பூர்வ திநசர்யை – 10 – ஸ்மயமாந

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 10-ஆம் பாசுரம்

स्मयमानमुखाम्भोजं दयमानदृगञ्चलम्
मयि प्रसादप्रवणं मधुरोदारभाषणम्

ஸ்மயமாநமுகாம்போஜம் தயமாநத்ருகஞ்சலம் |
மயி ப்ரஸாதப்ரவணம் மதுரோதாரபாஷணம் ||

பதவுரை:- ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும், தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும், மயி – இத்தனை நாள்கள் தம்திறத்தில் பாராமுகம் காட்டியிருந்த அடியேனிடத்தில், ப்ரஸாத ப்ரவணம் – அருள்புரிவதில் பற்றுடையவராய், மதுர உதார பாஷணம் – செவிக்கினியதாய் ஆழ்ந்த பொருள்களைக் கொண்ட வார்த்தைகளையுடையவருமாகிய….

கருத்துரை:- அதரத்தில் குடிகொண்ட மந்தஹாஸத்தையும் அதனுடன் கூடிய கடைக்கண் பார்வையையும் அவ்விரண்டோடு ஒற்றுமை கொண்ட அமுதமொழிகளையும் அம்மூன்றினாலும்

ஊகிக்கத்தக்க – அவர் தம்மிடம் புரியும் அநுக்ரஹத்தையும் வருணிக்கிறார். இது தன்னால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வ த்யாநத்தின் தொடர்ச்சியால் தமக்கு மோக்ஷலாபம் உண்டாகிவிட்டதாக நினைத்துத் தமது விருப்பம் நிறைவேறிய ஸந்தோஷத்தினால் ஸதா மந்தஹாஸமுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

அதுவேயன்றி இம்மந்தஹாஸத்தை – மேற்கூறப்படும் மதுரவார்த்தைக்கும் பூர்வாங்கமாகவும் கூறலாம்; ஸந்தோஷத்தை புன்சிரிப்பினால் தெரிவித்துப் பின்பல்லவோ மஹான்கள் மதுரமாக பேசுவது. இனி, தயையாவது பிறர் துன்பங்கண்டு இரங்குதல். ‘நாம் இங்ஙனம் த்வயார்த்த தத்வத்யானத்தினால் அடையும் இன்பம் இவ்வுலகோர்க்குக் கிடைக்கவில்லையே, ஐயோ இவர்கள் ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்களே’ என்று உலகோர் துன்பங்கண்டு மாமுனிகள் துன்பப்படுகிறாரென்க. இதுவேயன்றி, மேற்கூறப்படுகின்ற மதுரபாஷணத்திற்கும் இத்தகைய காரணமாகலாம்; தயையோடல்லவா ஆசார்யர்கள் ஸிஷ்யர்களோடு மதுரமாகப் பேசுவது. இந்த ஸந்தோஷமும் தயையும் மிகவும் முக்யமான தருமங்களாகும். ‘ஸத்யம் ஸுத்தி தயை மனங்கலங்காமை பொறுமை ஸந்தோஷம் இவை அனைவர்க்கும் அவசியமாக இருக்க வேண்டிய தருமங்கள்’ என்றுள்ள பரத்வாஜ பரிசிஷ்ட வசநம் இங்கு நினைக்கத்தக்கதாகும். ‘மயி ப்ரஸாத ப்ரவணம்’ என்பதற்கு – ‘அடியேனுக்கு அருள் செய்வதில் பற்றுடையவர்’ என்று முற்கூறிய பொருளேயன்றி, ‘அடியேன் முன்பு பராமுகமாக இருந்ததனால் உண்டான மனக்கலக்கம் நீங்கப்பெற்று, அதற்கு நேர் முரணாக மனம் தெளிந்திருக்குமிருப்பில் பற்றுடையவராயினர் என்ற பொருளும் கூறலாகும். மதுரமாகவும், அர்த்தகாம்பீரியமுடையதாகவும் பேச வேண்டும். ‘மதுரமான – செவிக்கினிய வார்த்தையைப் பேச வேண்டும்’ என்று மேதாதிதியும், ‘ஆழ்ந்த பொருளோடு கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும்’ என்று சாண்டில்யரும் கூறியது காண்க. இங்கே பேச்சுக்கு ஆழ்ந்த பொருளுடைமையாவது – எந்த வார்த்தை பேசினாலும் முற்கூறிய த்வயத்தின் ஆழ்ந்த கருத்திலேயே நோக்குடைமையாகும். (10)

 

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org

srIvaishNava education/kids portal –
http://pillai.koyil.org

Leave a Comment