உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி

ஆழ்வார் எதிராசராம் இவர்கள் வாழ்வாக

வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் 

இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம் 

இருபத்தொன்றாம் பாசுரம். ஆழ்வார்கள் பதின்மர் என்பதும் உண்டு பன்னிருவர் என்பதும் உண்டு. எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தவர்களை மட்டும் பார்த்தால், இவர்கள் பதின்மர்கள். இவர்களுடைய மாத, நக்ஷத்ரங்களை நன்றாகக் காட்டியருளினார் கீழே. ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகிய இருவரும் ஆசார்ய அபிமான நிஷ்டர்கள். ஆண்டாள் “விட்டுசித்தர் தங்கள் தேவர்” என்று தன் தகப்பனாரான விஷ்ணுசித்தர் விரும்பிய தெய்வம் என்றே எம்பெருமானை அனுபவிக்கிறாள். மதுரகவி ஆழ்வாரும் “தேவ மற்றறியேன்” என்று நம்மாழ்வாரிடமே பக்தி கொண்டிருந்தார். இவ்விருவரும் சேர்க்கப்பட்டால் ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களுடன் நம் ஆசார்ய பரம்பரையின் முக்யமான ஆசார்யரான “மாறன் அடி பணிந்து உய்ந்தவரான” எம்பெருமானாராம் யதிராஜரையும் சேர்த்து இங்கே அனுபவிக்கிறார். எம்பெருமானாரும் “ஸ்ரீராமானுஜம்” என்று நம்மாழ்வாரின் திருவடியாகவே கொண்டாடப்படுகிறார். இம்மூவருக்கும் மற்றுமொரு தொடர்பும் உண்டே – ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரம் என்றும், மதுரகவி ஆழ்வார் பெரிய திருவடியின் அவதாரம் என்றும் எம்பெருமானார் ஆதிசேஷ அவதாரம் என்றும் கொண்டாடப்படுவர். இவர்கள் அவதரித்த தினங்களின் பெருமையை இவ்வுலகுக்கு உரைப்போம் என்று அருளிச்செய்கிறார்.

பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மற்றும் யதிகட்கிறைவரான ஸ்ரீ ராமானுஜர் ஆகிய இவர்கள் இவ்வுலகத்தில் உள்ளோரின் வாழ்ச்சிக்காக வந்து அவதரித்த மாதங்கள் மற்றும் நக்ஷத்ரங்களின் பெருமையை இந்த உலகத்தவர்களுக்கு எடுத்துரைப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment