ஞான ஸாரம் 19- நல்ல புதல்வர்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                   19-ஆம் பாட்டு:

முன்னுரை:-

புதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச் சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடுபேறு எளிதாகும் என்று கூறப்படுகிறது.

lord-vishnu-in-anantashayan-AE23_l

“நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவையனைத்தும் – அல்லலெனத்
தோற்றி எரி தீயிற் சுடுமேல் அவர்க்கெளிதாம்
ஏற்றரும் வைகுந்தத் திருப்பு”

பதவுரை:-

நல்ல புதல்வர் நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள் நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம் பொன் விளையும் பூமி
மாடு வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவையனைத்தும் இவையெல்லாம்
அல்லலென துன்பம் தருவன என்று
தோன்றி மனதுக்குத் தோன்றி
எரிதீயில் கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் மிக எளிதாகும்

விளக்கவுரை:-

நல்ல புதல்வர் – பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்கள் அதாவது குணக்கேடராய் துன்பம் தருபவராய் இல்லாமல் தங்கள் பிரிவு பொறுக்க மாட்டாத நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள் என்று பொருள்.

மனையாள் – நல்ல என்று மேற்கூறிய அடைமொழியை இங்கு கூட்டிக் கொள்க “நல்ல மனையாள்” என்றவாறு நற்குணமுடையவளாய்

“மனைத்தக்க மாண்புடையளாகித் தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (திருக்குறள்) என்றபடியும், அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறந்தோர்க்கெதிர்தலும், தொல்லோர் மரபில் விருந்தெதிர் கோடலும் (சிலம்பு) என்ற வாய்மொழிக்கிணங்க துறந்தார்ப் பேணலும், விருந்தயர்தலும் வறியார் மாட்டு அருளுடைமையும் முதலிய  நற்குணங்களும், வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், சமையல் தொழிலில் வண்மையும், தான, தர்மங்கள் செய்தலும் முதலிய நற்குண செய்கைகள் பொருந்திய மற்றும் கணவன் கருத்தறிந்து ஒழுகும் மனையாள்.

நவையில் கிளை – நவை – குற்றம், இல் – இல்லாத, கிளை – உறவு

அதாவது, பெயரளவில் உறவினராயும் செயல்பாட்டில் பகைவராயும் இல்லாமல் அவர்களோடு உடனுறைதல் தகும் என்று ஆசைப்படத்தக்க குற்றமற்ற உறவினர்கள் (இல்லம்). (கீழ்ச்சொன்ன “நல்ல” என்ற அடைமொழியை இது முதலாக மேல் வருவனவற்றோடும் கூட்டுக.)

நல்ல இல்லமாவது – கண்ட கண்ட இடமெங்கும் இடிபாடு உடையதாய் குடியிருப்புக்குத் தகுதியற்றதாய் இல்லாமல் பல நிலைகள் கொண்ட இடங்களும் உப்பரிகைகளும் கூடிய மிக அழகான குடியிருப்பு.

நல்ல நிலமாவது – உவர் நிறைந்ததாய் ஒரு விதையும் முளைக்காத நிலமாய் இல்லாமல் உரமிடுதலின்றி பயிர் தானே வளர்ந்து ஒன்றுக்கு நூறாக கட்டுகலம் மிக விளையக்கூடிய நல்ல நிலங்கள் ‘விளைவதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று’ (குறள்) என்று கூறியது போன்ற நிலங்கள். விடிந்தபோது நாற்று நட்டு மாலைப்போது வந்து பார்த்தால் கைகவித்துப் பார்க்கும்படி பயிர்களை விளைவிக்கும் நல்ல நிலங்கள். ஒரு நாற்று நிலம் முழுதும் பனைத்தெழும் விளைநிலங்கள் ‘செய் கொள் செந்நெல் கரும்பொடோங்கு’ ‘புரவி முகம் செய்து செந்நெல்’ என்று கட்டுரைக்கும்படி வளங்கொழிக்கும் நன்செய், புன்செய் நிலங்கள்.

நல்ல மாடாவது – கொடுவையாய் (கொடூரமாய்) அதாவது கட்டவும் பிடிக்கவும் முடியாமல் கொண்டியிலே மேய்ந்து திரிவதல்லாமல் சிறு குழந்தைகளுக்கும் கூடி அடிக்கவும், கட்டவும், பிடிக்கும் வண்ணம் தன்னைக் காட்டிக் கொண்டு நிற்கும் பசுக்கள், குடம் குடமாய்ப் பால் சுரக்கும் பசுக்கள்.

இவையனைத்தும் – இவ்வாறு ஒரொன்றே மிகவும் வசீகரிக்கத் தகுந்ததாய் உலகோர்க்கு இன்பம் தருவன எல்லாம் கீழே சொன்னவையெல்லாம்.

அல்லலெனத் தோன்றி – துன்பம் தருபவையே என்று மனதுக்குத் தோன்றி, இங்கு ‘அல்லல்’ என்ற சொல்லுக்குத் துன்பம் என்ற பொருளாகிலும் துன்பம் தருபவை என்று பொருள் கொள்ளவேணும்.

எரிதீயிர் சுடுமேல் – கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்புப் போலே எரிச்சலை உண்டு பண்ணுமாகில்

அவர்க்கெளிதாம் ஏற்றரும் வைகுந்தத் திருப்பு – அந்நிலை பிறந்தவர்க்கு அதாவது பக்குவப் பட்டவர்களுக்கு (சமைந்தவர்களுக்கு) தன் முயற்சியால் அடைய முடியாததான அதாவது {இறைவன் அருளிலே பெறக் கூடியதான} அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடான பரமபதத்திலே போய் அங்கு அடியார்கள் குழாங்களுடன் கூடியிருக்கும் பேறு எளியதாகும். அதாவது கீழ்ச் சொன்ன பக்குவம் பிறந்தவர்களுக்கு இறைவன் தானே வீடு பேறு அளிப்பான் என்பது கருத்து.

Leave a Comment