திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.10 – ஒன்றும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 4.1

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் அர்ச்சாவதார ரூபத்திலே பெருங்கருணையுடன் ஆத்மாக்களுக்கு உதவுவதற்காக இவ்வுலகில் வந்து காத்திருக்க, இங்குள்ளவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட வேறு தெய்வங்களைத் தேடிப் போவதைக்கண்டு, எல்லோருக்கும் எம்பெருமானுடைய பரத்வத்தை விரிவாக உபதேசம் செய்து அவர்களைத் திருத்தி மகிழ்கிறார். அர்ச்சாவதாரத்திலே எம்பெருமானின் பரத்வத்தை ஆழ்வார் காட்டிய பதிகம் இது. இந்த திவ்யதேசம் ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலம் ஆகையாலே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஆழ்வாருக்குத் தனி ஈடுபாடு என்பதும் வெளிப்படுகிறது.

முதல் பாசுரம். எல்லாவற்றுக்கும் காரணமான ஸர்வேச்வரன் இங்கே இருக்க வேறு எந்த தேவதையைத் தேடுகிறீர்கள் என்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா 
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே

எம்பெருமானிடத்தில் ஒன்றியிருக்கும்படிச் சேர்வதான தேவதைகளும் அவர்களின் உலகங்களும் மனுஷ்யர் தொடக்கமான ப்ராணிகளும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் எதுவும் இல்லாத அன்று இவர்களை ஸ்ருஷ்டிக்கவேணும் என்னும் கருணை உள்ளத்துடன் ப்ரஹ்மாவுடன் தேவதைகள், உலகம், ப்ராணிகள் ஆகியவற்றைத் தன்னை அடைவதற்கு வழிசெய்யும் வகையில் படைத்தவனாய் மலைகள்போலே மாணிக்கமயமான மாடங்கள் உயர்ந்திருக்கிற திருக்குருகூரில் நிற்கிற எல்லாவற்றுக்கும் காரணனான மஹோபகாரகன் இங்கிருக்க ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் ஆகியவற்றுள் கர்மத்தாலே ஈடுபடும் தேவதைகளைத் தேடுகிறீர்களே.

இரண்டாம் பாசுரம். அந்த தேவர்களையும் உங்களையும் படைப்பதற்குத் தேவையான நித்யமங்கள குணங்களை உடைய எம்பெருமான் வாழும் திருநகரியை அடையுங்கள் என்கிறார்.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே

பலவகைப்பட்ட உலகத்தீரே! நீங்கள் உங்கள் குணத்துக்கு ஏற்றதாக வணங்கும் தேவதைகளையும் உங்களையும் ஸ்ருஷ்டி காலத்திலே படைத்தவனான, அதற்குத் தேவையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவனான, புகழையுடைய ஆதிப்பிரானான எம்பெருமான், பொருந்தி வாழும் ஸ்தானமாய், மாடங்களும், மாளிகைகளும் சூழ்ந்து அதனாலே அழகாக இருக்கும் திருநகரியைப் பாடி ஆடி ஸ்துதித்து எல்லாவிடத்திலும் சென்று சொல்லுங்கள்.

மூன்றாம் பாசுரம். இப்பொழுது படைக்கப்பட்டிருக்கும் ஜகத்தை எம்பெருமான் காப்பாற்றுவதே, அவன் மேன்மையைக் காட்டும் என்கிறார்.

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கிக்
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே

பரந்திருக்கும் தேவதைக் கூட்டங்களையும் பல் வித உலகங்களையும் படைத்து, ப்ரளயம் வந்த காலத்தே உடனே விழுங்கி, அதை ஒளித்து வைத்து, ப்ரளயத்துக்குப் பிறகு வெளியே உமிழ்ந்து, பின்பு அளந்து கொண்டு, மீண்டும் இடைப்பட்ட ப்ரளயத்திலே இடந்து எடுத்த இவற்றைக் கண்டும், தெளிவான அறிவில்லாமல் இருக்கிறீர்களே. தேவர்கள் தங்களது தலைகளால் வணங்கும் திருநகரிக்குள்ளே நிற்கிற பரம்பொருளுக்குச் சரீரமாயல்லது வேறு ஸ்வதந்த்ரமான தெய்வம் இல்லை. பல விதமான உலகத்தில் உள்ளவர்களே, அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

நான்காம் பாசுரம். இவ்வுலகில் ஈச்வரர்கள் என்று கொண்டாடப்படுபவர்களுக்கும் ஈச்வரனான, வேதத்தில் பரதெய்வமாகச் சொல்லப்பட்ட ஸர்வேச்வரன் விஷயத்தில் அவன் ஈச்வரன் இல்லை என்றும் அனுமானத்தாலே ஈச்வரனைச் சொல்லும் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் என்கிறார்.

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே

ஈச்வரனாகச் சொல்லப்பட்ட ருத்ரனுக்கும் அவனுக்கும் தந்தையான ப்ரஹ்மாவுக்கும் மற்ற தேவதைகளுக்கும் நாயகனானவன் அந்த ஸர்வேச்வரனே. ப்ரஹ்மாவின் சாபத்தால் ருத்ரன் கையிலே ஒட்டியிருந்த கபாலத்தை நன்றாகப் போக்கின இந்த சரித்ரத்தை ஐந்தாவது வேதமான மஹாபாரத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒளிமயமாய் மிகச்சிறந்ததான மதிள்களாலே சூழப்பட்டு அத்தாலே அழகாக இருக்கும் திருநகரிக்குள்ளே இருக்கும் இயற்கையான ஸர்வேச்வரன் விஷயத்திலே இவன் ஈச்வரன் இல்லை என்ற தாழ்ந்த வார்த்தைகளைச் சொல்லுகிற இத்தால் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் உண்டு?

ஐந்தாம் பாசுரம். பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள்) குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லுபவர்கள்) மதத்தவர்களை ஜயித்து, திருநகரியில் நிற்கிற ஸர்வேச்வரனே எல்லாரையும் விட உயர்ந்தவன் என்கிறார்.

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே

லிங்கத்தை வணங்குவதைக் காட்டும் தாமஸ புராணத்தை நம்பும் குத்ருஷ்டிகளான நீங்களும், வேதத்தை ஒத்துக்கொள்ளாத சமணர்கள் மற்றும் பௌத்தர்களும், வீணான தர்க்கங்களில் ஈடுபட்டு வாதம் செய்யும் வைசேஷிகர்கள் முதலியவர்களும் மற்றும் நீங்கள் விரும்பி வணங்கும் தேவதைகளும் தன் அதீனத்திலே இருக்கும்படி அவற்றை வளர்த்துவிட்டவன், செந்நெலானது மிகுந்து கவரிபோலே அசைகிற திருநகரியில் பரிபூர்ணனாய் தன் மேன்மை ஒளிவிடும்படி நிற்கும் ஸர்வேச்வரனே! இதை நீங்களே காணுங்கள். இதில் ஒன்றும் பொய் இல்லை. ஆகையாலே உங்கள் கொள்கைகளை விட்டு அவனையே கொண்டாடுங்கள்.

ஆறாம் பாசுரம். இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பது அவரவர் கர்மத்துக்கு ஏற்றபடி எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தை நடத்துகிற ஸாமர்த்யத்தாலே என்கிறார்.

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அதறிந்தறிந்து ஓடுமினே

வேறு ஒரு தேவதையை ஸ்தோத்ரம் பண்ணி ஆதரிக்கும்படி தன்னிடத்திலிருந்து உங்களை விலக்கி, இப்படி அவர்கள் விஷயத்தில் நம்பிக்கையுடன் வைத்திருப்பது, எல்லாரும் பகவானை அடையும் மோக்ஷத்தைப் பெற்றால் சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உலக மர்யாதை குலையும் என்பதற்காக. இதற்குக் காரணம், சேற்று நிலத்தில் செந்நெலும் தாமரையும் போட்டிபோட்டுக் கொண்டு வளரும் திருநகரியிலே வாழும், மிக உயர்ந்த பல விதமான சக்திகளை உடையவனாய்க் கொண்டு எல்லாரையும் கர்மத்தை அனுபவிக்கச்செய்பவனுடைய, ஆச்சர்யமான ப்ரக்ருதியுடன் சேர்ந்த ஸம்பந்தம். அதை நன்றாக அறிந்து இந்த உலகைக் கடக்கப் பாருங்கள்.

ஏழாம் பாசுரம். இப்படியே மற்ற தெய்வங்களை வணங்கி வந்தால் இதற்கு முன்பு பெற்ற பலனையே பெறுவீர்கள். ஆதலால், கருடக்கொடியை உடைய, எல்லாவற்றுக்கும் காரணமான எம்பெருமானுக்கு அடிமை ஆகுங்கள் என்கிறார்.

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல் படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே

வேறு சில பெயர் சொல்லவும் தகுதியில்லாத தேவதையைப் பாடுவது, ஆடுவது என்று கொண்டு வணங்கி, பல விதத்தாலும் சாஸ்த்ர மார்கத்தாலே மேலும் மேலும் வணங்கி, பல பிறவிகளில் ஓடிப் பிறந்து, நேரே அனுபவித்தீர்கள். ஆதலால், நீங்கள் வணங்கும் தேவர்கள் எல்லாரும் கூடி ஸ்தோத்ரம் பண்ணி அடையும்படித் திருநகரியிலே நிற்கும், ஆடிவருகிற பெரியதிருவடியை கொடியாகவுடைய எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரனுக்கு அடிமை ஆகுங்கள்.

எட்டாம் பாசுரம். மார்க்கண்டேயனுக்கு ருத்ரன் உதவியதும் எம்பெருமான் க்ருபையாலே என்று மற்ற தேவதைகளுக்கும் பலன் கொடுக்கும் சக்தி எம்பெருமானே கொடுக்கிறான் என்பத உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.

புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணன் அருளே
கொக்கலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே

தொண்டு செய்து உள்கலந்து தன்னை நேராகக் கண்ட மார்க்கண்டேயனென்று ப்ரஸித்தமானவனை, நக்கபிரான் என்று திக்கையே ஆடையாகக் கொண்டிருப்பவனும் தன் அடியார்களுக்கு நன்மை செய்பவனுமான ருத்ரனும், ஆபத்துக்காலத்திலே காப்பாற்றி பகவானுக்கு அடிமையாக்கி வாழவைத்தது நாராயணன் அருளாலேயே நடந்தது. ஆதலால், கொக்கின் நிறம்போலே வெளுத்து மலரும் பூவையுடைய பெரிய தாழைகளை வேலியாகவுடைய திருநகரியுள் நிற்கும் எல்லாரையும் விட உயர்ந்தவனாய், ஆதி காரணனாய், மஹோபகாரனான எம்பெருமான் நிற்க, வேறு எந்த தெய்வத்தைச் சொல்லுகிறீர்கள்?

ஒன்பதாம் பாசுரம். மற்றவர்களாலே புரிந்து கொள்ள முடியாத எம்பெருமான் வாழும் திருநகரியை உங்களுடைய வாழ்ச்சிக்காக நினையுங்கள் என்று அருளிச்செய்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன் பால்
அளந்து காண்டற்கரியனாகிய ஆதிப் பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே

வார்த்தைகளால் மட்டும் நிறைந்திருக்கும் ஆறு பாஹ்ய சமயங்களும் (வேதத்தை ஒத்துக்கொள்ளாத சார்வாக, பௌத்த, சமண, வைசேஷிக, ஸாங்க்ய, பாசுபத மதங்கள்) மற்றுமுள்ள குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் கூறும்) மதங்களும் எல்லாம் கூடி வந்தாலும், தன்விஷயத்தில் ஆராய்ந்து காண்பதற்கு அரியதான தன்மையை உடைய, எல்லாருக்கும் காரணனான, மஹோபகாரகன் பொருந்தி வாழும் தேசமாய், அழகியதாய், குளிர்ந்ததான நீர்நிலங்களாலே சூழப்பட்டு மிகவும் இனிமையாக இருக்கும் திருநகரியை, நீங்கள் வாழ்ச்சியைப் பெறவேண்டும் என்று நினைத்தீர்களானால் உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஞானத்தில் வையுங்கள்.

பத்தாம் பாசுரம். எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய், மிகவும் எளியவனாய், எல்லாரையுடைய மனதையும் கவரக்கூடிய சேஷ்டிதங்களையுடைய எம்பெருமானுக்கு அடிமை செய்வதே விரும்பத்தக்கதும் தகுந்ததும் என்று அருளிச்செய்கிறார்.

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூர் அதனுள்
குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே

எல்லா தேவதைகளும் எல்லா உலகங்களும் மற்றுமுண்டான எல்லா சேதனர்களும் அசேதனப் பொருள்களும் இவை எல்லாவற்றையும் தன் ஸ்வரூபத்திலே, குற்றமில்லாத தனித்துவம் வாய்ந்த திருமேனியைப் போலே, பெருமை சேர்க்கும் சரீரமாய்க்கொண்டு, தன்னுடைய ஸ்வரூபம், ஸ்வபாவம் ஆகியவை குலையாதபடி நிற்கும் எம்பெருமான் அம்மேன்மையோடே விளைநிலங்களில் செந்நெலானது கரும்புடன் வளரும்படியான திருநகரிக்குளே நிற்பவனாய், அடியார்கள் எளிதில் அனுபவிக்கும்படி வாமனனாய் ப்ரஹ்மசாரி உருவத்துடன், மிகப்பெரிய பெருமையையுடைய குடக்கூத்தாடிய கண்ணனுக்கே அடிமை செய்வதே சிறந்ததும் தகுந்ததுமாய் இருக்கும் புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நினைத்துச் சொன்னவர்களுக்குப் பரமபதம் கையிலேயென்று பலத்தை அருளிச்செய்கிறார்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கை அதுவே

வாசிக கைங்கர்யத்தைப் பண்ணி திருவாழியைத் திருக்கையிலேயேந்திய உபகாரகனை அடைந்தவராய் உயர்ந்ததான திருநகரிக்குத் தலைவராய் புதிய பரிமளத்தையுடைய திருமகிழமாலையை திருமார்பிலேயுடையவராய் மாறன் என்கிற குடிப்பெயரையும் சடகோபர் என்கிற விசேஷமான திருநாமத்தையும் உடைய ஆழ்வார், பகவத் விஷயத்தில் கொண்ட மிகுந்த ஆசையால் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்கள் கையிலே இதை அனுபவிப்பதாகிய பலத்துக்கு மேலே, மிகவும் தூரத்தில் இருக்கும், மீட்சியில்லாத ஸ்ரீவைகுண்டமாகிற மாநகரம் இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment