திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.7 – நோற்ற

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 5.5

எம்பெருமான் தன்னிடத்தில் சிறிது ஆசையுடையவர்களையும் ரக்ஷிப்பவனாக இருந்தும் ஏன் இன்னும் தன்னை வந்து ரக்ஷிக்கவில்லை என்று பார்த்தார் ஆழ்வார். தான் மற்றைய உபாயங்களில் ஈடுபட்டிருப்பதாக நினைத்து எம்பெருமான் நம்மை ரக்ஷிகாமல் இருக்கலாம் என்று நினைத்து ஆழ்வார் இந்தத் திருவாய்மொழியில் வானமாமலை எம்பெருமானுக்குத் தன்னுடைய தாழ்ச்சியையும் தனக்கு வேறு உபாயங்களில் அந்வயம் இல்லாததையும் அறிவித்து, சரணாகதி செய்கிறார்.

முதல் பாசுரம். உன்னை அடைவதற்காக சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உபாயங்கள் என்னிடம் இல்லாதபோதும் உன்னை அடைய வேண்டும் என்கிற ஆசை உள்ளது. இப்படி இருந்தும் அடியார்களுடன் கூடியிருப்பதற்கு இங்கே எழுந்தருளியிருக்கும் உனக்கு வெளிப்பட்டவனோ என்கிறார்.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்றும் 
ஆற்றகிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே

பலத்தைப் பெறுவதற்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகத்தை உடையவனல்லேன். ஆதலால், நுண்ணியதான ஞான யோகத்தை உடையவனல்லேன். இவை இரண்டாலும் கூடும் பக்தியும் இல்லாதபோதும் உன் குணங்களை நினைத்துப் பார்த்த பின்பு உன்னை விட்டு ஒரு க்ஷணமும் வாழ முடியவில்லை. ஆதிசேஷணைப் படுக்கையாகக் கொண்டு உன் திருமேனியை அவனுக்குக் கொடுத்த ஸ்வாமியாய் சேற்று நிலத்தில் தாமரையானது செந்நெலோடே கலந்து மலரும்படி அழகான சிரீவரமங்கல நகரிலே அடியார்களைக் காப்பதற்காகக் கொண்ட தனித்துவம் வாய்ந்த வீற்றிருந்த திருக்கோலத்தாலே எனக்கு உபகாரகனானவனே! அங்கே ரக்ஷகனாக இருக்கும் உன்னால் காக்கப்படுபவர்களுள் நான் வெளிப்பட்டவன் அல்லேன்.

இரண்டாம் பாசுரம். என்னை ஏற்றுக்கொள்வதற்குத் தடைகள் இருந்தாலும், அவற்றை போக்கக் கூடியவன் நீயே என்பதால், எனக்கு க்ருபைபண்ணி அருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே 
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கருளாயே

உன் அருளால் உன்னை அடைந்து உன்னிடத்திலும் அல்லேன். நீ கைக்கொள்ளும் வரை காத்திருக்கலாம் என்று இங்கும் என்னால் இருக்க முடியவில்லை. மிகவும் இனியவனான உன்னைக் காணவேண்டும் என்கிற ஆசையில் அகப்பட்டு, நான் உலக விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இல்லை. இலங்கையை அழித்து, பின்பு பெற்றுக் கொண்ட ஸ்வாமியாய், சந்த்ரனோடு சேரும்படி மாணிக்கமயமான மாடங்கள் வளர்கிற சிரீவரமங்கலநகரிலே நிரந்தரமாக வாழ்பவனாய், எதிரிகளை அழிக்க உதவும் திருச்சங்கு திருவாழி ஆகியவற்றை உடையவனே! உன்னைத் தவிர வேறு துணையில்லாத எனக்கு நீ க்ருபை பண்ணி அருள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். பரத்வத்தை வெளியிடும் சிறந்த திருமேனிகளைக் கொண்டு, என்னை ஏற்றுக்கொண்டு என் தொண்டையும் ஏற்றுக்கொண்ட உபகாரத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன் என்கிறார்.

கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட எம் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே

கருடனாகிற பறவையைக் கொடியாகவும் திருவாழியை ஆயுதமாகவும் பரமபதத்தை நாடாகவுமுடைய காளமேகம் போலே எனக்காகக்கொடுத்த திருமேனியை உடையவனாய் ஒரு வஸ்து என்று நினைக்கமுடியாதபடி இருந்த என்னை ஸ்வரூபத்தை உணர்ந்தவனாக ஆக்கி, வாசிக கைங்கர்யத்தையும் ஏற்றுக்கொண்டாய். உயர்ந்த ஞானத்தை உடையவராய்க்கொண்டு நான்கு வேதங்களையும் நடத்தவல்லவர்கள் பலரும் வாழும் சிரீவரமங்கலநகருக்கு அருளைப்பண்ணி அங்கே இருக்கிறவனே! நீ செய்த உபகாரத்துக்கு ஒரு கைம்மாறு நான் செய்ததாகத் தெரியவில்லை.

நான்காம் பாசுரம். அடியார்களை நன்றாகக் காக்கும் தன்மையையுடைய உன்னை என் ஆசையைக் கொண்டு எப்படிப் பெறுவது என்கிறார்.

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கெய்தக் கூவுவனே?

எதிரிகளாய்க் கூடின சேனையையுடைய துர்யோதனன் முதலிய நூற்றுவரும் நசிக்கும்படி தனியரான பஞ்ச பாண்டர்களுக்கும் உதவுபவனாய் அன்று ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய யுத்தத்தைப் பண்ணி எல்லாரையும் பொடிப்பொடியாகும்படிச் செய்த மஹோபகாரகனாய், பூமியை இடந்தெடுத்த ஸ்வாமியாய், தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் இடைவிடாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரில் ஏறி, தனித்துவம் தோன்றும்படி எழுந்தருளியிருந்த எம்பெருமானே! உன்னை எங்கே அடைவதாகக் கூவுவேன்?

ஐந்தாம் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய நீ அடியார்களின் அனுபவத்துக்காக இங்கே இருப்பதைக் கண்டேன். இப்படி இருக்கிற உன்னை அடைய நான் முயற்சி செய்வது தகுமா என்கிறார்?

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெவ்வத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவரமங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே

உன்னாலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய எனக்கு உபாயமாக உன்னை அழைப்பது தகுமா? எவ்வகைப்பட்ட எதிரிகளாகிற அஸுரக்கூட்டத்துள் புத்தர் முதலிய அவதாரங்களைச் செய்து நின்று அவர்களை ஏமாற்றும் செயல்களைச் செய்யும் அழகிய கறுத்த திருமேனியையுடைய ஸ்வாமியே! செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவர்களாய் இவ்வுலகிலேயே நித்யஸூரிகளைப்போன்று இருப்பவர்கள் விடாமல் வாழும் சிரீவரமங்கலநகர் முழுவதும் தொண்டு செய்யும்படித் தலைவனாய் இருந்தாய். நானும் அந்த இருப்பைக் கண்டேன். ஆனபின்பு அங்கே என்னையும் சேர்த்துக் கொள்வது உன் பொறுப்பு என்று கருத்து.

ஆறாம் பாசுரம். அடியார்களுக்கு உதவுவதில் மிகவும் ஒளிபடைத்த தன்மையையுடைய நீ உன்னை நான் வந்து அனுபவித்துத் தொண்டு செய்யும்படி வந்தருள வேண்டும் என்கிறார்.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா! என்றும் என்னை ஆளுடை  
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கை தொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே

வராஹவேஷத்தைக் கொண்டு பூமியை இடந்தெடுத்த செயலால் எனக்கு உபகாரகனாய், கண்ணனாய், எப்பொழுதும் என் இருப்பு அழியாமல் அடிமைகொண்டு, பரமபதத்தில் இருக்கும் ஆனந்தத்தைப்போலே வாசிக கைங்க்கர்யத்தை ஏற்றுக் கொண்ட நாயகனான எம்பெருமானே! உயர்ந்ததான மாணிக்கம்போலே மிகவும் ஒளிபடைத்த தேஜஸ்ஸையுடையவனாய், தேனையுடைய மாஞ்சோலைகளையுடைய குளிர்ச்சியான சிரீவரமங்கலத்திலே உள்ளவர்கள் கைங்கர்யம் செய்யும்படி அங்கே நிரந்தரமாக வாழும், பரம்பதத்திலே இருப்பவர்களுக்கும் அனுபவிக்கும்படி பெரிய மலைபோலே மிகவும் ஸ்திரமான திருமேனியை உடையவனே! அடியவனான நான் தொண்டு செய்யும்படி அந்த நிலையை விட்டு என்னிடத்தில் வந்து அருள வேண்டும்.

ஏழாம் பாசுரம். எல்லாருடைய இருப்புக்கும் காரணமான நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்து என் இருப்பை அழிக்காமல் இருக்க வேண்டும் என்கிறார்.

வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே

உன் இருப்பிடங்களை விட்டு இங்கே வந்தருளி, உன் விஷயத்தில் விருப்பமற்றிருந்த என் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு என் இருப்பை நோக்கி பரமபதவாஸிகளின் இருப்பையும் வளர்ப்பவனாய் இவ்வுலகத்திற்கு தனித்துவம் வாய்ந்த முதன்மைத் தாயாய் தந்தையாய் எல்லா உலகங்களையும் அமுதுசெய்து திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாய். வேறு எதிர்பார்ப்பு இல்லாத நேர்மையான செயல்களை உடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் மாறாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரிலே முடிவற்ற குணங்களையுடையவனே! அடியேனை நீ உன் விஷயத்தில் இருந்து அகற்றாமல் இருக்கவேண்டும்.

எட்டாம் பாசுரம். உன்னை விட்டுப் பிரிவதற்குக் காரணமான புலன்கள் நடையாடும் ஸம்ஸாரம் உனக்குக் கீழ்ப் படிந்திருக்க, அதிலே என்னை வைத்தது என்னை அகற்றுவதற்காகவோ என்கிறார்.

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்க்கதிர் மணி மாட நீடு சிரீவரமங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே!

உன்னிடத்தில் ஈடுபாடு இல்லாதவர்களை அகற்றுவதற்காக நீ உண்டாக்கி வைத்தவையாய், ஆச்சர்யத் தன்மையை உடையதாய், வெல்ல அரிதான ஐம்புலன்களை நன்றாக அறிந்தேன். நீ என்னையும் உன்னிடத்தில் இருந்து அகற்றி அரிதான சேற்றிலே தள்ளிவிட்டாய் என்று நினைத்து அஞ்சுகின்றேன். விளங்குகிற ஒளியையுடைய மாணிக்கங்களையுடைய மாடங்கள் ஓங்கி இருக்கும் சிரீவரமங்கைக்குத் தலைவனாய், ஒரு நாளும் உள்ளே புக முடியாத என் ஸ்வாமியாய், பகாஸுரன் வாயைப் பிளந்தவனே! நீ இப்படி சக்தியுடன் இருந்தும் என் விரோதிகளைப் போக்கவில்லையே என்று கருத்து.

ஒன்பதாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்குவதாலே மிகவும் ஒளிவிடுபவனாக இருக்கும் நீ, நான் உஜ்ஜீவிக்கும்படி க்ருபைபண்ணி அருளவேண்டும் என்கிறார்.

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் 
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திருநான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கை
உள் இருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறெனக்கே

பகாஸுரனை அழித்தவனாய் யமளார்ஜுன மரங்களை வீழ்த்தியவனாய் ஏழு எருதுகளையும் அழிப்பவனாய், இப்படி ஒருவருக்கும் புரியாத ஆழமான விஷயங்களை எனக்குக் காட்டித்தந்த ஆச்சர்யபூதனே! கறுத்த மாணிக்கத்தின் சுடர்போலேயிருக்கிற திருமேனி அழகையுடையவனே! தெளிவை உடையவர்களாய் பகவத் ஸ்வரூபத்தைக் காட்டும் ஸ்ரீயையுடைய நான்கு வேதங்களின் தாத்பர்யங்களும் தாங்களிட்ட வழக்காய் இருப்பவர்கள் மிகுதியாக வாழ்க்கையாலே ஸம்ஸார தாபம் இல்லாதபடி குளிர்ச்சியான சிரீவரமங்கையின் உள்ளே என்னை அனுபவிக்கச் செய்வதற்காக எழுந்தருளியிருந்த உபகாரகனே! எனக்கு உன் திருவடிகளில் தொண்டு செய்து உஜ்ஜீவிக்கும் வழியை க்ருபைபண்ணியருள வேண்டும்.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் “நம்மைப் பெறுவதற்கு நம் திருவடிகளே உபாயம்” என்று காட்டிக்கொடுக்க, இந்த உபகாரத்துக்கு என்னிடத்தில் ஒரு கைம்மாறு இல்லை என்கிறார்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் 
கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்டுழாய் முடியாய்! தெய்வ நாயகனே

எனக்கு உன்னை அடைவதற்கு வழியாக உன் திருவடிகளையே புகலிடமான உபாயமாகக் கொடுத்து விட்டாய். இப்படிப்பட்ட உனக்கு ஓர் கைம்மாறு ஒன்றும் உள்ளவனாக நான் இல்லை. எனது ஆத்மாவும் முன்பே உன்னுடையதாக இருக்கிறது. சேற்று நிலத்திலே இருக்கும் கரும்பும் அதைக்காட்டிலும் பெரிதாக வளரும் செந்நெலும் நெருங்கிக் குளிர்ச்சியாக இருக்கும் சிரீவரமங்கையில் இருப்பவனாய் மிகவும் நறுமணம் வீசும் புதிய, குளிர்ச்சியான திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடையவனாய் நித்யஸூரிகளுக்கு நாயகனாய் இருப்பவனே! இப்படிப்பட்ட உனக்கு நான் கைம்மாறு செய்ய முடியாது என்று கருத்து.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பாடவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கு மிகவும் இனியவர்களாவார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்காரவமுதே

நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனாய் இயற்கையான தாயன்பையுடைய நாராயணனாய்த் தன் சொத்தை தான் கொள்ளும் த்ரிவிக்ரமன் திருவடிகளிலே, கொய்துகொள்ளும்படி மிகுதியாக இருக்கும் பூக்களையுடைய பொழில்களாலே சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களில் குளிர்ச்சியான சிரீவரமங்கையை மேவிய இந்தப் பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்தோடே உடன்பட்டுப் பாட வல்லவர்கள் பரமபதவாஸிகளுக்கு எப்போதும் ஆராவமுதம்போலே இனிமையாக இருப்பார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment