உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 24

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்

தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் பிஞ்சாய்ப்

பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்

வழுத்தாய் மனமே மகிழ்ந்து 

இருபத்து நான்காம் பாசுரம். ஆழ்வார்களைக் காட்டிலும் மிகுந்த பெருமையைப் பெர்ற்றவளான ஆண்டாளைக் கொண்டாடுமாறு தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.

ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு என்பது ஐந்து என்று ஒரு எண்ணிக்கையாகவும் பயப்படுபவர்கள் என்பதையும் குறிக்கும். அதாவது பஞ்ச பாண்டவர்களுக்குப் பின் இருந்த ஒரே வாரிசான பரீக்ஷித்து போலே ஆழ்வார்கள் பதின்மர்க்கும் ஒரே வாரிசு என்று முதல் அர்த்தம். எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு என்று இரண்டாம் அர்த்தம். பெரியாழ்வார் முழுவதுமாக மங்களாசாஸனம் செய்தார். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தி நிலையை அடைந்தார்கள். ஆண்டாளோ, பெரியாழ்வாரைப் போலே மங்களாசாஸனமும் செய்தாள், மற்றைய ஆழ்வார்களைப் போலே பக்தியிலும் உயர்ந்து விளங்கினாள். பிஞ்சாய்ப் பழுத்தல் என்றால், செடி பூத்து, பின்பு காயாகி, பின்பு பழம் தருவது போல் அல்லாமால், “திருத்துழாய் முளைக்கும் போதே பரிமளிக்குமா போலேமுதலிலேயே பழமாகப் கனிந்து இருத்தல். அதாவது, சிறு வயதிலேயே உயர்ந்த பக்தி நிலையிலே இருத்தல். ஆண்டாள் நாச்சியார் ஐந்து வயதிலேயே திருப்பாவை பாடினாள். நாச்சியார் திருமொழியிலே எம்பெருமானை அடைய மிகவும் உருகினாள்.மனமே! இப்படிப்பட்ட ஆண்டாளை எப்பொழுதும் கொண்டாடு.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment