகளும் ஆழ்வாருக்கும் உண்டு.  எம்பெருமானுக்கு இரண்டு ப்ரம்மோத்ஸவம்.  ஆழ்வாருக்கும் இரண்டு அவதார உத்ஸவங்கள்.  ஒரு உத்ஸவம் வைகாசி விசாகத்தில் கொண்டாடப்படும். மற்றொன்று மாசி விசாகத்தில் விக்ரஹ ப்ரதிஷ்டை உத்ஸவம் கொண்டாடப்படும்.  ஆழ்வார் திருநகரி பெருமாளுக்கு கொடிமரம் உள்ளது போல் ஆழ்வாருக்கும் ஹம்ச கொடியுடன் கூடிய கொடிமரம் உள்ளது.  நான்கு வேதங்களின் சாரங்களையும் நான்கு ப்ரபந்தங்களில் (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி) நம்மாழ்வார் அருளிச் செய்தமையால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று அறியப்படுகிறார்.

நம்மாழ்வார் வாழி திருநாமம்

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவ்வியென்றும் வாழியே
இருக்குமொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

நம்மாழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே – நம்மாழ்வார் திருக்குருகூரில் வீற்றிருக்கும் எம்பெருமானுக்கு நிகரான வைபத்தைப் பெற்றதனால் பெருமாள் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது. திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வாரின் திருவடிகள் பல்லாண்டு வாழ்க.

திருவான திருமுகத்துச் செவ்வியென்றும் வாழியே – நம்மாழ்வாரின் பொன்னைப் போன்ற திருமுகத்தில் விளங்கும் பொலிவானது  (செவ்வி) எந்தக் காலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது இவ்வரியில் காட்டப்படுகிறது.

இருக்குமொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே – வேதத்தில் முதன்மையான வேதமான ரிக் வேதம் தமிழில் “இருக்கு” என்று சொல்லப்பட்டுள்ளது.   அநாதியான வேதத்தில் எண்ணற்ற சாகைகள் உள்ளன.  அதில் கூறப்பட்ட சாரங்களை நமக்கு தமது ப்ரபந்தங்களில் எளிமையாக நமது நெஞ்சில் பதியும் வண்ணம் அருளிச் செய்தவர் நம்மாழ்வார்.  அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே – என்னுடைய தந்தையான (அப்பிள்ளையின் வாய் மொழியில்) எதிராசர் (எதிகளுக்கு தலைவரான எம்பெருமானார்) என்று அழைக்கப்படும் ராமாநுஜருக்கு இறைவனான நம்மாழ்வார் பல்லாண்டு வாழ்க. “பூமன்னு மாது பொருந்திய மார்பன், புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்” என்று திருவரங்கத்தமுதனார் இராமாநுச நூற்றந்தாதியில் பாடிய வண்ணம் நம்மாழ்வாரின் திருவடியை அடைந்து உஜ்ஜீவனம் அடைந்தவர் எம்பெருமானார்.  நம்மாழ்வாரே ராமாநுஜரிடம் மிகுந்த உகப்புடன் இருந்தவர்.  அத்தகைய சிறப்பு பெற்ற நம்மாழ்வார் வாழ்க.

கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே –   நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் பலப் பாசுரங்களிலும், ஆழ்வாரின் பாசுரங்களைச் சேவித்தவர்கள் மீண்டும் இப்புவியில் பிறக்க மாட்டார்கள் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு நம்மாழ்வாரின் பாசுரங்களைச் சேவிப்பதன் மூலம் கர்ப்பவாசம் செய்யாமல் (மீண்டும் பிறவாமல்) பரமபதம் சென்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும் வண்ணம் நம்மைக் காத்து ரக்ஷிக்கும் தன்மை பெற்ற நம்மாழ்வார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பட்டுள்ளது.

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே – காசினி என்றால் உலகம்.  இப்பூவுலகில் நமக்கு ஆசார்யனை காட்டிக் கொடுத்தவர் நம்மாழ்வார்.  நாதமுனிகளை ஒரு ஆசார்யனாக உருவாக்கி நமக்கு அளித்தவர் நம்மாழ்வார். நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் வல்லவராதலால் திருப்புளியாழ்வார் மரத்தினடியில் அமர்ந்து பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை அநுஷ்டிக்க நம்மாழ்வார் அவர் முன் தோன்றி “என்ன வேண்டும்” என்று வினவ, அதற்கு நாதமுனிகள் “தேவரீர் இயற்றிய ஆயிரம் பாசுரங்களைத் தந்தருள வேண்டும்” என்றார்.  நம்மாழ்வார் தாம் இயற்றிய அனைத்து ப்ரபந்தங்கள் (முறையே திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி) மட்டுமன்றி ஏனைய ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களையும் சேர்த்து நாலாயிர திவ்ய ப்ரபந்தமாக கொடுத்து அதற்கான விளக்கங்களையும் நாதமுனிகளுக்குக் கொடுத்து அருளினார்.  அதன்மூலம் குரு பரம்பரையில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யராக நாதமுனிகளைக் காட்டினார் என்றும் ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

மேலும் ராமாநுஜரைக் காட்டியதாகவும் கொள்ளலாம். மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீரைக் காய்ச்சும்பொழுது முதலில் கிடைத்த திருமேனி பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்) விக்ரஹம் கை கூப்பிய வண்ணம் கிடைத்தது.  மதுரகவி ஆழ்வார் ஆச்சர்யத்துடன் நம்மாழ்வாரிடம் நான் தேவரீரது விக்ரஹம் வேண்டினேன் ஆனால் கிடைத்திருப்பதோ கை கூப்பியபடி வேறு ஒரு விக்ரஹம் என வினவ, நம்மாழ்வார் இவர் என்னுடைய திருவடி ஸ்தானம் ஆனவர்.  பிற்காலத்தில், ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆசார்யர் தோன்றி வைணவ சம்பிரதாயத்தை சிறந்த முறையில் வளர்ப்பார் என்று உரைக்கிறார்.  மதுரகவி ஆழ்வார் தேவரீருடைய விக்ரஹம் வேண்டும் என வினவ, நம்மாழ்வார் மீண்டும் தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் என்று அருள, அதன்படி கிடைக்கப் பெற்ற விக்ரஹம் தான் நாம் இப்போது ஆழ்வார் திருநகரியில் தரிசிக்கும் ஆழ்வார் திருமேனி ஆகும்.  இது நம்மாழ்வார் காட்டிக் கொடுத்த ராமாநுஜரின் முதல் திருமேனி ஆகும்.

மேலும் நாதமுனிகளுக்கு ப்ரபந்தங்களை அருளும்போது “பொலிக பொலிக” பதிகம் வரும்போது, ஒரு சந்நியாசியின் வடிவில் நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கனவில் காட்சி தருகிறார்.  நாதமுனிகள் அந்த திருமேனியை உகப்புடன் தரிசித்து அத்திருமேனியை நம்மாழ்வாரிடம் வேண்ட, இத்திருமேனி உடைய ஆசார்யர் பிற்காலத்தில் அவதரிப்பார் என்று நம்மாழ்வார் அறிவித்தார்.  மேலும் ஒரு சிற்பியைக் கொண்டு அத்திருமேனியை வடிவமைத்து நாதமுனிகளிடத்தில் கொடுத்தார் நம்மாழ்வார்.  இந்த இரண்டாவது பவிஷ்யதாசார்யர் திருமேனி நாதமுனி காலம் தொட்டு, உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி என்று இறுதியில் திருக்கோட்டியூர் நம்பியை அடைந்து திருக்கோட்டியூரில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் நாம் சேவிக்கும்படி உள்ளது.  அத்தகைய சிறப்புடைய ஆசார்யர்களான நாதமுனிகளையும்  ராமாநுஜரையும் இப்புவிக்கு காட்டிக் கொடுத்த நம்மாழ்வார் வாழ்க.

வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே – என்னுடைய வருத்தங்கள் அனைத்தும் நீக்கி என்னை வாழ்ச்சி அடையச் செய்த நம்மாழ்வார் வாழ்க.  நம்மாழ்வார் தமது பாசுரங்கள் மூலமாக எம்பெருமானை, ஆசார்யனைக் காட்டிக் கொடுத்துள்ளார்.  அவர் பாசுரங்களைச் சேவிப்பதன் மூலம் எம்பெருமான் மற்றும் ஆசார்யன் அனுக்ரஹம் பெற்று மேன்மை அடையலாம் என்று அறிகிறோம்.  நம்மை வாழ்ச்சி அடையச் செய்த நம்மாழ்வார் பல்லாண்டு வாழ்க.

மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே – மதுரகவி ஆழ்வாருக்கு ஆசார்யனாக இருந்தவர் நம்மாழ்வார்.  “தேவு மற்றறியேன்” என்று மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒன்றும் எண்ணாதவர்.  அவ்வாறு மதுரகவி ஆழ்வாருக்கு அனைத்துமாக இருந்த நம்மாழ்வார் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நம்மாழ்வாரின் வாழி திருநாமம் முற்றுப்பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment