Category Archives: thamizh

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 31 – 40

நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதபோதும் நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன் எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச்செய்தார்.

நாற்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத் திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும் திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார் “பொலிக! பொலிக!” என்றார். இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக்கொண்டால், மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

நாற்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால் மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால், எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும் ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து, தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ்வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

நாற்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும் நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும், அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

நாற்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், உருவெளிப்பாட்டைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனி? நம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார், உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில் “என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

நாற்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி, எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து), திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள், ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

நாற்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும் அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளேசாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக “எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை; உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை; என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார். கருணை மிகுந்த இப்பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நாற்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய கைம்முதல் இல்லாத் தன்மையை அறிவித்து ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும், எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால், கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால் ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார். இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்; இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

நாற்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும் புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்; ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்; மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்றபின், எம்பெருமானின் திருவடிகளுக்கு வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

ஐம்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் “உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணா! உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத்திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி, உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-41-50-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 31 – 40

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 21 – 30

paramapadham

முப்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், ஐச்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்

ஆழ்வார் 1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று 2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று 3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும் 4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச்செய்தார்

முப்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார், எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு, அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால், அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்; மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்), மிகவும் வருத்தமுற்றார்.

முப்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி, காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி, தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப்பட்டபடி காட்டிக்கொடுத்து ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்; இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட, இவ்வுலகம் நிலை பெற்றது.

முப்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து, அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்; அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி, அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

முப்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து

பரமபதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான், இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்; இப்படி ஸர்வேச்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து, தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்; ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட, நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம்விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும், இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி மாமுனிகள் அருளிச்செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்

ஆழ்வாரின் தீர்க்கமுடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் கலந்து, ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்; இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்; எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்; இதுவே ஆழ்வாரின் தன்மை.

முப்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார், அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு

ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்; உணர்ந்தபின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு, அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

முப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத ஆத்மாவிலும் ஆத்மாவின் உடைமைகளிலும் தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என்தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு 

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும், பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேச்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால், ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

முப்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று

இவ்வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லையில்லாத துன்பங்களை அனுபவிக்கும் ஆத்மாக்களின் தாழ்ச்சியையும் அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார், ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நாற்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப் பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி, “இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின் திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-31-40-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 11 – 20

Mahavishnu-universes

இருபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்

முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து, அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை, அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும் ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.

இருபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து

முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்; கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.

இருபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே!  புகழ்

நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன் பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.

இருபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து, வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்

தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேச்வரன், தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பட்டதால் வந்த பெருமையுடன், வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.

இருபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும், அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே!  செய்

நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால், அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும் அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.

இருபத்தஆறாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை) என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று

சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார் “இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு, உயர்த்தி பொருந்திய பரத்வம், சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே அடைவதற்கு எளிது” என்று அருளிச்செய்தார்.

இருபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்துகுந்த குறிக்கோள் என்று பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா

ஆழ்வார் ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார். இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு இவ்வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.

இருப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன் இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்

ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக, அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களைவிட்டு ஸர்வேச்வரனை அடைந்தன; ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட, ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்; இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.

இருபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்

நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே! உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்? எல்லோருக்கும் ச்ரிய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக்குருகூரின் தலைவரான ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.

முப்பதாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால் எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்

ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே! பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேச்வரனின் கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும்பேறும்படிச் செய்யுங்கள்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-21-30-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 11 – 20

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 1 – 10

Mahavishnu-universes-2

பதினொன்றாம் பாசுரம். மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப்போலே துன்புறுவதாகச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து

தன்னடியார்களை அணுகும் ஸர்வேச்வரன் தன்னை மறைத்துக் கொள்ள, ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்; தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்; இப்படிப்பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

பன்னிரண்டாம் பாசுரம். மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல், திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார் ஸர்வேச்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச்செய்ததை அறிந்து, அவ்வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள், இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

பதிமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக்குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய ஸர்வேச்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க, பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

பதினான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!

ஆழ்வார் பரமபதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும் அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்; அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப்பட்டு, பேசப்பட்டார்; அந்தோ!

பதினைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து, திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அந்தாமத்தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை

ஸர்வேச்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு, திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து, உதாரகுணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

பதினாறாம் பாசுரம். மாமுனிகள், ஈச்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார் தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்

நித்யவிபூதிக்குத் தலைவனான ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்; அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

பதினேழாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன் ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச்செய்தார்; இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது; நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும் மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத்திருவடிகளில் சரணடைவாயாக.

பதினெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்யஸம்ஸாரிகளை நித்யஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்; எம்பெருமானின் இத்தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச்செய்து இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்; இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.  இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம். தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால், நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

இருபதாம் பாசுரம். மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக அனுபவிப்பதை அருளிச்செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி

முன்பு அருளிச்செய்த, மிகவும் ஒளிவிடும் புருஷார்த்தத்தை அடைய, ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்துவரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை, தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச்செய்தார்; இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-11-20-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 10

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< தனியன்கள்

paramapadhanathan

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும்.

இரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும் தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும் அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார் மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த “எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று அருளிச்செய்தார்.

மூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை) உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

நான்காம் பாசுரம். மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய், அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம் “நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து, தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார். இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

ஐந்தாம் பாசுரம். மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை) என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து

மிகுதியான ஐச்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும் தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார், அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்; ஸர்வேச்வரன் தன்னுடைய ஒளிவிடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

ஆறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார், எல்லா தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான ஸர்வேச்வரனின் தன்மைகளை “பூர்ணனான ஸர்வேச்வரன், அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக்கொள்வான்; மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி, இவ்வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கியருளினார்.

ஏழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்; மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்; அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி, அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

எட்டாம் பாசுரம். மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும் எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை

நேர்மை இல்லாதவர்களை, அதாவது தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை, ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேச்வரனின் குணத்தைப் பேசி எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம் தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஒன்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும் குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்

ஸர்வேச்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும் ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார், அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே, ஸர்வேச்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

பத்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத்தன்னை திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்

திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக்கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான், இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து, தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்; என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-1-10-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

Audio

e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nngwlxL2boI27NIf8T?e=TZV580

ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் (பரிபக்குவமான பக்தி) அருளப்பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவுள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் பெருக்கே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்கிற நான்கு ஆச்சர்யமான ப்ரபந்தங்களாக அமைந்தன. இவற்றுள் திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. மோக்ஷத்தை விரும்புபவனான முமுக்ஷு அறிந்து கொள்ள வேண்டிய முக்யமான விஷயங்கள், அதாவது அர்த்த பஞ்சகம் திருவாய்மொழியில் நன்கு விளக்கப்பட்டுளன. திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழியின் அர்த்தங்களை நன்கு விளக்குகிறது.

திருவாய்மொழி நூற்றந்தாதி மணவாள மாமுனிகளால் அருளப்பட்ட அற்புதமான ப்ரபந்தம். இது பல கட்டுப்பாடுகளைக் கொண்டு அருளப்பட்டது. அதாவது:

  • எளிதில் கற்பதற்கும் சேவிப்பதற்கும் வகையாக அந்தாதி க்ரமத்தில் இருக்க வேண்டும்
  • திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் அர்த்தம் ஈடு வ்யாக்யானத்தில் விளக்கப்பட்ட வகையில் இதில் ஒவ்வொரு பாசுரத்திலும் இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு பாசுரத்திலும் நம்மாழ்வாரின் திருநாமமும் பெருமைகளும் இருக்கவேண்டும்

இந்த ப்ரபந்தம் மிகவும் இனிமையானது. இதனுடைய சுருக்கமான அர்த்தங்களை இதற்குப் பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வ்யாக்யானத்தின் உதவியுடன் அனுபவிக்கலாம்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/09/thiruvaimozhi-nurrandhadhi-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.10 – முனியே

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.9

பரமபதத்தை மானஸீகமாக அனுபவித்த ஆழ்வார், தன்னுடைய திருக்கண்களை விழித்துப் பார்த்துத் தான் இன்னும் ஸம்ஸாரத்தில் இருப்பதைப் பார்த்து, மிகவும் வருத்தப்பட்டார். இனியும் தன்னால் தரிக்க முடியாது என்றுணர்ந்து எம்பெருமானைக் கதறி அழைத்தும், பிராட்டியின் மீது ஆணையிட்டும் எம்பெருமானிடத்தில் தன்னைப் பரமபதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானும் இவர் பிரிவால் இவரை விடவும் வருந்தி, உடனே பரமபதத்தில் இருந்து பிராட்டியுடன் தன்னுடைய கருட வாஹனத்தில் புறப்பட்டு ஆழ்வார் இருந்த இடத்துக்கு வந்து, ஆழ்வாரைத் தானே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றான். ஆழ்வாரும் ஆனந்தமாக “அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்” என்று தானே ஆனந்தத்துடன் சொல்லி இந்த ப்ரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.

முதல் பாசுரம். ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களாலே முதலிலிருந்து உபகாரகனாய் இருந்து, வடிவழகைக் காட்டி ருசியை உண்டாக்கி, உன்னை விட்டு வாழ முடியாதபடி எனக்கு அனுபவத்தைக் கொடுப்பதாக ஆசையுடன் வந்த நீ, இனியும் குணங்களை மட்டும் காட்டி வஞ்சித்து அகன்று போக விட மாட்டேன் என்கிறார்.

முனியே நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே! என் கள்வா!
தனியேன் ஆருயிரே! என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

ஸ்ருஷ்டி செய்யும் விதத்தை நினைப்பவனே! ஸ்ருஷ்டியைச் செய்வதற்காக ப்ரஹ்மாவைச் சரீரமாக உடையவனே! ஸ்ருஷ்டித்த உலகத்தை பின்பொரு நாள் அழிப்பதற்காக முக்கண்ணனாய் உபகாரகனான ருத்ரனைச் சரீரமாக உடையவனே! எனக்கு பழுத்த பழம் போலே மிக இனிமையாக இருக்கும் திருவதரத்தையும் தாமரைப்பூப்போலே இருக்கும் திருக்கண்களையும் துளைக்கப்படாத, கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியையும் உடையவனே! என்னையும் அவ்வழகாலே வஞ்சித்துக் கொண்டவனே! ஸம்ஸாரத்தில் தனிமைப்பட்ட எனக்கு உயிரானவனே! என் தலைக்கு மேலே வந்து இருந்து உன்னிடத்தில் எனக்கு ஆர்த்தியையும் உண்டாக்கின பின்பு நான் உன்னை முன்புபோலே அகன்று போக அனுமதிக்கமாட்டேன். என்னை நீ சிறிதும் வஞ்சிக்காமல் இருக்கவேண்டும்.

இரண்டாம் பாசுரம். தம்முடைய கார்யத்தை எம்பெருமான் செய்கைக்காக அவனுக்கும் விரும்பத்தக்கவளான பிராட்டியுடைய திருவாணை என்கிறார்.

மாயஞ்செய்யேல் என்னை உன் திருவார்வத்து மாலை நங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ

என்னை இனி வஞ்சிக்காமல் இருக்க வேண்டும். உன் செல்வத்தின் அடையாளமாய், திருமார்புக்கு பரபாகமாய் (எதிர் நிறம்) ஒரு தங்க மாலை போன்றவளாய் குண பூர்த்தியை உடையவளாய் சிறந்த கூந்தலையுடைய லக்ஷ்மியின் ஆணையானது உனக்கு ஆணையாக இருக்கும். அன்பு செய்து உன்னோடு என்னை ஆத்மபேதம் இல்லாதவாறு ஒன்றாக நினைக்கும்படிக்கு என்னைக் கூசாமல் அங்கீகரித்து அருளினாய். என்னை வந்து “ஆழ்வீர் வாரும்” என்று அழைத்துக்கொண்டருள வேண்டும். ஐயோ! உன் ஆசையை நிறைவேற்ற நான் ஆணையிட வேண்டியிருக்கிறதே என்று கருத்து.

மூன்றாம் பாசுரம். ப்ரஹ்மா முதலிய ஸகல ஆத்மாக்களுக்கும் பிறப்பிடமான திருநாபீகலத்துக்கு மூலஸ்தானமான நீ வந்து என்னை ஏற்றுக்கொளண்டருள வேண்டும் என்கிறார்.

கூவிக் கொள்ளாய் வந்தந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே!
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே உம்பரந்ததுவே

எனக்கு மிகவும் இனியவனாய் துளைக்கப்படாத கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியை உடையவனாய், அடைந்து வணங்கக்கூடிய ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன் முதலானவர்களுக்கு முதலான திருநாபீகமலத்துக்கு இருப்பிடமாய், நித்யஸூரிகளுக்கும் இருப்பு செயல்கள் முதலியவைகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே! என் ஆத்மாவுக்கு ஓர் பற்றுக்கொம்பு உன்னைத்தவிர நான் அறிகின்றிலேன். நீயே வந்து அழைத்து என்னைக் கொண்டருளவேண்டும். ஐயோ! உன் கார்யத்தை நான் சொல்ல வேண்டியுள்ளதே.

நான்காம் பாசுரம். எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்ட நீ, உன் சரீரமான என்னை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு வைத்து, என்னை இந்த ஸம்ஸாரத்தில் தவிக்க விட்டாயே என்று வருத்தத்துடன் கூப்பிடுகிறார்.

உம்பர் அந்தண் பாழேயோ! அதனுள் மிசை நீயேயோ!
அம்பர நற்சோதி! அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே

மேலானதாய், உனக்கு விளையாட்டுப்பொருளாக இருப்பதாலே சிறந்ததாய், குளிர்ந்திருப்பதாய், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷத்தை விளைத்துக்கொள்ளும் இடமாய் இருக்கும் மூலப்ரக்ருதிக்குள் இருப்பவனே! ஆகாசம், சிறந்ததான தேஜஸ்ஸு முதலிய பொருள்களைப் படைத்து அதற்குள்ளும் அந்தர்யாமியாய் இருந்து, அண்டத்துக்குள்ளே ப்ரஹ்மா ருத்ரன் ஆகியோரைப் படைத்து அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் நீ. தேவர்களையும், மனுஷ்யர் முதலிய அறிவுடையவர்களையும், சிந்தித்துப் படைத்தவன் நீ. என்னுடைய சரீரத்தை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு என்னை இங்கேயே விட்டு வைத்தாயே.

ஐந்தாம் பாசுரம். எனக்கு மிகவும் இனியவனாக இருந்தும் என்னை நீ விலக்கினால் எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ என்கிறார்.

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனதென்பதென்? யானென்பதென்?
தீர இரும்புண்ட நீரது போல என் ஆருயிரை
ஆரப் பருக எனக்கு ஆராவமுதானாயே

தன் காய்ச்சல் தீரும்படி இரும்பு உறிஞ்சின நீரைப்போலே என் ஆத்மாவின் வருத்தம் தீரும்படி முழுவதுமாகப் பருகுகைக்கு எனக்கு ஆராத அமுதமானாயே. நீ விலக்கி விட்டு அநாதரித்து என்னை மற்ற விஷயங்களிலே போக்க நினைத்தால், பின்பு நான் மற்று ஆரைக்கொண்டு எந்தப் பலனைப் பெறுவேன்? ஐயோ! என்னது என்று சொல்வதற்கு எந்த உபகரணமும் இல்லை. நான் என்பதற்கு ஸ்வதந்த்ரன் இல்லை.

ஆறாம் பாசுரம். பிராட்டியிடத்தில் கொண்டாற்போலே என்னிடத்திலும் மிகவும் ஆசைகொண்ட நீ உன் இனிமையான தன்மையைக் காட்டி அனுபவத்தைக் கொடுத்தாய். இனி முழுக்க என்னை ஆளவேண்டும் என்கிறார்.

எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பா! என் அன்பேயோ

தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப்போன்ற நிறத்தை உடையவனாய் தாமரை போன்ற திருக்கண்களையும் சிவந்த திருவதரத்தையும் உடைய உனக்குத் தகுதியான திருமேனியை உடையவளாய் பூவில் பிறப்பாலே மிகவும் இனியவளாய் பெண்களுக்குரிய ஆத்மகுணங்களை உடைய லக்ஷ்மிக்கு அன்பை உடையவனே! என்னிடத்தில் அன்பே வடிவொத்தவனாக இருப்பவனே! எனக்கு மிகவும் இனியவனாய் என்னுடைய உடம்பையும் சிறந்ததான ஆத்மாவையும் ஹ்ருதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக அனுபவித்தாய். இனி, குறையும் (மீதம் உள்ளவற்றையும்) அனுபவித்தே விடவேண்டும்.

ஏழாம் பாசுரம். அடியார்களின் ரக்ஷகனான உன்னைப் பெற்றும், இனி விடுவேனோ என்கிறார்.

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக் கடல் கடைந்தாய்! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ

வடிவழகையும் இனிமையையும் உடையவளான பிராட்டிக்கு உகப்பான அத்தாலே என்னிடத்திலும் மிகவும் ஆசையுடன் இருப்பவனே! நீல ரத்னகிரியானது இரண்டு பிறையைக்கவ்வி எழுந்திருந்தாற்போலே சிறந்த வடிவழகை உடைய தனித்துவம் வாய்ந்த மஹாவராஹமாய் பூமியை ப்ரளயத்திலிருந்து முழுகி எடுத்துத் தன் திரு எயிற்றிலே வைத்த செயலாலே எனக்கு ஸ்வாமியானவனே! உன் வடிவின் நிழல்பட்டு நீலமான கடலைக் கடைந்து அடியார்களை ரக்ஷித்தவனே! உன்னைப் பெற்றுவைத்து இனி நழுவவிடுவேனோ?

எட்டாம் பாசுரம். கிடைத்தற்கரியவனாய் எல்லாருக்கும் அந்தர்யாமியாய் எனக்குத் தாரகனான உன்னைப் பெற்றுவைத்துக் கைவிடுவேனோ என்கிறார்.

பெற்றினிப் போக்குவனோ? உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்ற இம்மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றில் புக்கு
முற்றக் கரந்தொளித்தாய் என் முதல் தனி வித்தேயோ!

இரண்டு வகைப்பட்ட கர்மங்கள் அதாவது புண்யம் மற்றும் பாபங்களுக்கு நிர்வாஹகனாய், ஆத்மாவை நடத்துபவனாய், அந்தக் கர்மங்களால் உண்டான பலன்களைக் கொடுப்பவனாய். இந்த மூன்று லோகங்கள் மற்றும் எல்லாமாகிற பெரிய புதரிலே புகுந்து ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாதபடி மறைந்து நிற்பவனாய் எனக்கு முதல் ஸுக்ருதமான (நற்செயல் – நற்பயன்) தனித்துவம் வாய்ந்த காரணனே! உன்னைக் கைபுகும்படிப் பெற்றுவைத்து, உன்னைப் பிரிந்து வாழமுடியாத இந்த நிலையில், விட வழியுண்டோ?

ஒன்பதாம் பாசுரம். காரணம் மற்றும் கார்ய நிலையில் இருக்கும் எல்லா அறிவுள்ள மற்று அறிவற்ற பொருள்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பது முதலான நிலைகளாலே ப்ரதானனாய், அவற்றிலிருந்து வேறுபட்ட சிறந்த ஸ்வரூப ரூப குணம் முதலியவைகளை உடைய உன்னை என்று வந்து அடைவேன் என்கிறார்.

முதல் தனி வித்தேயோ! முழு மூவுலகாதிக்கெல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!

மூன்று லோகங்கள் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நிமித்த மற்றும் உபாதான காரணமாய் அண்டத்துக்கு உள்ளும் புறமும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் வ்யாபித்து தனித்துவம் வாய்ந்த காரணமாய் வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல ப்ரக்ருதியை நடத்துபவனாய், முதல்வனாய், ஒப்பற்றவனாய், எங்கும் பரவி, பத்துத் திக்கிலும் உண்டாய், நித்யமான ஆத்மாக்களுக்கு நியந்தாவனவனே! இப்படி முதல்வனாய் ஒப்பற்றவனான உன்னை நான் எந்நாள் வந்து கூடுவேன்?

பத்தாம் பாசுரம். மூன்று தத்வங்களையும்விடப் பெரியதான தன் ஆசை தீரும்படி எல்லாவிதத்திலும் பரிபூர்ணனாய்க்கொண்டு கூடினாய் என்று தனக்கு ஸாயுஜ்ய மோக்ஷத்தை அளித்து எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.

சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பர நன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே

கார்ய நிலையில் இருக்கும் எல்லாப் பொருள்களையும் சூழ்ந்து வ்யாபித்து கீழும் மேலும் இருப்பதால் பத்துத்திக்கிலும் இருக்கும் நித்யமான பெரிய மூல ப்ரக்ருதியைச் சரீரமாக உடையவனாய், தன்னுடைய ஞானத்தாலே வ்யாபித்து அந்த ப்ரக்ருதியைவிடப் பெருத்து மேலானதாய் சிறப்பை உடைய மலர்ந்திருக்கும் ஞானத்தையுடைய ஆத்மாவைச் சரீரமாக உடையவனாய், இந்த ப்ரக்ருதி மற்றும் ஆத்மாக்களை வ்யாபித்து அதற்கும் மேலே கல்யாண குணங்களால் ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடைய நியந்தா ஆனவனே! வளைத்துக்கொண்டு இவற்றை விடப் பெரிதாய் இருக்கும் என் ஆசையானது தீரும்படி நான் உனக்கு உள்ளே அடங்கும்படி ஸாயுஜ்ய மோக்ஷத்தைக் கொடுத்தாயே!

பதினொன்றாம் பாசுரம். தனக்குப் பலன் கிடைத்த விதத்தை வெளியிட்டு இத்திருவாய்மொழிக்குப் பலமாக, இதில் ஞானம் உடையவர்களுடைய பிறவியின் உயர்த்தியை அருளிச்செய்கிறார்.

அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே

அடியார்களுடைய ஆசை தீரும்படி எல்லையில்லாத ஸம்ச்லேஷத்தைப் பண்ணுகையாலே துக்கத்தைப் போக்கும் அரியாய், ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய், அப்படியே ருத்ரனுக்கும் அந்தராத்மாவான பரமப்ராப்யபூதனைக் கூப்பிட்டு தன் ஆசை தீரப்பெற்று மோக்ஷத்தைப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த சிறந்த அந்தாதிப் பாசுரங்களாக அமைந்த இவையாயிரமும் பரபக்திரூபமாக முடிந்த ஆசையிலே அந்தாதிகளான இப்பத்தையும் அனுஸந்தித்தவர்கள் இவ்வுலகில் பிறந்தே மேன்மையை அடைந்தவர்கள் ஆவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.9 – சூழ்விசும்பு

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.8

பரமபதத்துக்கு விரைந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆழ்வாருக்கு ஏற்பட, எம்பெருமானுக்கும் இவரைப் பரமபதத்துக்கு அழைத்து போகும் ஆசை மிகவும் அதிகமாக, அதற்கு முன் ஆழ்வாருக்குப் பரமபதத்தை அடைவதில் ஆசையை மேலும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ணி வேதாந்தத்தில் சொல்லப்பட்ட அர்ச்சிராதி கதியைக் காட்டிக்கொடுத்தான். ஆழ்வார் அதை அனுபவித்து அந்த அர்ச்சிராதி மார்க்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் போகும்படியையும் பரமபதத்தை அடைந்து அங்கே நித்யஸூரிகளுடன் இருப்பதையும் இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார், தான் பெற்ற பேறு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் கிடைக்கும் என்று அவர்கள் விச்வஸிப்பதற்காக.

முதல் பாசுரம். அர்சிராதி மார்க்கத்தில் செல்வதற்கு முற்பட்டவர்களாய் பூர்ணமாக இனிமையான ஸர்வேச்வரனின் அடியார்களான பாகவதர்களைக் கண்டு, அசையும் மற்றும் அசையாப் பொருள்களையுடைய இந்த ஜகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அருளிச்செய்கிறார்.

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே

எனக்கு தனித்துவம் வாய்ந்த பந்துவாய் ஆனந்தத்தை அளிக்கும் குணங்களை உடைய நாராயணனுக்கு தனித்துவம் வாய்ந்த பந்துக்களான அடியார்களைக் கண்டு மகிழ்ந்து எல்லா இடத்திலும் சூழ்ந்த ஆகாசத்திலே திரண்டிருக்கும் மேகங்கள் தூர்ய கோஷத்தைப் பண்ணின. ஆழமான கடல்கள் அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடின. ஏழு தீவுகளும் பரிசு ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்தின.

இரண்டாம் பாசுரம். இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களானவர்களைக் கண்டு உலகத்தார் கௌரவித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

நாரணன் தமரைக் கண்டுகந்து நல்நீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே

இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களைக் கண்டு உகப்பையுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூர்ணமான மேகமானது உயர்ந்த ஆகாசத்திலே பூர்ணமான பொற்குடங்களாக நிறைந்தது. நிரைக் கொண்டிருக்கும் கடல்களானவை நின்று கோஷித்தன. நெடிய மலைகளாகிற தோரணங்களை அணிவகுத்து உலகிலுள்ளார் எல்லா இடத்திலும் தொழுதனர்.

மூன்றாம் பாசுரம். த்ரிவிக்ரமன் எம்பெருமானின் அடியார்கள் முன்னிலையில் ஆதிவாஹிக லோகத்திலுள்ளவர்கள் வந்து வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்றளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே

மஹாபலி “என்னது” என்று அபிமானித்த அன்று பூமியை தனக்கே ஆக்கிக் கொள்ளும்படி அளந்தவனின் அடியார்களுடைய முன்னிலையில் தூபத்தை ஸமர்ப்பித்து, நல்ல புஷ்ப மழைகளை பொழிந்து, அவ்வோ உலகங்களில் உள்ளவர்களுடையவர்கள் அஞ்சலி செய்தவர்கள். அந்த உலகங்களில் உள்ள நாவடக்கம் உடைய முனிவர்கள் ஸ்ரீவைகுண்டத்துக்குப் போகுமவர்களுக்கு வழி இது என்று சொல்லி எதிரே வந்து “எழுந்தருளலாமே” என்று இரண்டு பக்கத்திலும் நின்றுகொண்டு ஆசையாகச் சொன்னார்கள்.

நான்காம் பாசுரம். பூர்த்தியான இனிமையை உடையவனான திருமாலின் அடியார்களைக் கண்டு தேவலோகத்திலுள்ளவர்கள் வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே

மதுவை வெளியிடும் திருத்துழாயைத் திருமுடியிலே உடைய திருமாலின் அடியார்களுக்கு கண் இமைக்காதவர்களான தேவர்கள் இவர்கள் போகிறவழிக்கு முன்னே இருப்பிடங்களைச் செய்தார்கள். பன்னிரண்டு ஆதித்யர்களும் தம் தம் நிலையிலே கிரணங்களாகிற கைகளை நிரையாகக் கொடுத்தார்கள். அவர்கள் அடித்த முரசங்கள் அதிருகிற குரலானவை அலை கடலிலே ஓசையைப் போன்று இருந்தன.

ஐந்தாம் பாசுரம். வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளானவர்கள் திருமாலுக்கு அடியார்கள் என்று ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே

வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளாகிற ஆதிவாஹிக தேவர்கள் தங்கள் இருப்பிடங்களின் வாசலில் வந்து நின்று திருமால் அடியார்கள் இவர்கள் என்று ஆதரித்து “இங்கே எழுந்தருளுங்கள், எங்கள் இருப்பிடங்களில் ப்ரவேசியுங்கள்” என்று பரிசுகளுடன் வரவேற்ற அளவிலே, வேதத்தைச் சொல்லுவதாகிற சிறப்பை உடையவர்கள் யாகம் முதலிய தர்மங்களை நமக்குக் கிடைத்ததே என்று ஆசையுடன் ஸமர்ப்பித்து கின்னரர்களும் கருடர்களும் கீதங்களைப் பாடினர்.

ஆறாம் பாசுரம். “எல்லாருக்கும் தலைவன் என்பதற்கு அடையாளமாகத் திருவாழியை உடையவனுக்கு அடியவரான நீங்கள் இந்த மேலுலகத்தை ஆளுங்கள்” என்று ஆதிவாஹிகர்களின் மஹிஷிகள் வாழ்த்தினவிதத்தை அருளிச்செய்கிறார்.

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

வைதிகர்கள் எல்லா தர்மங்களையும் ஸமர்ப்பித்தவுடன் பரிமளத்தை வெளியிடும் ஸுகந்தமான தூபங்கள் எல்லாவிடமும் கலந்து, காளங்களையும், வலம்புரிச் சங்குகளையும் கொண்டு ஒலி எழுப்பினார்கள். இந்த அடியார்களைக் கண்ட ஆனந்தத்தால், ஒளி படைத்த கண்களையுடைய தேவஸ்த்ரீகள் திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான நீங்கள் இந்த ஸ்வர்க்கம் முதலான இடங்களை ஆளுங்கள் என்று ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்.

ஏழாம் பாசுரம். திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனாய் எல்லாருக்கும் தலைவனாய் அர்ச்சாவதாரத்தில் எளிமையானாவனாய் இருப்பவனின் அடியார்களை மருத் கணங்களும் வஸு கணங்களும் பின்தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின விதத்தை அருளிச்செய்கிறார்.

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எங்கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை எங்கோவலன் குடி அடியார்க்கே

ஆழமான கடலிலே சயனித்தருளி இருப்பவனாய், எனக்கும் ப்ரஹ்மா முதலியவர்களையும் படைத்தவனான கேசவனாய் கிளர்ந்த ஒளியுடையவனாய் மணிமயமான கிரீடத்தை அணிந்தவனாய் திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனான க்ருஷ்ணனுக்கு பரம்பரையாக அடியார்களானவர்களை தேவஸ்த்ரீகள் வாழ்த்தினவுடன் மருதர்களும் வஸுக்களும் எல்லாவிடமும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.

எட்டாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான க்ருஷ்ணனின் அடியார்கள் என்கிற ஆசையால் பரமபதவாஸிகள் தங்கள் நாட்டெல்லையில் வந்து எதிர்கொள்ள, அடியார்கள் பரமதத்தைக் கிட்டினார்கள் என்று அருளிச்செய்கிறார்.

குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக்
கொடியணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே

அடியார்களுக்காக அவதரித்த கோவிந்தனுக்கு என்றே இருக்கும் குலத்தையுடைய அடியார்கள் என்று ஈச்வரனைப் போலே கிரீடம் முதலியவைகளையுடைய நித்யஸூரிகள் தங்கள் நிலைக்கேற்ப இவர்களை வந்து எதிர்கொள்ள, அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவனாய் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனுடைய ஸ்ரீவைகுண்டத்திலே புகுவதற்கு கொடியாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய மதிள்களையுடைய கோபுரவாசலில் புகுந்தார்கள்.

ஒன்பதாம் பாசுரம். “ஸ்ரீவைகுண்டநாதனுடைய அடியார்கள் நமக்கு விரும்பத்தக்கவர்கள்” என்று, திருவாசல் காக்கும் முதலிகள் ஆசையுடன் இருந்த விதத்தை அருளிச்செய்கிறார்.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

ஸ்ரீவைகுண்டத்தில் சென்று புகுந்தவுடன், திருவாசல் காக்கும் முதலிகள் “ஸ்ரீவைகுண்டநாதனின் விருப்பத்துக்கு ஆட்பட்டவர்கள் நமக்கும் விரும்பத்தக்கவர்கள். எங்கள் இருப்பிடத்தில் வரவேண்டும்” என்று உகந்தார்கள். அத்தேசத்திலே கைங்கர்யபரர்களான அமரர்களும் குணானுபவபரர்களான முனிவர்களும் “பூமியிலே தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருந்தவர்கள் பரமபதத்திலே புகுவது ஒரு பாக்யமே!” என்று உகந்தார்கள்.

பத்தாம் பாசுரம். ஸ்ரீவைகுண்டநாதனின் ஆணையின் பேரில் நித்யஸூரிகளும் திவ்யாப்ஸரஸ்ஸுக்களும் அடியார்களை ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

“நம்முடைய பாக்யம் அடியாக ஈச்வரனின் ஆணையின் பேரில் இந்த அடியார்கள் வந்து புகுந்தார்கள்” என்று சிறந்தவர்களாக வேதாந்தத்தில் காட்டப்பட்ட நித்யஸூரிகள் தங்கள் இருப்பிடங்களில் உபசாரங்களுடன் அடியார்களுடைய திருவடிகளை விளக்கினார்கள். அடியார்களுக்கு மிகச் சிறந்த தனமான எம்பெருமானின் திருவடி நிலைகளையும் எம்பெருமான் திருமேனி ஸம்பந்தம் பெற்றதால் சிறந்ததான திருச்சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்களதீபங்களையும் பூர்ணசந்த்ரனைப் போன்ற முகத்தையும் மடப்பத்தையும் உடைய திவ்ய அப்ஸரஸ்ஸுக்கள் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.

வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே

பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானே வந்து எதிர்கொள்ள, திருமாமணி மண்டபத்தில் எல்லை இல்லாத பெரிய ஆனந்தத்தையுடைய ஸூரிகளோடே கூடி இருந்த விதத்தை, பூங்கொத்து அலருகிற பொழிலையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் பல விதமான சந்தஸ்ஸுக்களை உடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் அனுஸந்திக்கவல்லார்கள் பகவத் குணங்களை அனுபவிக்கப் பெறுவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.8 – திருமாலிருஞ்சோலை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.7

எம்பெருமான் ஆழ்வாரைப் பரமபதத்துக்கு அழைத்துப்போகத் தானே கருடவாஹனத்திலே வந்தருளினான். ஆழ்வாரும் எம்பெருமான் தனக்கு முதலில் இருந்து செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து, நாம் இதற்காக ஒன்றுமே செய்யாமல், அவனே நம்மைக் கைக்கொள்ளுகிறான் என்றிருந்தார். அந்த ஸமயத்தில் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இத்தனை காலம் நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க இன்று எப்படி எம்பெருமானின் கடாக்ஷம் நம் விஷயத்தில் பலித்தது என்று ஒர் ஸந்தேஹம் ஏற்பட அதை எம்பெருமானிடத்திலேயே கேட்டார். எம்பெருமானோ அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க, ஆழ்வார் எம்பெருமானின் நிர்ஹேதுக (இயற்கையான) க்ருபையைப் புரிந்து கொண்டு, நம் விஷயத்தில் எம்பெருமான் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்தானே என்று மகிழ்ந்து களிக்கிறார்.

முதல் பாசுரம். தற்செயலாக நான் திருமாலிருஞ்சோலை மலையை அடையும்போது எம்பெருமான் பிராட்டியுடன் என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார்.

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென்திருப்பேரே

நாட்டில் வார்த்தை சொல்வதைப் போலே நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேன். அப்படிச் சொன்ன அளவிலே ச்ரிய:பதியாய் பரிபூர்ணனான தான் வந்து என் நெஞ்சுக்குள்ளே பூர்ணமாகப் புகுந்தான். அந்தத் திருமால் சென்று சயனித்தருளின இடம் மிகவும் உயர்ந்த மாணிக்கங்களை உந்தித் தள்ளுகிற நீரையுடைய காவிரியின் தென்பக்கத்தில் இருக்கும் அழகிய திருப்பேர்.

இரண்டாம் பாசுரம். முன்பு குறைவாளரைப் போலே இன்று இங்கிருந்து போகேன் என்று சொல்லிக்கொண்டு என் நெஞ்சிலே பூர்ணனாய்ப் புகுந்தான் என்கிறார்.

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலை ஏழுலகுண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

திருப்பேரிலே நிரந்தரமாக வாழும் ஸர்வேச்வரன் முன்பு குறைவாளனாய் இருந்தாற்போலே இன்று வந்து போகேன் என்று என் நெஞ்சிலே பரிபூர்ணமாம்படிப் புகுந்தான். மேகங்கள் ஏழையும், ஸமுத்ரங்கள் ஏழையும், குல பர்வதங்கள் ஏழையும் லோகங்களை எல்லாம் அமுதுசெய்தும் நிறையாத வயிற்றை உடையானை என்னுள்ளே எல்லாவிதத்திலும் பரிபூர்ணமாய் அனுபவிக்கப் பெற்றேன்.

மூன்றாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைவது எளிதாகி, அதன் காரணமாக எல்லா துக்கங்களும் விலகப் பெற்றேன் என்கிறார்.

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச்சேர்வது எனக்கு எளிதாயினவாறே

கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேரை இருப்பிடமாக உடைய ஸுலபனான எம்பெருமானின் திருவடிகளை அடைவது எனக்கு எளிதான பின்பு அவற்றைப் பெற்றேன். அதன் காரணமாக பிறவித் தொடர்பை அறுத்தேன். அதனால் வரும் துக்கங்களைச் சேரேன். ஸம்ஸாரத்தில் நிற்கையாகிற அஜ்ஞானத்தைப் போக்கினேன்.

நான்காம் பாசுரம். எனக்குப் பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்தான். அதனாலே என் கண்ணும் நெஞ்சும் களிக்கும்படி ஆனந்தித்தேன் என்கிறார்.

எளிதாயினவாறென்று என் கண்கள் களிப்பக்
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே

வருந்தின என் கண்கள் கிடைத்தற்கரிய பலம் எளிமையாகக் கிடைக்கிறதே என்று களிக்கும்படி ஆனந்தம் நிறைந்த நெஞ்சை உடையவனாகக் கொண்டு ஆனந்தித்தேன். அதற்குக் காரணம் கிளிகள் தாவும்படி செறிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே ஸுலபனாக இருப்பவன், மிகவும் தெளிவையுடைய ப்ரகாசமான பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்ததே.

ஐந்தாம் பாசுரம். இப்படிப் புருஷார்த்தத்தைக் கொடுப்பதற்காக என்னுடைய எல்லா விரோதிகளையும் போக்கினான் என்கிறார்.

வானே தருவான் எனக்கா என்னோடு ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென்திருப்பேர் நகரானே

வண்டுகள் நிறைந்த பொழிலையுடைத்தாய் அழகியதான திருப்பேர் நகரிலே எழுந்தருளி இருப்பவன், எனக்குப் பரமபதத்தையே தருவதாக எண்ணி, என்னோடு சேர்ந்து சபதம் செய்து மாம்ஸம் நிறைந்த கூடான இந்த சரீரத்துக்குள்ளே இன்று தானே வந்து புகுந்து, அவனைப் பிரிந்து நாம் தடுமாறுவதற்குக் காரணமான புண்ய பாபங்களைப் போக்கினான்.

ஆறாம் பாசுரம். மற்றை உகந்தருளின (எம்பெருமான் ஆசைப்பட்டு வாழும்) தேசங்களை விட என் நெஞ்சில் அதிகம் ஆசை கொண்டு இங்கே புகுந்து அவன் அனுபவிக்க அதைக் கண்டு ஆனந்தி ஆனேன் என்கிறார்.

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே

என்னை அடைவதற்காக திருப்பேர் நகரிலேயும் பின்பு இன்னும் அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை மலையிலும் நிரந்தரமாக வாழும் மஹோபகாரகன் இன்று தானே வந்து “இங்கேயே இருப்பேன்” என்று எண்ணி என் நெஞ்சு நிறையும்படிப் புகுந்தான். அவனுடைய பெரிய ஆசையைப் பெற்று குணானுபவம் என்னும் அமுதத்தைப் பருகி ஆனந்தித்தேன்.

ஏழாம் பாசுரம். இப்படி என் நெஞ்சில் நிரந்தரமாக இருப்பவனை அனுபவித்துக் களிக்கிற எனக்கு என்ன குறை உண்டு என்கிறார்.

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை? மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே

வண்டுகள் களிக்கும் பொழில் சூழ்ந்த திருப்பேர்நகரான் தன்னை எப்பொழுதும் கண்டு அனுபவிக்கும்படி என் கண்ணுக்குள்ளே நின்று போகாமல் இருக்கிறான். இப்படி அனுபவித்து ஆனந்தித்த எனக்கு மேலே பரமபதத்திலே போய் அனுபவிக்க என்ன குறை இருந்தது? அதிகமான தொண்டு மேலெழுந்து முடிவிலே தொழுகைக்கு வாசகமான “நம: என்னும் வார்த்தையைச் சொன்னேன்.

எட்டாம் பாசுரம். எல்லா விதத்திலும் மிகவும் இனியவனாகக் கொண்டு என் நெஞ்சிலே த்ருடமாகப் புகுந்தான் என்கிறார்.

கண்ணுள் நின்றகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நன் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே

வெளிக்கண்களுக்கு எப்பொழுதும் அனுபவிக்கும்படி அகலாமல் இருக்கிறான். என்னைப் பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் பெரியவனாய் இருக்கிறான். எண்ணிப்பார்க்கில் மிகவும் நுண்ணிய தன்மைகளை உடையவனாய், தானே ஏழ் இசையின் சுவைகளை உடையவனாய், பல வர்ணங்களில் உயர்ந்ததான மாணிக்கங்களாலே அமைக்கப்பெற்ற மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே வாழ்பவன் என் மனதில் நிர்ஹேதுகமாக (காரணமே இல்லாமல்) இன்று த்ருடமாம்படிப் புகுந்தான்.

ஒன்பதாம் பாசுரம். “இன்று காரணமேயில்லாமல் எனக்கு நன்மை செய்தவன் முன்பு என்னை கைவிட்டிருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்கவேண்டியிருந்தது என்கிறார்.

இன்றென்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

அஸத்தாக இருந்த என்னை இன்று ஸத்தான வஸ்துவாக்கி மிகவும் உயர்ந்த இனிமையை உடையவனான தன்னை என் நெஞ்சுள்ளே வைத்தான். முற்காலத்தில் என்னை மற்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கும்படி எண்ணியிருந்தது எதற்காக? குன்றென்று சொல்லும்படி விளங்குகிற மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இவை இரண்டில் ஒன்றுக்கான காரணத்தை அருளிச்செய்வதற்காக நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

பத்தாம் பாசுரம். கைங்கர்யத்தைப் பெற்றுக்கொள்பவனான அவன் திருவடிகளை அடிமைசெய்து பெற்றேன். இனி வரும் காலம் எல்லாம் இதுவே போதும் என்கிறார்.

உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே

என் முயற்சியாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் உன் திருவடிகளை அடைந்தேன். ப்ரீதியால் தூண்டப்பட்டு வாசிகமான கைங்கர்யத்தைச் செய்து உன்னுடைய திருவடிகளைப் பெற்றேன். இயற்கையான பந்துவானவனே! இந்தக் கைங்கர்யமே எனக்கு எப்பொழுதும் வேண்டுவது. ஆசார்யன் மூலமாக வேதார்த்தங்களைக் கற்று அதை நடத்தவல்லவர்கள் பகவதனுபவத்துடன் வாழும் திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் உனக்காகவே இருக்கும் அடியவர்களுக்கு துன்பங்கள் தன்னடையே நில்லாதே.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாகப் பரமபதத்தை ஆள்வதை அருளிச்செய்கிறார்.

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே

துக்கத்துக்கு இடமல்லாத தேசமாய் பெரிய பரப்பை உடைய வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக உயர்ந்த மஹான்கள் பலரும் திருவாய்மொழி கேட்டு வாழும் திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய சொற்கள் சேர்ந்திருக்கும் ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இவை பத்தையும் கற்க வல்லவரான தொண்டர்கள் தாங்கள் நிர்வாஹகராய் நடத்துவது, பெரியதாகச் சூழ்ந்திருக்கும் பொன்மயமான பரமபதமே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.7 – செஞ்சொல்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.1

ஆழ்வார் பரமபதத்தை விரைந்து சென்று அடையவேண்டும் என்று ஆசைப்பட, எம்பெருமானும் அதற்கு இசைந்தான். ஆனால் அவனோ ஆழ்வாரைத் திருமேனியுடன் பரமபதத்துக்கு அழைத்துச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதைக் கண்ட ஆழ்வார் அவனுக்கு அவ்வாறு செய்யலாகாது என்று உபதேசிக்க, எம்பெருமானும் இறுதியில் ஆழ்வாரின் விருப்பத்துக்கு இசைந்தான். அதைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானின் சீல குணத்தைக் கண்டு மிகவும் ப்ரீதியை அடைந்து, அதை இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார்.

முதல் பாசுரம். ஈச்வரன் தன்னிடத்தில் கொண்ட ஆசையைப் பார்த்த ஆனந்தத்தாலே, தங்களை காத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடும்போது அவனிடத்தில் மூழ்கிவிடாமல் இருக்குமாறு அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானேயாகி நிறைந்தானே

திருமாலிருஞ்சோலை மலையில் இருப்பவனாய் எல்லாரிடத்திலும் எல்லாவற்றையும் அவர்கள் அறியாமல் அபஹரிப்பவனாய் அதுக்குக் காரணமான ஆச்சர்யமான ரூபம், குணம் முதலியவைகளை உடையவனான எம்பெருமான், கவி பாடுவித்துக்கொள்ளும் வஞ்சச் செயலாலே உளனாய், இங்கே வந்து என் நெஞ்சினுள்ளும் உயிரினுள்ளும் கலந்து, அருகில் இருப்பவர்களும் அறியாதபடி அந்த என்னுடைய நெஞ்சையும் உயிரையும் உண்டு தானே அனுபவிப்பவனாய் எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவன் ஆனான். நேர்மையான சொற்களாலே கவிபாட வல்லவர்களே! அவன் கையில் உங்கள் உயிர் மற்றும் உயிரைச் சார்ந்த பொருள்களும் அகப்படாதபடி காத்துக்கொண்டு வாசிக கைங்கர்யம் செய்யப் பாருங்கள்.

இரண்டாம் பாசுரம். என்னுடன் கூடிய ஆனந்தத்தாலே எனக்கு மிகவும் இனியவனாகக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்தவனாக இருந்தான் என்கிறார்.

தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனேயாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே

என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து, தானே ப்ரதானனாகி, பரிபூர்ணனாய் எல்லா லோகங்களும் ஆங்காங்கே இருக்கும் எல்லா ப்ராணிகளும் தானேயாம்படி அந்தர்யாமியாய் இருந்து, நான் என்ற வார்த்தையால் குறிக்கப்படும் வஸ்துவும் தானேயாகி, தன்னைப் பற்றித் தானே துதிப்பவனுமாய் இருந்து துதித்து, அதனால் ஏற்பட்ட ஆனந்தத்தை எனக்குக் காட்டுகையாலே, தேனும் பாலும் சர்க்கரையும் அமுதுமாய் அவற்றில் இருக்கும் எல்லாவித இனிமையும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் தலைவனான தானேயாகி நின்றுவிட்டான்.

மூன்றாம் பாசுரம். என்னளவில்லாமல் என் சரீரத்திலும் ஆசை கொண்டு, அதனாலே ஆனந்தத்துடன் நிலைத்து நிற்கிறான் என்கிறார்.

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திருவருளே

என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து அத்துடன் நில்லாமல் என்னுடைய அஜ்ஞானம் ஆகியவற்றுக்குக் காரணமான சரீரத்துக்குள்ளே புகுந்து என்னையும் சரீரத்தையும் தானே அபிமானியாகி நின்ற ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய இயற்கையான ஸ்வாமியானவன் பொருந்தி வாழும் தேசமாய் தெற்குத் திசையில் சிறந்ததாய் இருக்கும் திருமாலிருந்சோலையில் நிற்கிற திசையை நோக்கி கை கூப்பி அடைந்த நான் அந்தத் திசையிலும் ஆசை பிறந்தவனாய், வேறு ஒரு போக வேண்டிய இடம் இருப்பதாக நினைத்துப் போவேனோ? இயற்கையான தலைவனின் ஆசைகள் எப்படி இருக்கிறது!

நான்காம் பாசுரம். என் சரீரத்தை விரும்புவதற்குக் காரணம் இந்தத் திருமலை ஆகையால் இரண்டையும் ஆதரித்து இரண்டு இடங்களையும் கைவிடாமல் இருக்கிறான் என்கிறார்.

என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே

என்னைப்பிடிப்பதற்காக எல்லா உலகங்களும் எல்லா ப்ராணிகளும் தானேயாகும்படி அந்தர்யாமியாய் இருந்து அத்துடன் நில்லாமல் தன்னை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படி பூமியிலே மிகவும் நடந்து தெற்குத் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ்சோலை என்று பேரைக்கொண்டிருக்கும், நம் போன்றவர்களுக்கு அனுபவிக்கும்படி இருக்கும் திருமலையைக் கைவிடமாட்டான். என் சரீரத்தையும் மிகவும் கைவிடாமல் இருக்கிறான். ஸ்வாமியானவனுடைய உபகாரங்கள் எப்படி இருக்கின்றன!

ஐந்தாம் பாசுரம். தன்னுடன் கூடி திருவாய்மொழி பாடக் கேட்ட ப்ரீதியாலே ரஸிகனாய் தலையை ஆட்டுகிறான் என்கிறார்.

நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித்
தென்னாவென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே

எம்பெருமானை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படியும் பக்தி பரவசராய் எம்பெருமானை ஆசைப்படும் தேவர்கள் பொலிவடையும்படியும் எம்பெருமானின் எண்ணிப்பார்க்க முடியாத வைபவங்களை ப்ரேமத்தாலே ஆசைப்படும் நல்ல முனிவர்கள் ஆனந்தத்தை அடையும்படியும் பண் நிறைந்த இசையையுடைய இனிய கவிகளை எனக்கு அந்தர்யாமியாய் இருந்து கொண்டு தன்னையே தான் பாடி திருமாலிருஞ்சோலையானாய் நிற்கிற என் ஸ்வாமியானவன் தென்னா தெனா என்று தலையை ஆட்டி அனுபவிக்கிறான்.

ஆறாம் பாசுரம். ப்ரஹ்மா ருத்ரன் முதலியவர்களுக்கும் உபகாரகனாய் ச்ரிய:பதியானவன் திருமலையில் நின்று என்னை அடிமைகொள்ளுகைக்கு மிகவும் ஆசையுடன் இருக்கிறான் என்கிறார்.

திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூவுலகும் தன்
ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே

ருத்ரனும் ப்ரஹ்மாவும் காணப்பெறாமல், அவர்கள் பெறுதற்கரிதான பெரிய பக்தியை உடையவர்களாய்க் கொண்டு திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணும்படித் தன் அருளைக் கொடுத்த ஸர்வாதிகனாய், உயர்ந்த மூன்று லோகங்களையும் தன்னுடைய தனித்துவம் வாய்ந்த சக்திபெற்ற திருவயிற்றினுள்ளே ஒரு சிறு பகுதியிலே வைத்து கல்பந்தோறும் சிறந்த முறையில் ரக்ஷிப்பவனாய், திருமகள் கேள்வனாய் திருமாலிருஞ்சோலையிலே நிலை பெற்றவனாய் இருந்து என்னை அடிமை கொள்ளுவதில் பெரும் பித்தனாய் இருக்கிறான்.

ஏழாம் பாசுரம். தம்மை ஏற்றுக்கொள்வதற்காக அவன் வந்து நின்ற திருமலையினுடைய பெருமையைப் புகழ்ந்து அருளுகிறார்.

அருளை ஈ என்னம்மானே! என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே

என்னுடைய ஸ்வாமியே! க்ருபையைத் தந்தருளவேண்டும் என்று முக்கண்ணனான ருத்ரனும், ஞானம் போன்ற குணங்களையுடைய ப்ரஹ்மாவும் தேவர்களின் தலைவனான இந்த்ரனும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அஜ்ஞானம் முதலிய தமஸ்ஸுக்களை போக்கக்கடவரான ரிஷிகளும் ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்வாமியின் இருப்பிடமான திருமலையாய் எல்லா விதமான கலக்கங்களையும் போக்கக்கூடிய மிகவும் இனிமையான சிறந்த மலை திருமாலிருஞ்சோலை மலையே.

எட்டாம் பாசுரம். திருமலை தொடக்கமான திவ்யதேசங்களைப்போலே என்னுடைய எல்லா அவயவங்களையும் விரும்பி ஒரு நொடியும் பிரியாமல் இருக்கிறான். இப்படியும் ஒருவனா! என்று ஆச்சர்யப்படுகிறார்.

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத்தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே

திருமாலிருஞ்சோலை மலையையும் திருப்பாற்கடலையும் என் தலையையும், திருமகள் கேள்வனானவனின் பரமபதத்தையும் குளிர்ந்த திருவேங்கடம் என்கிற பெரிய திருமலையையும் என் சரீரத்தையும் கடத்தற்கரியதாய் மிகப் பெரியதாய் ஆச்சர்யமான ப்ரக்ருதியோடே சேர்ந்து படைக்கப்பட்ட என் ஆத்மாவையும் மனஸ்ஸையும் வாக்கையும் செயல்களையும் ஒரு க்ஷணத்தில் ஒரு சிறு பகுதியும் பிரியாமல் இருக்கிறான். என்னைப் பெறுவதற்காக காலத்துக்கு உட்பட்ட எல்லா பொருள்களுக்கும் காரணனான ஒருவனாயிருக்கிறானே!

ஒன்பதாம் பாசுரம். ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குக் காரணமான ஸர்வேச்வரன் தம்முடைய சரீரம் முதலியவற்றை விரும்பியதைக் கண்டு, அத்தை அவன் விடும்படிக்கு, தன் திருவுள்ளத்தைக் குறித்து “அவன் எழுந்தருளி இருக்கும் திருமலையை விடாமல் வணங்கு” என்று அருளிச்செய்கிறார்.

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன் உள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கை விடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே

காலத்துக்கு உட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் தனிக் காரணன் என்று சொல்லப்பட்ட, தனித்துவம் வாய்ந்தவனாய், எல்லா லோகங்களையும் எல்லாக் காலத்திலும் தன் ஸங்கல்பத்தின் சிறு பகுதிக்குள் படைத்து, காத்து, அழித்து, இதுவே தொழிலாகச் செய்யும் எல்லைகாணமுடியாத தன்மையை உடையவனாய் இந்த உறவாலே எனக்கு ஸ்வாமியானவனின் அழகிய குளிர்ந்த திருமாலிருஞ்சோலையை, மனமே! நமக்கு த்யாஜ்யமான தேஹம் ப்ராணன் முதலியவை மங்கும்படி, நெருங்கி அடையப்பாராய். இதை அவன் நம் கார்யம் செய்து முடிக்கும்வரை கைவிடாதே. இத்தாலே நீ வாழ்ச்சியடைய வேண்டும்.

பத்தாம் பாசுரம். இப்படித் தான் திருமலையை அடைந்திருந்தும் அவனுடைய ஆசையை நிவர்த்தி செய்வதற்காக ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதமான பொருள்களின் தாழ்ச்சியைக் காட்டி, இப்படிப்பட்ட மாயை நசிக்கும்படி அருளவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.

மங்கவொட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே! யானே நீயாகி என்னை அளித்தானே!
பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணி என்போல்வார்க்கு ஸ்வாமியானவனாய் நானே என் குறைகளைப் போக்கிக்கொள்ளுமாபோலே வேறுபாடற நீதானேயாகி என்னை ரக்ஷித்தவனே! கிளர்ந்து புலப்படும் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களும், அதிலே ஈடுபடும் கண் முதலிய ஐந்து இந்த்ரியங்களும், அவற்றில் ஈடுபடுவதற்கு உதவும் ஐந்து கர்மேந்த்ரியங்களும், பஞ்ச பூதங்களும், ஸம்ஸாரத்தில் ஜீவனோடு சேர்ந்து படைக்கப்படும் மூலப்ரக்ருதியும், மஹான் என்கிற தத்வமும், அஹங்காரம் என்கிற தத்வமும், மனஸ்ஸும் ஆகிற உன்னுடைய மிகவும் ஆச்சர்யமான ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதங்களான இவை எல்லாம் மங்கும்படி இசைந்து அருள வேண்டும்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக இவர் ஆசைப்பட்டபடி ஈச்வரன் விரோதிகளை போக்குவதில் ஈடுபட்டதைச் சொல்லி, அதுவே பலமாக அருளிச்செய்கிறார்.

மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்கத்
தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே ஆனானைத்
தேனாங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மானாங்காரத்திவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே

மஹத், அஹங்காரம், மனம் ஆகியவை மூலமாக இருக்கும் இந்த சரீரத்துடனான ஸம்பந்தம் நசிக்கும்படியும் மிகவும் வலிய ஐந்து இந்த்ரியங்கள் மங்கும்படியும் தானே பெரிய அபிமானத்துடன் புகுந்து என் ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகள் எல்லாம் தன் அதீனத்தில் இருக்கும்படி ஆனவனை, வண்டுகளின் செருக்கை உடைய பொழிலை உடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் திருமாலிருஞ்சோலை மலைக்கேயான இந்தப் பத்துப் பாசுரங்களும் மஹத் அஹங்காரம் மனம் ஆகியவற்றால் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களின் நிவ்ருத்தியில் நோக்காக இருக்கும். அவை தன்னடையே கழியும் என்று கருத்து.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org