பூர்வ திநசர்யை – 4 – பார்ச்வத:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

                                                                                     4-ஆம் பாசுரம்

पार्श्वतः पाणि पद्माभ्याम्  परिग्रुह्य भवत्प्रियौ ।
विन्यस्यन्तम् शनैरन्ङ्घ्री म्रुदुलौ मेदिनितले ॥

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ |
விந்யஸ்யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே ||

பதவுரை:- பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும், பவத் – தேவரீருக்கு, ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் திருத்தம்பியாரையும், பாநிபத்மாப்யாம் – தாமரைமலர் போன்ற திருக்கைகளால், பரிக்ருஹ்ய – நன்றாகப் பிடித்துக் கொண்டு, ம்ருதுளௌ – ம்ருதுவான, அங்க்ரீ – திருவடிகளை, மேதிநீதலே – பூதலத்தில், ஸனை: – மெல்ல, மெல்ல, விந்யஸ்யந்தம் – வைத்து நடப்பவராகிய…

கருத்துரை:-   தமதருகில் மாமுனிகள் வருகிறபடியைச் சிறப்பிக்கிறார் இதனால். ஆசார்யனே சேஷி என்ற ஜ்ஞாநமும், அவரே உபாயமென்ற உறுதிப்பாடும், அவ்வுபாயத்தினால் பெற்ற ஆசார்ய கைங்கர்யமும், இம்மூன்றுக்கும் தகுதியான அநுஷ்டாநமும் உள்ளமையினால் மணவாளமாமுனிகளுக்குக் கோயிலண்ணனான வரதநாரயணகுருவும், அவர் தம்பியரான ஸ்ரீநிவாஸகுருவும் அன்புக்கிலக்காயினர் என்றபடி. தூய்மையாலும், அழகாலும் மாமுனிகளின் திருக்கண்கள் தாமரை மலர் போன்றனவாயின. (பரிக்ருஹ்ய) நன்றாகப் பிடித்துக்கொள்ளுதலாவது – மனத்தில் அன்போடு கூடிக் கைகளினால் பிடித்துக்கொள்ளுதலேயாகும். அதாவது – தாம் பெரியவரென்றும் ஸிஷ்யர்கள் சிரியவர்களென்றும் நினையாமல் ஸௌஸீயல்யாதிஸயத்தோடு பிடித்துக்கொள்ளுதல்.

இரண்டுத் திருக்கைகளாலும் ஸிஷ்யர்களைப் பிடித்துக்கொண்டால் த்ரிதண்டத்தை தரிக்க முடியாதல்லவா ? எப்போதும் ஸந்யாஸிகள் த்ரிதண்டத்தை தரிக்கவேண்டுமே. ஸ்ரீபாஞ்சராத்ர – தத்வஸார ஸம்ஹிதையில் ‘த்ரிதண்டமெனும் பெயர் பெற்ற விஷ்ணுவினுருவத்தை யத்யானவர் எப்போதும் தரிக்கக்கடவர்’ என்றும், விஷ்ணு ஸ்ம்ருதியில் ‘யஜ்ஞோபவீதம், த்ரிதண்டம், கமண்டலு ஜலபவித்ரம் கௌபீநம் அரைநாண் என்னுமிவற்றை யதியானவர் ஆயுளுள்ளவரையில் விடாமல் தரிக்கக்கடவர்’ என்றும் கூறப்பட்டுள்ளதல்லவா? என்று எங்கு ஒரு கேள்வி எழுகின்றது. இதற்கு விடை வருமாறு. ஜ்ஞானபூர்த்தியையுடைய ஸந்யாஸி விஷயத்திலே – ஒரு காரணவிஸேஷத்தினால் ஏதோவொரு ஸமயத்தில் த்ரிதண்டமில்லாமலிருப்பினும் தோஷமில்லை. ‘த்யானம், நன்னடத்தை கேள்வியறிவு இயற்கையறிவு யதிதர்மமாகிற வைராக்யம் உலகையடக்குமாற்றல் ஆகிய இவை எந்த ஸந்யாஸியினிடத்தில் உள்ளனவோ அவனுக்கு த்ரிதண்டம் முதலிய மாத்ரைகளினால் பரிகரங்களினால் ஆகவேண்டிய பயனேதுமில்லை’ என்று க்ரதுவின் வசநம் இங்குக் காணத்தக்கது. மேலும் கோயிலுக்குச் செல்வது எம்பெருமானை ஸாஷ்டாங்கமாகத் தடிபோல் கீழே படுத்து வணங்குவதற்காகவேயாகையால், தடிபோல் உடலைத் தரையில் படுக்கவைத்து இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் நீட்டி, நீட்டிய இரண்டு கைகளையும் கூப்பிச்செய்யும் நமஸ்காரமே தண்டவத் ப்ரணாமமாகையால், இப்படிப்பட்ட ப்ரணாமத்தை, த்ரிதண்டத்தைக் கையிலேந்திக் கொண்டு செய்யமுடியாதாகையால் கோயிலுக்குச்செல்லும்போது த்ரிதண்டம் தரியாவிட்டால் குற்றமேதுமில்லை. இரண்டு கைகளின் நடுவே ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் கைகளைக் கூப்பிக்கொண்டு தண்டனிடும்போது த்ரிதண்டத்தைத் தரிக்கமுடியாதல்லவா ? என்பதே அக்கேள்விக்கு விடையாகும். ஆக, த்ரிதண்டமில்லாமல் ஸந்யாஸி இருக்கக்கூடாதென்ற விதி, பொது விதியேயாகையால் அது தண்டவத் ப்ரணாமாதி காலங்களில் தவிர மற்ற சமயங்களைப் பற்றியதேயாகும் என்றபடி.

(மேதிநீதலே அங்க்ரீ விந்யஸ்யந்தம்) இங்கு பூமிதலே என்னாமல் மேதிநீதலே என்று பூமியை மேதிநீ என்று குறிப்பிட்டருளியது – திருமால் மதுகைடபர்களைக் கொல்லும்போது அவர்கள் உடலிலிருந்த மேதஸ்ஸு (கொழுப்பு) பட்டதன் காரணமாக பூமிக்கு மேதிநீ என்று பெயருண்டானமையால், அவர்களின் கொழுப்பினால் பூசப்பட்டு தூய்மையிழந்த மேதிநீயானது (பூமியானது) இப்போது மாமுனிகளின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்றுத் தூய்மை மிகப்பெற்றதென்று தெரிவிக்கைக்காகவாகும். ‘நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’ (பெரியாழ் திரு 4-4-6) என்று பகவத்பக்தர்களின் பாததூளிபடுதலை இவ்வுலகம் செய்த பாக்யத்தின் பயனாக அருளிச்செய்தாரிறே பெரியாழ்வார். (4)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

0 thoughts on “பூர்வ திநசர்யை – 4 – பார்ச்வத:”

Leave a Comment