ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ச்லோகம் 20
विज्न्यपनं यदिदमद्द्य तु मामकीनम् अङ्गिकुरुष्व यतिराज! दयाम्बुराशे! ।
अग्न्योSयमात्मगुणलेशविवर्जितश्च तमादन्नयशरणो भवतीति मत्वा ॥ (20)
விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா || (20)
பதவுரை:- தயா அம்புராஸே – பிறர்துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல்போன்ற, யதிராஜ – யதிராஜரே, அத்ய – இப்போது, மாமகீநம் – அடியேனுடையதான, யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ, இதம் – இந்த விண்ணப்பத்தை, ‘அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன், ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ் ச – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன், தஸ்மாத் – ஆகையால், அநந்ய ஸரண: பவதி – நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான், இதி மத்வா – என்று நினைத்தருளி, அங்கீகுருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.
இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார். இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது. ‘தயைகஸிந்தோ’ (6), ‘ராமாநுஜார்ய கருணைவ து’ (14), ‘யதீந்த்ர கருணைவ து’ (15), ‘பவத்தயயா’ (16), ‘கருணாபரிணாம’ (19), ‘தயாம்புராஸே’ (20) என்று தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால், ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.
இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள ‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால், இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள ‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற பகுதி நினைவு படுத்தப் பெற்றதும், இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள ‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில் அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால், இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள ‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது. ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.
archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org