திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.1 – ஒருநாயகமாய்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 3.3

ramanuja-selvapillai-2

ஐச்வர்யம், கைவல்யம், பகவத் கைங்கர்யம் ஆகிய மூன்று விதமான புருஷார்த்தங்களில் ஐச்வர்யமும் கைவல்யமும் ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேராது என்றும் அவை மிகவும் தாழ்ந்தது என்றும் சொல்லி, ச்ரிய:பதியான ஸர்வேச்வரனின் திருவடிகளில் கைங்கர்யம் செய்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம் என்று தன்னுடைய பெரிய கருணையாலே ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார் ஆழ்வார். எம்பெருமானார் இந்தப் பதிகத்தைத் திருநாராயணபுரம் திருநாரணன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தார்

முதல் பாசுரம். மிகப் பெரிய சக்கரவர்த்திகளே பிக்ஷை எடுத்து வருந்துவார்கள். ஆதலால் நம்முடன் இயற்கையான ஸம்பந்தமுடைய, எப்பொழுதும் செல்வத்தையுடைய நாராயணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ

எல்லாவற்றுக்கும் தலைவராய் நெடுங்காலம் நடக்கும்படி உலகத்துடன் பொருந்தி ராஜ்யம் நடத்தியவர்கள் அந்த ஐச்வர்யம் தீர்ந்தவுடன் பிக்ஷையெடுக்கப்பார்த்து அந்த ஸமயத்தில் கறுத்த நாயாலே கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உபயோகமற்ற பானையைப் பாத்ரமாகக் கொண்டு இந்தப் பெரிய பூமியில் எல்லாரும் காணும்படி இந்தப் பிறவியிலேயே பிச்சை எடுப்பார்கள். இப்படி இவ்வுலக ஐச்வர்யம் நிரந்தரமாக இல்லாததால், எப்பொழுதும் செல்வத்துடன் இருக்கும் நாராயணனுடைய திருவடிகளை காலம் தாழ்த்தாமல் உடனே நினைத்து உஜ்ஜீவனத்தைப் பெறுங்கள்.

இரண்டாம் பாசுரம். ஐச்வர்யத்தை இழப்பது மட்டுமல்லாமல் விரும்பிய விஷயத்தையும் பிரிய நேரிடும் ஆதலால் எல்லாருக்கும் தலைவனான ச்ரிய:பதியை அடையுங்கள் என்கிறார்.

உய்ம்மின் திறை கொணர்ந்து என்று உலகாண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ

திறையைக் கொண்டுவந்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று இந்த வார்த்தையைக் கொண்டே உலகத்தை ஆண்டவர்கள் இப்படி வாழ்ந்த பிறவியிலேயே தங்களுக்கு என்று தனித்துவமாய் மிகவும் பிடித்தவர்களாய் இன்பத்தையுடையவர்களாய் இருக்கும் ஸ்த்ரீகளை, மற்றவர்கள் பறித்துக்கொள்ளும்படி, தாங்களே கைவிட்டு, வெப்பம் மிகுந்த, பார்த்தவர் கண்களில் மின்னொளி பரக்கும், வெயிலையுடைய காட்டுக்குள்ளே போய் அங்கும் வேறு ராஜாக்களால் துன்புறுவார்கள். ஆதலால் விரைந்து சென்று தடுக்கப்படாத ஒளிமிகுந்த கிரீடத்தையுடைய திருமாலின் திருவடிகளில் சேருங்கள்.

மூன்றாம் பாசுரம். காலில் விழுந்த ராஜாக்களையும் மதிக்காமல் இருந்தவர்கள் பின்பு ஒரு மதிப்பும் இல்லாமல் ஆவார்கள். ஆதலால் இனியவனான கண்ணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.

அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ

தங்கள் காலில் விழுந்த கிரீடத்தையுடைய ராஜாக்கள் தாங்களே தொழும்பொழுது இடிபோன்ற முரசங்கள் முற்றத்திலே ஓசை செய்யும்படி இருந்தவர்கள் ஒரு பொருளின் துகளுடன் சேர்ந்த மிகச்சிரிய துகளாகும்படி மதிப்பற்றுப் போவார்கள். ஆதலால் உடனே நறுமணம் மிகுந்த திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய கண்ணன் திருவடிகளை நினையுங்கள்.

நான்காம் பாசுரம். அவமானப்படுவது மட்டும் இல்லாமல் ஆயுளும் நிலைநில்லாததாகையால் விரோதிகளைப் போக்கும் கண்ணன் திருவடிகளை வணங்குங்கள் என்கிறார்.

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலில் பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ

ஆராய முயன்றால் பல யுகங்களும் இந்த உலகத்தை ஆண்டு கழிந்துபோனவர்கள் கடலில் உருவாகிய மேடுகளில் இருக்கும் மிக நுண்ணிய மணலைவிட மிகுதியானவர். தங்களின் வீட்டின் பகுதிகளுக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் வித்யாசம் தெரியாதபடி அழிவதைத் தவிர வேறு நிலையைப் பார்த்ததில்லை. ஆதலால் பனைபோலே பருத்த அடிப்பரப்பையுடைய யானையை அழித்தவனான கண்ணனின் திருவடிகளை வணங்குங்கள்.

ஐந்தாம் பாசுரம். விருப்பத்துக்குரித்தான் பெண்களும் அவர்களுடன் கூடுவதும் நிலையற்றதாகையாலே அழகிய உருவத்தையுடையவனான ஸர்வேச்வரன் திருநாமத்தைச் சொல்லி வாழப் பாருங்கள் என்கிறார்.

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாமிழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ

அழகியதாய் குளிர்ந்ததாய் பரந்த பூப்படுக்கையிலே, திருவருளைப் பண்ணியருளவேணும் என்னும் ஆசையையுடைய, அழகாக அலங்கரிக்கப்பட்ட மிகவும் மென்மையான கூந்தலையுடையவர்களின் இன்பமான கலவி என்னும் அமுதத்தை அனுபவித்தவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் வஸ்த்ரமானது பின்பக்கம் வரை எட்டாமல் இருப்பதால் முன்னே தொங்கும்படி இருக்க, முன்பு ஈடுபட்டிருந்த பல வகைப்பட்ட ஸ்த்ரீகள் தாங்களே பழித்தாலும்கூட, அவர்களை நோக்கி நடப்பார்கள். ஆதலால் நீலரத்னம்போலே ஒளிபடைத்த திருமேனியையுடையவனாய், நமக்கு தன் அனுபவத்தைக் கொடுக்கும் ஆச்சர்யபூதனின் திருநாமங்களைச் சொல்லி ஆனந்தமாக வாழுங்கள்.

ஆறாம் பாசுரம்.. இவ்வுலகில் நிலைநின்ற வாழ்க்கை இல்லாததால் அப்படி இருக்க ஆசைப்படுபவர்கள் திருப்பாற்கடல்நாதனுக்குத் தொண்டராகுங்கள் என்கிறார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்றல்லால் அன்று முதல் இன்றறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ

வாழ்ந்தார்களாகத் தங்களை நினைத்திருப்பவர்கள் வாழ்ந்தது பெருமழையில் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்துக் கீழே போனார்கள் என்பதைத் தவிர, உற்பத்தி முதல் இன்று வரை ஓரே நிலையில் வாழ்ந்தார்கள் என்பது இல்லை. நிலைநின்ற வாழ்வு வேண்டுமாகில் ஆழ்ந்து நிறைந்த கடலைப் படுக்கையாகவுடைய ஸர்வஸ்வாமிக்கு அடியார் ஆகுங்கள்.

ஏழாம் பாசுரம். உடம்பை வளர்க்கும் உணவு முதலிய இன்பமும் நிரந்தரமற்றது ஆகையால் எல்லாருக்கும் காரணமான ஸர்வேச்வரன் குணங்களை நினையுங்கள் என்கிறார்.

ஆமின் சுவை அவை ஆறோடடிசில் உண்டார்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கொரு துற்றென்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே

ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் விரும்பத்தக்கதாய் உலக ப்ரஸித்தமான ஆறு ரஸங்களோடு கூடின உயர்ந்ததான அன்னத்தை உண்டு த்ருப்தியடைந்தபின், சுத்தமாய் மென்மையான பேச்சையுடைய ஸ்த்ரீகள் கேட்பதால் மீண்டும் முயன்று உண்ணுபவர்கள், அந்தச் செல்வம் அழிந்த பிறகு, அந்த ஸ்த்ரீகளிடமே சென்று எங்களுக்கு ஒரு பிடி அன்னம் இடவேணும் என்று கேட்டு அது கிடைக்காததால் ஆங்காங்கே திரிவார்கள். ஆதலால் திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய எல்லாருக்கும் காரணமான, அழகிய ஒளிபடைத்த திருமேனியையுடைய ஸர்வேச்வரனின் குணங்களை, அவனை அடைந்து அனுபவியுங்கள்.

எட்டாம் பாசுரம். பகவானுடைய அருள் இல்லாதபோது கிடைக்கும் ராஜ்யமும் நிலையற்றதாகையாலே ஆதிசேஷனில் சயனித்திருப்பவன் திருநாமங்களைச் சொல்லுங்கள் என்கிறார்.

குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும் ஆங்கவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணம் கொள் அரவணையான் திருநாமம் படிமினோ

சீலம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாய் பூர்ணமான புகழையுடையவராய் க்ஷத்ரிய குல புத்ரர்களாய் வள்ளல் தன்மையை ஏறிட்டுக்கொண்டு நிலைபெற்று நின்று இருந்து உலகம் உடன்படும்படி ரக்ஷித்துப் போனாலும் அந்த ஐச்வர்ய விஷயமாக ஸர்வேச்வரனை அடிபணிந்து நில்லாதவர்கள், எப்பொழுதும் புதியதாக இருக்கும் ஐச்வர்ய இன்பத்திலே இப்படி நிலைநின்றார்களாகிலும் அந்த ஐச்வர்யத்தை இழப்பார்கள். விரிகிற பணங்களையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாக கொண்டுள்ள எம்பெருமான் திருநாமங்களை எப்பொழுதும் சொன்னால் மீண்டும் இவ்வுலகுக்கு வரவேண்டாத மோக்ஷம் கிடைக்கும்.

ஒன்பதாம் பாசுரம். மேலுலகத்தில் இருக்கும் ஸ்வர்க்கானுபவமும் நிலையற்றதாகையாலே நிலைநின்ற கைங்கர்யத்தைக் கொடுக்கும் ஈச்வரனை அடையுங்கள் என்கிறார்.

படி மன்னு பல்கலன் பற்றோடறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

நிலத்தையும் எப்பொழுதும் அணிந்திருந்த பலவகைப்பட்ட ஆபரணங்களையும் பற்றோடு அறுத்து, ஐம்புலன்களையும் வென்று, தூறுமண்டிக்கிடக்கிற சரீரத்தை ஜயித்தவர்களும், இந்த தவத்தின் பலனால் பொருந்தி இருக்கும் குடியிருப்பையுடைய உயர்ந்த இனிமையையுடைய ஸ்வர்க்கத்தை பெற்றாலும், அந்த இன்பத்துக்காக, அங்கும் எம்பெருமானை வணங்காதவர்கள் அதை இழந்து திரும்புவார்கள். மீளாத இன்பத்தை அடைய கொடியிலே எப்பொழுதும் இருக்கும் பெரியதிருவடியையுடைய ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடையப்பாருங்கள்.

பத்தாம் பாசுரம். இப்படி உலக இன்பங்களைப் போலே நிரந்தரமற்றதாக இல்லாமல் கைவல்யம் நிரந்தரமான ப்ரயோஜனமாக இருந்தாலும் அதில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்து அனுபவிக்கும் வாய்ப்பில்லாததால் ஸர்வேச்வரனை அடையும் பகவத் ப்ராப்தியே உயர்ந்த ப்ரயோஜனம் என்கிறார்.

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்
சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடஃதே

உள்நோக்கிய ஞானத்தாலே நிரூபிக்கப்படும் ஆத்மவஸ்துவுடன் ஆழமாக நினைத்து ஆத்மாவைத் தவிர எல்லா விஷயங்களையும் விட்டவனாய் ஆத்மாவில் மட்டும் சென்று முடிந்த மோக்ஷத்தை புருஷார்த்தம் என்றிருக்கும் ஞானிக்கும் எம்பெருமானை உபாயமாகப் பற்றுகை இல்லையாகில் தாழ்ந்த புருஷார்த்தங்களை நினைப்பதற்குக் காரணமான ஓர் பாசம் ஏற்பட்டு அதனால் அந்த கைவல்ய மோக்ஷமும் கிடைக்காது. ஆதலால் எல்லாவிதமான தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான, எல்லாவிதமான மங்கள குணங்களையும் உடைய ஸ்வாமியை அடைந்து அகலாமல் இருந்தால் அதுவே சிறந்த புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக துக்கம் போய் ஆத்மா உஜ்ஜீவனத்தை அடைவதை அருளிச்செய்கிறார்.

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் ஸூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்தாயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே

வாழ்ச்சிக்குக் காரணமாகக் கிட்டும் உபாயம் அதுவே என்று அறுதியிட்டு கண்ணனுடைய திருவடிகளின்மேலே கொய்யப்படும் புஷ்பங்களையுடைய பொழிலையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அந்தரங்க கைங்கர்யங்களாகச் செய்த சீரும் தொடையும் கொண்ட அழகிய ஆயிரம் பாசுரங்களில் இவை பத்தையும் நழுவாதபடிக் கற்பவர்கள் ஆழ்ந்து வரும் துக்கம் போய் ஆத்ம உஜ்ஜீவனத்தை அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.1 – ஒருநாயகமாய்”

Leave a Comment