ஞான ஸாரம் 16- தேவர் மனிசர்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                16-ஆம் பாட்டு:

முன்னுரை:

ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும் நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் ஆசிரியர்.

I_Intro2

“தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகு முயிர் – பூவின்மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே அடிமை நான்”

பதவுரை:

நான் உயிராகிற நான்
தேவர் இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம் மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன் எவையுமாய் சொல்லப்படமாட்டேன் (இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன. ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான் நான் (அடியேன்)
பூவின்மிசை தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின் தெய்வப் பெண்ணான திருமகளின்
கேள்வன் மணாளனும்
அமலன் குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன் நாராயணனுடைய
தாட்கே திருவடிகளுக்கே
இலகும் அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் உயிர்கள்
அடிமை அடிமையாகும்

“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” அடிமையே உயிர்களின் இயற்கையாம்.

விளக்கவுரை:

தேவர் மனிசர், திரியக்குத் தாவரமாம் – தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், செடி, கொடி, தாவரங்களாகிற (யாவையும் அல்லன்) எந்தப் பெயரும் உடையவன் அல்லன். ஆன்மாவாகிற நான்.

ஓர் ஆன்மா தான் செய்த பற்பல நல்வினை, தீவினை வேறுபாட்டால் தேவ சரீரம், மனித சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம், முதலிய பல உடல்களிலும் பிறக்கிறது. இவற்றைத் திருக்குறள் உரை முதலியவற்றில் காணலாம். அவை வருமாறு:-

“ஊர்வ பதினொன்றாம், ஒன்பது மானிடம், நீர், பறவை நால்கால், ஒர் பப்பத்து, சீரிய பந்தமாந் தேவர் பதினாலு, அயன் படைத்த அந்தமில் சீர்த் தாவரம் நாலைந்து, மக்கள் விலங்கு, பறவை யூர்வன, நீருந் திரிவன பருப்பதம எனவினை யெழு பிறப்பாகு மென்ப” வினைப்பயனால் ஆன்மாக்கள் எடுக்கும் பிறப்புக்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டவற்றை இங்கு ஒப்பு நோக்குக. இவ்வாறு ஆன்மா பற்பல உடல்களை எடுத்தால் அந்தந்த உடலில் இருக்கும் போது நான் தேவன், நான் மனிதன், நான் விலங்கு, நான் தாவரம் என்று அது அதற்கு ஏற்ப நான் என்ற அகந்தையை எண்ணுகிறது. இந்நிலை ஆன்மாவின் உண்மை நிலையை அதாவது, ‘இறைவனுக்கு மனிசர், விலங்கு, தாவரம் முதலிய யாவையும் அல்லன் நான் என்று தன்னை உணர்வான். மேலும் ‘நான் இறைவன் அடியேன்’ என்று தன்னை நினைப்பான்.

(இலகும் உயிர் நான்) என்று கொண்டு கூட்டுக. உயிராகிற நான் என்று அறிக. இதில் இலகும் என்ற அடைமொழியால் உயிருக்குரிய இலக்கணங்களை சாஸ்திரங்களில் கூறியபடி உணரவேண்டும். அதாவது ‘ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய் உடையவனும், ஒளிமயமானவனுமான உயிராகிற நான்’ என்று பொருள். மேலும், அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய் ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய் ஞானவடிவமாய் இருப்பதாய் உள்ளது ஆன்மா என்பதையும் இங்கு காண்க. மேலும் தத்வத்ரயம் என்னும் நூலில், சித் ப்ரகரணத்தில் ஆன்மாவினுடைய இலக்கணத்தை அருளிச் செய்கையில் “ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம்பரமாய் என்கிறபடியே தேஹேந்திரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்தமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞானாச்ரயமாய், ஈச்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய், சேஷமாயிருக்கும்” என்று கூறியதையும் இங்குக் காண வேண்டும்

பூவின் மிசை ஆரணங்கின் கேள்வன் – “மலர்மேல் உறைவாள்” (திருவாய்மொழி – 4-5-2) என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி தாமரைப் பூவின்மேல் வசிப்பவளாய், அழகான வடிவை உடையவளான பெரிய பிராட்டியாருக்கு மணாளனாய் இருப்பவன் என்று இதற்குப் பொருள். அணங்கு – தெய்வப்பெந். அழகு முதலிய தெய்வ குணங்கள் எல்லாம் நிறைந்த பெரிய பிராட்டியார். கேள்வன் – அவளுக்கு மணாளன்.

அமலன் – தீய குணங்களுக்கு எதிரியாய் இருப்பவன்.

அறிவே வடிவாம் – ஞானத்தையும் ஆனந்தத்தையும் தனக்கு வடிவமாய்க் கொண்டிருப்பவனான நாராயணனுடைய

தாட்கே அடிமை – திருவடிகளுக்கே ஆத்மா அடிமையானவன்

நாராயணன் என்றது தன்னை ஒழிந்த அனைத்துப் பொருள்களும் தனக்குச் சரீரமாய்த் தான் சரீரியாய் (சரீரி – உயிர்) அதாவது எல்லாவற்றுக்கும் தான் உயிராய் இருப்பவன் என்று பொருள்.

கருத்து:- அறிவு மயமாய் சுகமயமாய் விளங்குகிற ஆன்மாவாகிற நான், தேவனல்லன், மனிதனல்லன், விலங்கல்லன், செடி, கொடி தாவரம் அல்லன், கூறிய யாவையும் அல்லன். தாமரை மலரில் தோன்றிய அழகிய தெய்வமான இலக்குமி தேவிக்கு மணாளனும், குற்றங்களுக்கு எதிரியாய் இருப்பவனும் ஞானத்தையே உருவமாகக் கொண்டவனும், அனைத்துப் பொருள்களுக்கும் உயிரானவனுமான நாராயணன் திருவடிகளுக்கே அடிமைப்பட்டவனாவேன் என்பது பாடல் கருத்தாகும்.

Leave a Comment