ஞான ஸாரம் 15- குடியும் குலமும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                             15-ஆம் பாட்டு:

முன்னுரை:

எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன் இப்பாடல் நிலை நிறுத்துகிறது. “திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்களுக்கு, ஞானம் பிறப்பதற்கு முன்பு அடையாளமாகக் குறிப்பிட்ட ஊர் பெயர், குலப்பெயர், மற்றும் சிறப்புடைய அடையாளங்கள் எல்லாம் ஞானம் பிறந்த பிறகு அவன் திருவடிகளேயாகும் என்று கூறப்படுகிறது.

god,hindu,mahavishnu-8af75d30e076a9163fee484b74963508_h

“குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவனடியே யாகும் – படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர் கலியைச் சேர்ந்திட மாய்ந் தற்று”

பதவுரை:

குடியும் பிறந்த ஊரும்
குலமும் பிறந்த கோத்திரமும்
எல்லாம் மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு தொண்டர்களுக்கு
அவனடியே யாகும் இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்

இதற்கு எடுத்துக்காட்டு

படியின்மேல் பூமியில்
நீர்கெழுவும் நீர் நிறைந்த
ஆறுகளின் நதிகளுடைய
பேரும் கங்கை முதலிய பெயரும்
நிறமும் சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி சமுத்திரத்தை
சேர்ந்து கலந்து
மாய்ந்திடும் அற்று அழிந்து போவது போன்று

விளக்கவுரை:

(குடியும்குலமுமெல்லாம்) “சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன்” என்னும், புறநானூற்றுப் பாடலிலும்

“வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற
விறல் மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச் சோழன்”    -என்றும்

“இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன்”     -என்றும் திருமங்கையாழ்வார் பாடல்களிலும் வரும் குடி, குலம், கோத்திரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் சொல்லியிருப்பனவற்றைக் காணலாம்.

குடி – பிறந்த கிராமம் அல்லது ஊர்

குலம் – கோத்திரம் எல்லாம் என்றது மற்றும் அடையாளமாகச் சொல்லப்படுபவை.

கோகனகை கேள்வன் அடியார்க்கு – திருமால் அடியார்களுக்கு, கோகனகம் – தாமரை கோகனகை – தாமரையாள், கேள்வன் – நாயகன், திருவின் மணாளன் என்று பொருள். இப்படிப்பட்ட திருவின் நாயகனான இறைவன் திருவடிகளில் அடிமையே. அதாவது திருமால் அடியார் என்பதையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்க்கு.

அவனடியே யாகும் – அதாவது அடியவராவதற்கு முன்பு குடி, குலம், கோத்திரம், சூத்திரம் முதலிய காரணங்களைப் பற்றி வந்த அடையாளப் பெயர்கள் எல்லாம் அடியரான பிறகு அழிந்து போய், திருமால் அடியார் என்ற ஒரு பெயரே நிலைத்து நிற்கும் என்பதாம். இறைவன் திருவடி உறவையே அடையாளமாய்க் கொண்டவராய் அதைப்பற்றியே ‘திருமாலடியார்’ என்று அழைக்கப்படுவார் என்றதாயிற்று. இதற்குச் சரியான உதாரணம் மேலே சொல்லப்படுகிறது.

படியின் மேல் – பூமியின் மேல்

நீர் கெழுவும் ஆறுகளின் – நீர் நிறைதலையுடைய நதிகளின் பேரும் நிறமும் எல்லாம் அதாவது கங்கை, யமுனை முதலிய பெயர்களும், செம்மை, கருமை, வெண்மை முதலிய நிறங்கள் எல்லாம் என்றவாறு.

ஆர்கலியைச் சேர்ந்து – சமுத்திரத்தைச் சேர்ந்து கலந்தபின்

மாய்ந்திடும் அற்று – அழிந்து போவது போன்று

அதாவது அடியவராவதற்கு முன்புள்ள குடி, குலம் முதலிய அனைத்தும் அடியவரான பிறகு மறைந்து போய்விடும். இது எது போன்றது எனில், பூமியில் நீர் நிறைந்து பெருகும் ஆறுகளின் பெயர்களும் நிறங்களும் சமுத்திரத்தில் கலந்து காணாமல் போவது போன்றதாகும். ஆகவே நிலை நில்லாது மாயும் சாதி, குலம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென்றும் நிலையான இறைவன் அடியராம் தன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும்.

(அடியராம் தன்மை) – எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானது என்றும் உணர வேண்டும். இவ்வுணர்வினால் வேற்று மனப்பான்மைகள் ஒழியும் திருமாலடியார் என்னும் உணர்வு உண்டாகும் என்பதாம்.

Leave a Comment